Tuesday 22 September 2015

சிலாதரும் நந்தியும்

சிலாதர் என்ற முனிவர் இந்திரனைக் குறித்துத் தவம் செய்ய, இந்திரன் தோன்ற, இறவாப் புதல்வன் ஒருவனை வேண்டினான். அதற்கு இந்திரன், பிரமனே பரார்த்தம் இரண்டும் கடந்த பின் இறப்பை அடைவதால் அத்தகைய புதல்வனைக் கோருவது சாத்தியமாகாது என்றான். பின்னர் சிலாதர் சிவனை வேண்டிப் பல்லாண்டுகள் தவம் செய்ய அவர் உடம்பிலுள்ள எலும்புகள் தவிர மற்றவை எல்லாம் அரிக்கப்பட்டன. அந்நிலையில் ஈசன் அவர் முன் தோன்றி அவர் உடலை முன்போல் ஆக்கி அவர் வேண்டுதலுக்கு இணங்க, தானே அவருடைய மகனாக நந்தி என்ற பெயரில் தோன்றுவதாகக் கூறி மறைந்தார். அடுத்து சிலாதன் ஒரு யாகம் செய்ய, அதிலிருந்து நந்தி தோன்றினார்.  அவருக்கு மூன்று கண்கள், நான்கு கரங்கள் இருந்தன. ஒரு கையில் சூலம், மற்றொன்றில் கதையும் இருந்தன. வைரக் கவசம் இருந்தது. அப்போது கந்தவர்கள் பாடினர். தேவலோக நடனமாதர்கள் நடனமாடினர். நந்தியை சிலாதர் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல, அவர் சாதாரண மானிடக் குழந்தையாக மாறிவிட்டார். ஏழாண்டு வயதிலேயே அவர் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். மித்திரர், வருணர் எனும் இரு தேவர்கள் சிலாதரைக் காண வந்தனர். நந்தியின் உடலில் எல்லா சுபலக்ஷணங்களும் காணப்படுகின்றன. எனினும் எட்டு வயதுக்குள்ளாகவே இறந்து விடுவான் என்றனர். இதுகேட்ட சிலாதர் வருந்தி அழ, அதைக் காணச் சகியாத நந்தி சிவபெருமானைப் பிரார்த்திக்கலானார். அப்போது சிவபெருமான் நந்தியின் முன் தோன்றி நந்திக்கு மரணமே இல்லை. எப்போதும் சிவனார் அருகிலேயே அவர் இருப்பார் என்று கூறி, தன் கழுத்திலிருந்து ஒரு கழுத்தணியை எடுத்து நந்தியின் கழுத்தில் அணிவித்தார். உடனே நந்தி ஒரு தெய்வ வடிவம் பெற்றார். பத்துக் கரங்கள், மூன்று கண்களுடன் தோன்றிய அவரைப் பார்வதி தன் மகனாக ஏற்றாள். அன்று முதல் அவர் கணநாதராக சிவத்தொண்டு செய்து வந்தார்

திருமாலை வென்ற மகரிஷி ததீசி


ஒரு சமயம் பிரமன் தூங்கிய போது எழுந்த தும்மலிலிந்து சுபன் தோன்றினான். அவன் இந்திரன் அருளால் வச்சிராயுதம் பெற்றும் மக்கள் நலம் காக்கும் மன்னனாகத் திகழ்ந்தான். மன்னனும், ததீசியும், ஒருநாள் பேசிக் கொண்டிருந்த போது யார் பெரியவர் என்ற போட்டி எண்ணம் தோன்ற ஒவ்வொருவரும் தானே பெரியவன் என்று வாதித்தனர். மன்னவர்களை அண்டியே மறையோர் வாழ்கிறார் என்று கூற, ததீசி முனிவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்தணனே பெரியவர்.  எம்மை நீங்கள் பூஜிக்க வேண்டும் என்று கூறி அரசன் தலையில் ஓங்கி அறைந்தார். மன்னன் மிக்க கோபத்துடன் வஜ்ஜிராயுதத்தை எடுத்து ததீசி மார்பிலே அடிக்க, அவர் ரத்தம் கக்கி துடிதுடித்து மயங்கி விழுந்தார். நினைவு திரும்பியதும் முனிவர் அரண்மனையை விட்டு வெளியேறினார். ததீசி சுக்கிராச்சாரியாரை நோக்கித் தவம் இயற்ற அவர் தோன்றினார். அவரிடம் நிகழ்ந்ததை எல்லாம் கூறி, அரசரின் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேர்வதற்கு முன் இருந்த உடலைப் பெற வேண்டினார். அப்போது சுக்கிரர் தனக்கு அச்சக்தி இல்லை என்றும் பரமனை வழிபட்டுக் கோரியதை பெறுமாறும் அறிவுறுத்தினார். ததீசி முனிவர் சிவனை வழிபட, அவர் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க முனிவர் வஜ்ஜிராயுதத்தால் ஊறு நேரா தேகத்தை அருள வேண்டினார். அவ்வாறே ஈசனார் வரம் அருள ததீசி அரசனுடைய அரண்மனைக்கு வந்தார். வந்தவர் மன்னனிடம் இப்போது உன் பலத்தைக் காட்டு என்று கூற, மன்னன் மறுபடியும் முனிவரை வஜ்ஜிராயுதத்தால் தாக்க, வஜ்ஜிராயுதம் பொடிப் பொடியாகி விட்டது. முனிவர் கேலியாகச் சிரித்து விட்டுச் சென்றார். மன்னன் திருமாலைக் குறித்து தவமியற்ற, அவரும் அவன் முன் தோன்றினார். மன்னன் நிகழ்ந்தவற்றைக் கூறி ததீசியின் உடலைச் சோதிக்க ஒரு ஆயுதம் வேண்ட, ஈசனார் திருவருள் பெற்று முனிவரைப் பணிய வைப்பது எப்படி முடியும். எனினும் தானே அந்தணனாக அங்கு வருவதாகக் கூறினார். இவ்வாறு தோன்றிய திருமாலைப் பார்த்த முனிவர், பரந்தாமா அன்பனுக்கு அருள் புரிய ஏன் இந்த வேடம்? என்று கேட்க, என திருமால் சுய உருவில் தோன்றி முனிவரிடம் வேணியன் அருள் பெற்றவரால் ஆகாதது உண்டோ! மன்னன் சுபன் என் பக்தன். அவனுடன் நட்புடன் இருக்க வேண்டுகிறேன் என்றார். ததீசி அதை ஏற்கவில்லை. தான் நேரில் வந்து கேட்டும் ஏற்காத முனிவர் மீது கோபம் கொண்ட திருமால், அவர்மீது சக்கராயுதத்தை வீச, முனிவர் ஈசனைத் தியானித்து நின்றார். சக்கரம் முனிவரை மும்முரம் வலம் வந்து திருமாலிடமே திரும்பியது. அப்போது முனிவர், இந்தச் சக்கரம் நீலகண்டன் தந்ததல்லவா! அது அவர் பக்தருக்குத் துன்பம் தருமா? என்று கேட்டார். இப்போரில் மாதவனுக்கு உதவ வந்து தேவர்கள் தோற்று ஓடினர். தன்னந்தனியாய் நின்ற மாதவன் மாயையால் முனிவரைக் குழப்ப, ஈசன் தந்த ஞானக்கண் மூலம் முனிவர் எதையும் நன்கு காண முடிந்தது. இவ்வாறு ததீசி முனிவரை வெல்ல முடியாமல் விஷ்ணு மயங்கி இருக்கையில் அங்கே பிரமன், சிவன் தோன்றி இருவரையும் கோபம் நீங்கி சாந்தமடையுமாறு வேண்டினார். திருமால் ததீசியிடம் அவர் தவத்துக்குத் தலை வணங்குவதாகக் கூறி பாற்கடல் திரும்பினார். அது கண்ட சுபன் பாற்கடல் சென்று மாதவனிடம் தன் நிலைமை என்ன என்று கேட்க திருமால் விரோதம் நீக்கி நட்பு பெறுமாறு கூற, மன்னன் ததீசியை வணங்கித் தான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான். முனிவரும் முன்போல் அவனிடம் நட்பு கொண்டிருந்தார்.

வாழ்வின் நிலையாமை


வாழ்வின் நிலையாமை
செல்வம், இளமை, யாக்கை ஆகியன நிலைத்த தன்மை உடையன அல்ல.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு

(நெருநல் = நேற்று)
என்று நிலையாமையைச் சொல்லும் குறட் கருத்தின் விளக்கத்தை நாலடியார் பல பாடல்களில் எடுத்துரைக்கிறது. நிலையாமையை உணராத பேதைமையும் நாலடியாரில் சுட்டிக் காட்டப்படுகிறது.
கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்
கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ?”   என்று கேள்வி கேட்கிறார் பட்டினத்தார்
மயானத்திற்குப் பிறகு யார் வரப்போகிறார்கள்?  யாரும் வரமாட்டார்கள்.
“காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”  என்றும்,

இறந்த பின் நமது உடலை சொந்தம் கொண்டாடுபவர் யார் யார் என்று மிக விளக்கமாகப் பட்டினத்தார்ல ஒரு பாடலிலே சொல்கிறார்.
“எரி எனக்கென்னும் – புழுவோ எனக்கென்னும் – இந்த மண்ணும்
சரி எனக்கென்னும் – பருந்தோ எனக்கென்னும் – தான் புசிக்க
நரி எனக்கென்னும் – புன்னாய் எனக்கென்னும் – இந்நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் – இதனால் என்ன பேறு எனக்கே?
எரியும் நரியும், புழுவும் பருந்தும் நாயும் சொந்தம் கொண்டாடப் போகும் இந்த உடலை நாம் எப்படி எல்லாம் போற்றி வாசனைத் திரவியங்கள் – அழகிய ஆடைகள் – சுவையான உணவுகள் கொடுத்துப் பேணிக் கொண்டிருக்கிறோம்.  நற்செயல்களைப் புறந்தள்ளி ஆடை அலங்காரத்தில் நகைநட்டில் கவனம் செலுத்துகிறோம்.  அறச்செயல்களை விரும்புவதில்லை நாம்.  சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துகள்.
“இருப்பது பொய்  போவது மெய் என்று எண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்த தொந்தி
நம்மதென்று நாம் இருப்ப – நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாம் இருக்கும் தான்”
இந்த உலகத்திலே நாம் இருக்கப் போகிறோம் என்ற அகம்பாவத்தோடு திரிகிறோம்.  அது பொய்.  நாம் போவது – நாம் இறப்பது மெய்.  இதைத் தான் பட்டினத்தார் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.  ஆனால் ஆத்மஞானம் வந்த பிறகு “இருப்பது மெய் போவது பொய்” என்பது நமக்குத் தெரிந்து விடும்.  இந்த உலகத்தில் அழியாமல் இருப்பவையே மெய்யானவை. அழியப்போகின்றவை அத்தனையும் பொய்.  இந்த உடல் அழியும்.  நம் செல்வம் அழியும். உற்றார் அழிவர்.  உறவினர் அழிவர்.  நண்பர் அழிவர்.  நாம் பெற்ற  பட்டங்கள் அழியும்.  எனவே இவை எல்லாம் பொய்.  என்றும் இருப்பது நம் ஆத்மா.  ஆத்மா என்பது இறைவனின் ஒரு துளி. அந்த துளி தான் ஒவ்வொரு உயிரிலும் பரவி உள்ளது.  மரமானாலும் – விலங்கானாலும் –மனிதன் ஆனாலும் எல்லாவற்றுக்கும் ஆன்மா உண்டு.  அது தான் அழியாதது. கஷ்டநஷ்டங்களை இந்த உடல், மரம், விலங்குகள்  தாங்குகின்றன.  காரணம் அவைகளின் விருப்பங்கள்.  இரட்டைகளான இரவு-பகல், கஷ்டம்-நஷ்டம்,  இன்பம்-துன்பம்,  போன்றவற்றைக் கடந்தவன் இறைவன்.  ஆன்மா என்பதையும் இரட்டைகளைக் கடந்ததே.  எனவே பொய்யான இந்த உடல் மாள்வது திண்ணம்.
“இன்னம் பிறக்க இசைவையோ நெஞ்சமே?
மன்னர் இவர் என்று இருந்து வாழ்ந்தாரை – முன்னம்
எரிந்த கட்டை மீதில் இணைக்கோவணத்தை
உரிந்து உருட்டிப் போட்டது கண்டு”
என்று இறைவனிடம் வேண்டுகிறார் பட்டினத்தார்.
எல்லர்ம் கிட்டும்.  இறைவனின் திருவடியை உளமாற நினைந்து அல்லும் பகலும் அனவரதமும் அவனைத் துதித்து வந்தால் மீண்டும் கருவில் வந்து பிறவாத நிலை வரும்.  பிறவிப் பெருங்கடலை நாம் நீந்தி இறைவன் திருவடியை அடைந்து விடலாம்.  பிறப்பு-இறப்பு எனும் மாயச் சுழலில் சிக்காது கரையேறலாம்.
எனவே ஆசையே அனைத்து அல்லல்களுக்கும் காரணம் என்பதை அறிந்து பற்றற்ற வாழ்வை நாம் மேற்கொள்வோம்.