உ
சிவமயம்
திருமூலர் வரலாறு
செந்தமிழ்ச்
சிவாகமம்:
`சிவபூமி` எனப்
போற்றப் பெறுஞ் சிறப்புவாய்ந்த நம் நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாகத்
திகழ்வது; சைவ
சமயமாகும். உலகமக்கள் உள்ளத்திலே தெய்வம் உண்டு என்னும்
தெளிவினை நல்கி அன்பு நெறியில் ஒழுகப்பணித்து அறிவு நெறியை வளர்ப்பன
தெய்வநெறிச் சிவம் பெருக்கும் சைவ சமய அருளாசிரியர்கள் அருளிய பன்னிரு
திருமுறைகளாகும். திருமுறைப் பனுவலாகிய அருள் நூல்களுள் பத்தாம் திருமுறையாகத்
திகழ்வது, தமிழ்
மூவாயி ரமாகிய திருமந்திரமாகும்.
திருமந்திரமாலை என்னும்
இத்திருமுறை, சைவசித்தாந்த
சாத்திரமாகவும் இறைவன்
திருவருளைப் போற்றிப் பரவும்
தோத்திர மாகவும் விளங்குந் தனிச் சிறப்புடையது; வேத
நெறியாகிய உலகியலொழுக்கத்தையும் மிகு சைவத் துறையாகிய சிவாகமவுண்மைகளையும்
இனிய தமிழால் விரித்து விளக்குவது. உலக மக்கள் எல்லோரும்
பொதுவாக மேற்கொள்ளுதற்குரிய நல் வாழ்க்கை முறையினையும் சிவநெறிச் செல்வர்களாற்
சிறப்பாக மேற் கொள்ளத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருங்கே விளக்குவதாய்ச்
சைவசித்தாந்த மெய்ந்நூற் பொருளை அறிவுறுத்தும் செந்தமிழ்ச் சிவாகமமாகத்
திகழ்வது இத்திருமந்திரமேயாகும்.
திருத்தொண்டர்
திருவந்தாதியில்:
திருமந்திர மாலையாகிய இத்திருவருட் பனுவலை அருளிச்
செய்தவர், இறைவனருளால் எண்வகைச்
சித்திகளும் பெற்றுச் சிவமே பெறுந்திருவினராய் எல்லாவுயிர்களிடத்தும்
அருளுடையராய்ப் பன்னெடுங்காலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து
`நான்
பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`
என்னும் நல்ல குறிக்கோளுடைய
ராய்த் தாமுணர்ந்த ஞானப்பொருளைத் தண்ணார் தமிழால் உலகத்தார்க்கு
வழங்கியருளிய திருமூல நாயனாராவர். இவ்வாசிரியரை.
``நம்பிரான்
திருமூலன் அடியார்க்கும் அடியேன்`
-தி.7 ப.35 பா.5
என
நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப்
போற்றியுள்ளார். செந்தமிழ் நாட்டின் சிறந்த சிவயோகியாய் முக்காலமுணர்ந்த
அறிவராகிய திருமூலநாயனாரது வரலாறு,
திருத்தொண்டத் தொகையின் வகையாகிய
(தி.11) திருத்தொண்டர்
திருவந்தாதியிற் சுருக்கமாகவும் விரிநூலாகிய
திருத்தொண்டர் புராணத்தில் விரிவாகவும் விளக்கப் பெற்றுள்ளது. நம்பியாண்டார்
நம்பிகள் தாம் இயற்றிய (தி.11)
திருத்தொண்டர் திருவந்தாதியில்,
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படி
யேபர விட்டெ னுச்சி
அடிமன்ன வைத்த பிரான் மூல
னாகிய அங்கணனே. -தி.11 ப.33 பா.36
எனவரும் திருப்பாடலில் திருமூல நாயனாரது வரலாற்றை
வகுத்துக் கூறியுள்ளார்.
``நற்குடிகள் நிலைபெற்று வாழும்
சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப்போனாகிய இடையனது
உடம்பிற் புகுந்து, சென்னியிலே
நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனை யணிந்த
சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறியவண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே
பரவிப் போற்றி எனது தலையிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய
பெரியோன் திருமூலன் என்னும் பெயரையுடைய அருளாளனாவன்`` என்பது இத்
திருப்பாடலின் பொருளாகும். சிவயோகியராகிய சித்தர் புகுந்திருந்த உடம்பு சாத்தனூரில்
ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் இடைய னுடைய உடம்பு என்பதும், இறைவன்
அருள்வழி அவ்வுடம்பிற் புகுந்த சிவயோகியார் ஞான நிறைவுடைய முழுத் தமிழின்படியும்
வேதத்தின் சொற்படியும் பிறைமுடிப் பெருமானாகிய சிவபெரு மானைப்
பரவிப் போற்றிச் சிவாகம வேதப் பொருளைச் செந்தமிழால் அருளிச் செய் தார்
என்பதும் இத் திருவந்தாதியால் இனிது புலனாதல் காணலாம்.
திருத்தொண்டர்
புராணத்தில்:
அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள், திருத்
தொண்டத் தொகையின் விரியாகத்
தாம் இயற்றிய திருத்தொண்டர்
புராணத்திலே திருமூல நாயனாரது வரலாற்றினை இருபத்தெட்டுப்
பாடல்களால் விரித்துக் கூறியுள்ளார்.
தென்னாடு
வருகை:
திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற்
பெருங் காவல் பூண்டவர்
திருநந்திதேவர். அவரது
திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர்
அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு
நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவ யோகியார், பொதியமலையை
அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத் தினின்றும் புறப்பட்டுத்
தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம்
(நேபாளம்), அவிமுத்தம்
(காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு
ஆகிய திருத் தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார்.
அங்குத் திருவேகம் பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார்.
கல்வியிற் கரையிலாத காஞ்சி நகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர்
பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதி கையை யடைந்து திரிபுரமெரித்த
விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும்
திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய
பெரும் பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப்
போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய் யுணர்வினால்
சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால்
தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.
சாத்தனூரில்:
தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து
புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார்.
உமையம்மையார் பசுவின்
கன்றாக இருந்து இறைவனை வழிபாடு
செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து மன்னுயிர்க்கு
அருள் புரியுந் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை
வலம் வந்து வழித்துணை மருந்தாகிய மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார்.
அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே
தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறையீசர்பால்
ஆராத காதலையுடைய சிவயோகியார்,
அத்தலத்தை அரிதின் நீங்கிச்
செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே
மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள்
வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன்
என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடு பட்டவன், தான்
எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால்
அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்துகொள்ள உயிர்நீங்க அங்கு நிலத்தில்
வீழ்ந்து இறந்து வெற்றுடலாய்க் கிடந்தான். அவனது உயிர்பிரியவே அவனால்
அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கிநின்று
மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.
திருமூலராதல்:
ஆக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார்.
அருளாளராகிய அவருள்ளத்திலே
`பசுக்கள் உற்ற துயரத்தை
நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால்
தோன்றியது, `இந்த
ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம்
நீங்கா`` எனத்
தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய
ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்றுணர்ந்த பரகாயப்
பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை
ஆயனாகிய மூலனது உடம்பிற் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய்
எழுந்தார். அவர் ஆயனுடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள்
யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப
நக்கிமோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய
இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள்
விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார்.
வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின்
துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக்
குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.
ஊரவர்
உண்மை உணர்தல்:
அந்நிலையில்
கதிரவன் மேற்குத் திசையை யணுக,
மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம்
கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும்
வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள்
தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில்
தனித்து நின்றார்.
அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய
மனைவி ``என்
கணவர் பொழுது சென்றும் வரவில்லையே,
அவர்க்கு என்ன நேர்ந்ததோ`` என்று
அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே
செல்பவள் திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது
உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `இவர்க்கு
ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்` என
எண்ணினாள்; அவரைத்
தளர்ச்சியின்றித் தன்
வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன்
அவருடம்பைத் தொடு தற்கு
நெருங்கினாள். அதுகண்ட
திருமூலராகிய சிவயோகியார் அவர் தம்மைத் தீண்டாதபடி தடுத்து
நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது
தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். ``நும்பால்
அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப்
பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்``
என்று புலம்பி வாட்ட முற்றாள்.
நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப்பார்த்து, ``நீ
எண்ணியபடி உனக்கு
என்னுடன் எத்தகைய உறவும் இல்லை`
என்று சொல்லிவிட்டு
அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவ யோகத்தில்
அமர்ந்திருந்தார்.
தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக்
கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும்
தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த்
துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து
தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை
அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். `இது
பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த
விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவே களைந்து தெளிவுபெற்ற
நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார்.
இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்` எனத் தெளிந்தார்கள்.
`இவர்
இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர்
திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல
முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி
உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்` என
மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத்
துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல்கூறி
வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
திருவாவடுதுறையில்
சிவயோகம்:
சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த
திருமூலர். யோகுகலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த
வழியினையே நோக்கிச் சென்று
தமது உடம்பினை மறைத்து வைத்த
இடத்தை அடைந்து தம் உடம்பைத்
தேடிப்பார்த்தார். வைத்த
இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன
செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.
`சிவபெருமான் உயிர்கள் பால்வைத்த
பெருங்கருணை யினாலே அருளிச் செய்த சிவாகமங்களின்
அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே
வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை
இறைவர் மறைப்பித்தருளினார்`
என்ற உண்மையினைத் திருமூலர்
தமது முற்றுணர்வினால்
தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து
வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று
அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார், அவர்களெல்லோரும்
தம்மை விட்டு
நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித்
திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார்; அங்கு
எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத் திருக்கோயிலின்
மேற்றிசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில்
சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம்
சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.
திருமந்திரம் அருளிச் செய்தல் இங்ஙனம்
சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார். ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய
தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு ஞானம்
யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து
ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய
செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,
ஒன்றவன் தானே,
இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து
வென்றனன்,
ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்
சென்றனன்,
தானிருந் தானுணர்ந் தெட்டே.-தி.10 பாயி.
பா.2
என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு
ஒரு திருப்பாடலாக மூவாயிரம்
ஆண்டுகள் சிவயோகத்
தமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு
தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார்
சிவபெருமானது திரு வருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில்
என்றும் பிரியாதுறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனி திருந்தார். திருமூலர்
அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம்
மலர்ந்த மொழிமாலையாகத் திகழ் கின்றது`
எனச் சேக்கிழார் பெருமான்
திருமூலநாயனார் வரலாற் றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.
திருமூலரது
முன்னை நிலை:
இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார்
விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில்
திருமூலர் தம் வரலாறு கூறும்
முறையில் அருளிச் செய்த
திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன்
என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான்
திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறையோகிகளுள்
ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால்
மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது
உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து,
திருமூலர் என்னும் பெயர் பெற்றுத்
திருமந்திர மாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார்
நம்பியும் சேக்கிழா ரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர
நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன்
என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும்.
நந்தி தேவர் பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம்முன்னை
நிலையில் அவர் பிறந்த ஊர்,
குடி, பேர்
முதலியவற்றை அறிந்து
கொள்ளுதற்குரிய வரலாற்றுச்
சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால்,
அவரது வரலாறு
கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர்
என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய
வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது.
திருமந்திரத்தில்
அகச்சான்று - நந்திதேவர் அருள்:
திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்திதேவர்
பால் ஞான நூற் பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது,
நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவர்
என்னோ டெண்மரு மாமே. -தி.10
பா.6 எனவரும்
திருமூலர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.
சிவயோக
சித்தர்:
சிவயோகியார் திருமூலராவதற்கு முன் அட்டமாசித்திகளும்
கைவரப்பெற்றவர் என்பதும்,
பசுக்களின் துயரத்தினை நீக்கும்
பொருட்டே இறைவன் அருளின்வழி தம் உடம்பினை
ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்து
பசுக்களைச் சாத்தனூரிற் செலுத்தி மீண்டுவந்து தம் பழையவுடம் பினைத்
தேடிப் பார்த்து இறைவனருளால் அவ்வுடம்பு மறைந்தொழிய அதனைக் காணாதவராய், தமது
முன்னைய உடம்பினாற் பயனில்லை யெனவுணர்ந்து இறைவன் திருக்குறிப்பின்
வண்ணம் மூலன் உடம்பிலேயே நெடுங்காலம் விரும்பித் தங்கியிருந்தனர்
என்பதும்,
``அரிய
தெனக்கில்லை அட்டமாசித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே`` -தி.10 பா.626
எனவும்
நந்தியருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாஅது என்செயும் நாட்டினில்
நந்திவழிகாட்ட நானிருந் தேனே. -தி.10 பா.7
எனவரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு விளங்கும்.
மேற்குறித்த திருமந்திரம் 7ஆம் பாடலில் `நந்தி அருளா அது`
எனத் திருமூலர் சுட்டியது, இறைவனால்
மறைக்கப்பட்ட தமது பழைய உடம்பினை. நந்தியால் அருளப்படாத அப்பழைய உடம்பு
நாட்டிலுள்ளோர்க்கு என்ன பயனைத் தரவல்லது? ஒரு பயனையுந்
தாராது என அதனை, வெறுத்து
விடும் நிலையில் `நந்தி
அருளா அது என்செயும் நாட்டினில்`
(தி.10 பா.7) என
வினவிய குறிப்பு ஆழ்ந்துணரத் தகுவதாகும்.
திருவருட்
செயல்:
இவ்வாறு இறைவன் தமது பழைய உடம்பினை மறைத்து மூலன்
என்னும் ஆயனுடம்பிற்
புகச்செய்தருளிய இப்படைப்புத்
தொழில், அம்முதல்வனது
பொருள்சேர் புகழ்த்திறங்களைத் தமிழ்ப் பாக்களால் நன்றாகப்
புனைந்து போற்றுதற்கேற்ற
நலந்தரும் வாழ் வினை நல்கியதென
வுணர்ந்த சிவயோகியார், பரகாயப் பிரவேசம் என்னும்
சித்தித் திறத்தால் தாம் புகுந்திருந்த மூலனுடம்பினை ``எனது முன்னைத்
தவத்தின் பயனாக எனக்கு இறைவனால் நன்றாகத் திருத்தமுறச் செய்தளிக்கப்பட்ட
நல்ல படைப்பு இதுவாகும்``
எனக் கொண்டு போற்றி மகிழ்ந்தனர் என்பது,
பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20
எனவரும் அவரது வாய்மொழியால் இனிது விளங்கும்.
ஆவடுதுறையில்
அருள்யோகம்:
மூலனுடம்பிற் புக்க சிவயோகியார், திருவாவடுதுறைத்
திருக்கோயிலை வழிபட்டு
அங்குள்ள சிவபோதியாகிய
அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் இறைவனை ஞானத்தால்
தொழுது சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது,
சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18
எனவும்,
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே. -தி.10 பா.19
எனவும்,
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
நானு மிருந்தேன்நற் போதியின் கீழே. -தி.10 பா.21
எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது புலனாம். இத்திருப்பாடலில்
`நந்திநகர்` என்றது
திருவாவடு துறையினை.
திருமந்திரமாலை
என்னும் பெயர்:
சிவபெருமான் திருவடிகளைச் சென்னியிற் கொண்டு
அம்முதல்வன் அருளிய சிவாகமப்
பொருளை விரித்துரைக்க எண்ணிய
திருமூலநாயனார் சிவனருளைச் சிந்தித்திருந்து தமிழ்
மூவாயிரமாகிய மந்திரப்பனுவலை அருளிச் செய்தார் என்பதும், இவ்வருள் நூலுக்குத்
திருமூலர் இட்ட பெயர் திருமந்திர மாலை என்பதும்,
நந்தி யிணையடி நான் தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்
அந்தி மதிபுனை அரனடி நாள்தோறும்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே. -தி.10 பா.12
எனவும்,
பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. -தி.10 பா.25
எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம்.
திருக்கூத்துத்
தரிசனம்:
திருமூலர் தம்முடன் இருந்து நந்தி தேவர் பால் உபதேசம்
பெற்றவர்களாகச் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்
குமாரர் என்னும்) நந்திகள் நால்வரையும், சிவயோகமாமுனி, தில்லையில்
திருக்கூத்துத் தரிசனம் கண்ட பதஞ்சலி முனிவர், வியாக்கிர
பாத முனிவர் ஆகியவர்களையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளார் (தி.10 பா.6). இதனை
நோக்குங்கால் இவர் சிவயோக மாமுனி,
பதஞ்சலி, வியாக்கிர
பாதர் ஆகிய முனிவர்கள் காலத்தில் உடன் வாழ்ந்த சிவாகமச் செல்வர்
என்பது உய்த்துணரப்படும்.
திருமூலர் தில்லையில் திருக்கூத்துத் தரிசனங்கண்டு இவ்வுலகில்
நெடுங்காலம் இருந்தவர். இச்செய்தி,
செப்புஞ் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே. -தி.10 பா.13
எனத் திருமூலரே தமது வரலாற்றைக் குறிப்பிடுதலால் இனிது
விளங்கும்.
திருமூலர்
மரபு:
இவ்வாறு நெடுங்காலம் இந்நிலவுலகில் தங்கியிருந்ததன்
காரணம், இறைவனுடன் பிறப்பின்றி
விளங்கும் அருட் சத்தியாகிய புவனபதியென்னும் அருந்தவச் செல்வியை
வழிபட்டு அவ் வன்னையின் அருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும்
ஞான நெறியையும் நிலைபெறச் செய்து இறைவனது அருட்கூத்தினை விளக்கும்
தமிழ் வேதமாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டே என்பதனைத்
தம் மாணாக்கர்களாகிய இந்திரன்,
மாலாங்கன் ஆகியவர்களை நோக்கி அறிவுறுத்தும்
முறையில் அமைந்தன,
இருந்தவக் காரணங் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனாபதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே. -தி.10 பா.14 எனவும்,
மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே. -தி.10 பா.16
எனவும் வரும் திருமந்திரத் திருப்பாடல்களாகும்.
தேவர்க்கெல்லாம்
முதன்மை:
திருமூலரால் ஆதரிக்கப்பெற்று அவர் அருளிய திருமந்திரப்
பனுவற்பொருளை அவர்பாற் கேட்டுணர்ந்த மாணாக்கர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன்
என்னும் பெயரினராகிய எழுவர்
எனத் தெரிகிறது. இச்செய்தி,
மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே. -தி.10 பா.8
எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும்.
திருமூலர்
பெருமை:
மூலனுடம்பிற் புக்குத் திருமூலராய் எழுந்த சிவயோகியார், இறைவனருளால் சதாசிவமூர்த்தியை
ஒத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தும் முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம்
முதன்மையும் உடையவராகத் தாம் விளங்கிய திறத்தினை,
நந்தி யருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி யருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி யருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி யருளாலே நானிருந் தேனே. -தி.10 பா.29
என வரும் திருப்பாடலிற் குறித்துள்ளார்.
தமிழ்
முனிவர்:
தமிழ் முனிவராகிய அகத்தியரைக் காண விரும்பித் திருக்
கயிலாயத்தினின்றும்
தென்றிசை நோக்கிவந்த
சிவயோகியார், வட
நாட்டிற் சிவத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டு
வருபவர், தென்
னாட்டிற் காஞ்சி நகரத்தையடைந்து அங்கு வாழும் சிவயோகியர்
பலரொடும் அளவளாவினார் எனச் சேக்கிழாரடிகள் குறித்தலாலும், தமிழ் நாட்டிற்
பொதிய மலையில் தங்கிய அகத்திய முனிவரொடு பழகிய நட்பினால் அவரைக் காணப்
புறப்பட்டு வந்தமையாலும், தமிழகத்தின் தெற்கெல்லையாகிய குமரித்துறையில்
அருட்சத்தியாகிய அம்மையார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும், தம்
காலத்தில் தமிழ்நாடு ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டிருத்
தலையும், வழிப்போவார்
அச்சமின்றிச் செல்லவொண்ணாதபடி
கொங்கு நாட்டில் வழிப்பறித்
தொழில் நிகழ்தலையும் இந்நூலிற் குறித்துள்ளமையாலும்
இந்நூலாசிரியராகிய சிவயோகியார் மூல னுடம்பிற் புகுந்து திருமூலர்
என்னும் பெயரைப் பெறுவதற்கு முன்னரும் தமிழ் நாட்டிற் பல்லாண்டுகள்
வாழ்ந்த பயிற்சியுடையார் என்பது நன்கு தெளியப்படும். சிவாகமப் பொருளை
நன்றாகத் தமிழிற் செய்யும்படி இறைவன் தம்மை நன்றாகப் படைத்தனன் எனத்
தம்மைத் தமிழொடு தொடர்பு படுத்திக் கூறுதலால் அவர் தமிழ்க்குலத் தொடர் புடையவர்
என்பதும், எனவே
தென்தமிழ் நாட்டிலிருந்து வட கயிலையை அடைந்து மீண்டு
தென்னாடுபோந்து திருவாவடு துறையிற் சிவயோகத் தமர்ந்து செந்தமிழாகமத்தை
அருளிச்செய்து சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்த தமிழ்முனிவர்
திருமூல நாயனாரென்பதும் நன்கு துணியப்படும்.
திருமந்திரம்
அருளிய காலம்:
இனி, திருமூல நாயனார் இத் திருமந்திரப் பனுவலை அருளிச்
செய்த காலம் எது என்பது இங்கு ஆராய்தற்குரியதாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில்
வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் `நம்பிரான்
திருமூலன் அடியார்க்கும்
அடியேன்` (தி.7 ப.35. பா.5) எனப் போற்றியிருத்தலாலும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
ஆகிய தேவார ஆசிரியர் பாடியருளிய திருப்பதிகங்களில், திருமூலர்
அருளிய திருமந்திரப்
பாடல்களின் சொற்றொடர்களும்
பொருள் களும் எடுத்தாளப்பட்டிருத்தலாலும், திருமூல நாயனார்
காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது தெளிவு. திருமூலர்
மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தமர்ந்து ஆண்டுக் கொரு திருப்பாடலாக மூவாயிரந்
திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனப் பெரிய புராணம் கூறும். சேக்கிழாரடிகள்
கூறுமாறு திருமூலர் இந்நிலவுலகில் நெடுங்காலம் சிவ யோகத்தில்
அமர்ந்திருந்தார் என்பது,
``ஒப்பில்
எழு கோடி யுகமிருந்தேனே`
-தி.10 பா.13
எனவும்
``இருந்தேன்
இக்காயத்தே எண்ணிலி கோடி``
-தி.10 பா.19
எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு
துணியப்படும். திருமூலரால்
`இக்காயம்` எனச்
சுட்டப் பட்டது. மூலனுடைய உடம்பெனக் கொள்ளுதல் பொருந்தும்
பதினெண்
மொழிகள்:
திருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந்
நாட்டின் தாய்மொழியாகிய
தமிழும், தமிழ்
நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும்
ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப்பதினெண் மொழிகளில் வெளிவந்த
மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்து கொள்வதில் அக் காலச் சான்றோர் பலரும்
ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம்மொழிகள் யாவும் உலகமக்கள் நலன்கருதி அறமுதற்
பொருள்களையுணர்ந்து கொள்ளுதற்குரிய சாதனமாக இறைவனாற் படைத்தளிக்கப்பெற்றன.
இப்பதினெண் மொழிகளிற் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே
பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப் பெற்றனர் என்பது,
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையுங்
கண்டவர் கூறுங் கருத்தறிவா ரென்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. -தி.10 பா.111
எனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும்.
ஐந்து
தமிழ் மண்டலம்:
இவ்வாறு தமிழுடன் திசைமொழிகள் பதினேழினையும்
சேர்த்துப் பதினெண்மொழிகள் என
வழங்கும் வழக்கம் சங்க
நூல்களிற் காணப்படவில்லை. தொல்காப்பியர் காலத்தில் `வண்புகழ்
மூவர் தண் பொழில் வரைப்பு`
எனவும் சங்க காலத்தில் குணபுலம், குடபுலம், தென்புலம்
எனவும் தமிழ்நாடு மூன்று மண்டலங்களாகப் பகுக்கப் பெற்றிருந்தது.
சங்க காலத்திற்குப் பின்
தமிழ்நாடு சேர மண்டலம், பாண்டி மண்டலம்,
கொங்கு மண்டலம், சோழ
மண்டலம், தொண்டை
மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பெற்றது.
இப்பகுப்பினை, ``தமிழ்
மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்``
(தி.10 பா.1646) என
வரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார்.
தமிழ் நாடு மேற்குறித்த ஐந்து
மண்டலங்களாகப் பிரிந்து தனித் தனியாட்சியில் நிலைபெற்ற
காலம் கடைச் சங்க காலத்திற்குப்பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினை
யொட்டியதாகும்.
தில்லையிற் கூத்தப் பெருமான்
அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்குப் பொன்வேய்ந்து
அதனைப் பொன்னம்பலமாகத் திருப்பணி செய்தவன்; கி.பி.
ஐந்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் வரலாற்றாராய்ச்சியாளர்.
எனவே அவ் வேந்தனாற் பொன்
வேயப்பெற்ற திருச்சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற
பெயரால் போற்றிய திருமூல நாயனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ
அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ திருமந்திர மாலையை நிறைவு
செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் வரலாற்றாராய்ச்சிக்கு ஏற்புடையதாகும்.
திருமூல நாயனார் இந்நிலவுலகில்
மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ்
மூவாயிரமாகிய திருமந்திர மாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார்
கூறுதலால் திருமூலர் திருவாவடுதுறையிற் சிவபோதியாகிய அரசின் கீழ்ச் சிவ
யோகத்தமர்ந்த காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூ றாண்டுகள் முற்பட்டதாகும்.
எண்ணிலிகாலம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த அத்தவமுனிவர் கடைச்சங்கம்
நிலவிய காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும் தமிழ் நாட்டில் சிவயோக
நிலையில் இருந்திருத்தல் வேண்டும் எனக் கொள்ள வேண்டியுளது.
தொல்காப்பிய
உரைக் குறிப்பு:
தொல்காப்பியம் புறத்திணையியல் 20 - ஆம்
சூத்திர உரையில், ``யோகிகளாய் உபாயங்களான்
முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேய்த்து அனைநிலை
வகையோர் ஆவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத் தராவர்`` என
நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியராகிய
திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர் களையும் குறித்தமைந்துள்ளமை
இங்கு ஒப்பு நோக்கியுணரத் தகுவதாகும்.
திருமந்திரச்
சொல்லாட்சிகள்:
வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந்
துணர்ந்த சிவஞானச்
செல்வராகிய திருமூலர், தாம்
சிவயோக நிலையி லிருந்து சிந்தித்துணர்ந்த சிவாகம
உண்மைகளை இந்நாட்டவர் யாவரும் ஓதியுணர்ந்து உய்தல் வேண்டும் என்னும் அருள்நோக்குடன்
திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தமையால், அவரருளிய பாடல்களில்
சமய சாத்திரக் குறியீடுகளாகிய பதி,
பசு, பாசம்; ஆணவம், கன்மம், மாயை; சித்து, அசித்து; சரியை, கிரியை, யோகம், ஞானம்; சத்து, அசத்து, சதசத்து; வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்; நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம்; சத்தாதி
வாக்கு மனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம்
விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர்; இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி; கவச
நியாசங்கள் முத்திரை; பத்மாசனம்,
பத்திராசனம், சிங்காதனம்; பூரகம், கும்பகம், ரேசகம்
என்பன முதலாகவுள்ள வடசொற்களும் சொற்றொடர்களும்
அக்காலத்துப் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும்
இடம் பெற்றுள்ளன. தமிழ் வடமொழி என்னும் இருமொழிகளையும் கலந்து திருமூலர்
தாமே படைத்து வழங்கிய அணுவன் (தி.10
பா.2501), மாயாள்
(தி.10 பா.399), என்றாற்போலும்
புதுச் சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
வேத ஆகமங்களின் முடிந்த முடிபாகிய சைவசமயத் தத்துவம் என்ற பொருளில்
சித்தாந்தம் என்ற சொற்றொடரை முதன் முதல் வழங்கியவர் திருமூல நாயனா ரேயாவர்.
சுந்தரர் காலத்துப் பல்லவ மன்னனாகிய இரண்டாம் நரசிங்க வர்மன், தான்
காஞ்சியில் அமைத்த கைலாசநாதர் கோயிலிற் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில், சைவ
சித்தாந்த மார்க்கத்தைப் பின் பற்றியவன் எனத் தன்னைக் குறித்திருப்பது
இங்கு நோக்கத்தகுவதாகும்.
ஆரியம் தமிழ் என்னும்
இருமொழிகளையும் உணர்ந்து இமயம் முதல் குமரிவரையுள்ள எல்லாத்
தலங்களிலும் போக்கு வரவு புரிந்த தவமுனிவராகிய திருமூலர் அருளிய திருமந்திரப்
பாடல்களில் சமய சாத்திரக் குறியீடுகளாகிய வட சொற்களும் சேரி வழக்குச்
சொற்களும் விரவிக் காணப்படுதல் இயல்பே;
திருமந்திரத்தின் மொழிக்கலப்பு
ஒன்றே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மை யினைக் குறித்து ஐயுறுதற்குச்
சிறிதும் இடமில்லை.
பிற சமயத்தைப் பற்றிய
குறிப்புக்கள் திருமூலர்,
தம் நூலில் ஆறுசமயங்கள் எனவும்
அவற்றிற் பல வாகிய நூறு சமயங்கள் எனவும்
இந்நாட்டில் வழங்கும் சமயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் வேத வழக்கொடு
மாறுபட்ட புறச் சமயங்களாகிய புத்த,
சமண மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும்
புறச் சமய தூடணம் பற்றிய திருமந்திரப் பாடல்களில் இடம் பெறவில்லை.
இதனைக் கூர்ந்து நோக்குங்கால்,
புத்த சமண மதங்கள் தமிழ் நாட்டிற்
புகுந்து யாண்டும் பரவித் தமிழ் மக்களது வாழ்க்கையில் வேரூன்றி நிலைபெறுதற்கு
முன்னரேயே சிவயோகியராகிய திருமூலர்,
சிவாகமப் பொருள் குறித்த இத்திருமந்திரப்
பனுவலை இயற்றி யருளினார் என்பது இனிது விளங்கும்.
|
No comments:
Post a Comment
நன்றி