Friday 16 October 2015

பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !



அன்னை.
உலகத்தில் பிறந்த அனைவருக்கும் அன்னை உண்டு. .
அன்னையின் அரவணைப்பை அண்டாதவர்கள் யாருள்ளார்கள்?
அன்னையின் அளவற்ற பாசத்தை வேண்டாதவர்கள் உண்டா?தாய்ப் பாசத்திற்கு நிகருண்டா?
தேசத்தைத் தாயாகவும், நதிகளை அன்னையாகவும், தெய்வங்களைக் கூட தாய் வடிவில் காண்கின்றோம்.
வேதங்கள் "மாத்ரு தேவோ பவ" என்றே முதலில் தாயைப் போற்றுகின்றன. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னைக்கே முதலிடம்.
முப்பெரும் தேவர்கள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்.இவர்கள் மூவருக்கும் ஒரு சமயத்தில் அன்னையின் அரவணைப்புத் தேவையாக இருந்திருக்கின்றது.
பிரம்மா - இவர் விஷ்ணுவின் தொப்புள் தாமரையில் தோன்றியவர். இவருக்கு அன்னையில்லை.
விஷ்ணு - அனாதியானவர். ஆதி என்று ஒன்று இல்லாதவர். பத்து அவதாரங்கள் எடுத்த போதிலும் அன்னையின் பரிபூரண அரவணைப்பைப் பெறாதவர். ராமாவதாரத்தின் போது ராமர் ராஜகுமாரனாக வளர்ந்ததனால், அன்னையிடம் இருந்ததை விட, மற்றவர்களிடம் இருந்ததே அதிகம். பெற்ற கோசலையை விட, கைகேயியையே தாயாக மதித்தவர். கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, பெற்ற தாயான தேவகியை விட, வளர்த்த யசோதையிடம் அதிக அன்பு பெற்றவர். சிறு வயதில் கிருஷ்ணருக்கு விஷமங்கள் செய்வதற்கே நேரமிருந்தது. யசோதைக்கும் கிருஷ்ணரைக் கண்டிக்கவே நேரம் போதவில்லை.
சிவன் - இவருக்கும் பிறப்பு என்று ஒன்றே இல்லை. சிவன் சிலை வடிக்கும் போது, தொப்புள் இல்லாமலே சிவனை வடிப்பார்கள். ஏனெனில், இவர் எவருக்கும் பிறக்கவில்லை என்பதுதான்.
விஷ்ணு எடுப்பது அவதாரம் (பிறப்பு முதல் இறப்பு வரை உண்டு) எனில் சிவன் எடுப்பது அவஸரம் (பக்தர்களுக்கு காட்சி தந்து விட்டு மறைந்துவிடுதல்).சிவன் தாமே முன் வந்து "அம்மே" என்று அழைத்தது காரைக்கால் அம்மையாரை. அவரைப் பற்றி பிறகு பார்ப்போம்.
இந்த மூவருக்கும் ஒரு சமயத்தில், நாம் யாருக்காவது குழந்தையாக மாட்டோமா என்ற நினைப்பு இருந்தது. தாயின் பரிபூரண அரவணைப்பில் அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், மூவரும் தமக்கு ஒருவர் தாயாக, பக்தி சிரத்தையில் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க முனைந்தனர்.
அவர்கள் கண்களில் ஒரு ரிஷி பத்தினி தெரிந்தாள். அவள் அனசூயை.
அனசூயை - மஹா தபஸ்வினி. அத்ரி மஹரிஷியின் தர்ம பத்னி. அத்ரி மஹரிஷியின் தவத்தில் பெரும் உதவிகள் செய்து, தாமும் சதா சர்வ காலமும் பக்தி சிரத்தையுடன் இருந்தாள். அத்ரியும் அனசூயையும் தங்களுக்கு முப்பெருந்தேவர்களின் அம்சங்களாக ஒரு குழந்தை வேண்டும் என்றும் வரம் பெற்றிருந்தார்கள். அந்த வரத்தை மெய்ப்பிக்க பிரம்ம, விஷ்ணு, சிவன் அவர்களிடம் குழந்தையாக வளர சித்தம் கொண்டார்கள்.
அதன்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒரு நாள் அத்ரியின் ஆசிரமம் சென்று, அநசூயையைத் தாயாகப் பெற வேண்டி நின்றார்கள்.
அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.
அநசூயை தாயாக, முப்பெருந்தேவர்களும் மூன்று குழந்தைகளாக அத்ரி ஆசிரமத்தில் மிக மகிழ்வாக இருந்து வந்தனர். அநசூயையின் அளவற்ற, எல்லைகள் இல்லாத, களங்கம் எதுவும் இல்லாத நிர்மலமான, நிர்வாணமான அப்பழுக்கற்ற பாசத்தினை - குழந்தைகளான பிரம்ம விஷ்ணு சிவன் அனுபவித்து வந்தனர்.
நெடுநாட்களாக - பிரம்மன் இல்லாமல் பிரம்ம லோகம் இருண்டது. விஷ்ணுவின் வைகுந்தம் வெறிச்சோடியது. ஈஸ்வரனின் கைலாயம் இயல்பாக இல்லை.
பிரம்மாவின் தேவியாகிய சரஸ்வதியும், விஷ்ணுவின் தேவியாகிய லக்ஷ்மியும், சிவனின் தேவியாகிய பார்வதியும் - தமது கணவர்களைத் தேடியலைந்தனர்.
வெகுநாட்கள் தேடிய பின்னர் மூவரும் அத்ரியின் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். முப்பெருந்தேவியர்களும் தமது கணவர்களை அழைத்துச் செல்ல அத்ரியின் ஆசிரமத்தை அடைந்தனர்.
இவர்களின் வருகை குழந்தைகளாக இருந்த மூவருக்கும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) அதிர்ச்சியளித்தது. அன்னையைப் பிரிய மனம் இல்லாதவர்கள் ஆனார்கள். அவர்கள் மூவரும், தங்களைத் தாயிடம் இருந்து பிர்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில், மூவரும் அத்ரியின் ஆசிரமத்திற்குப் பின்னிருந்த வாழைத தோட்டத்தில் மறைந்து கொண்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு வாழை மரத்தின் பின் ஒளிந்தனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் ஒளிந்துகொண்ட வாழை மரம் அவர்களின் அம்சம் பெறலாயிற்று.
பிரம்மா மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பூவன் பழம். பூவன் - பூவில் அமர்பவன். பிரம்மா பூவில் அமைந்திருக்கக் கூடியவர். பூவன் பழமே பிரம்ம பழம்.
விஷ்ணு மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் முகுந்தன் பழம் அல்லது மொந்தன்பழம். விஷ்ணுவுக்கு முகுந்தன் என்ற பெயரும் உண்டு. மொந்தம்பழமே விஷ்ணு பழம்.சிவன் மறைந்துகொண்ட வாழை மரத்திலிருந்து பெறக்கூடிய வாழைப்பழம் தான் பேயன்பழம். சிவபெருமான் ருத்ரபூமியாகிய பேய்கள் உலாத்தக் கூடிய சுடுகாட்டில் உறைபவர். அவருக்கு பேயாண்டி என்ற பெயரும் உண்டு. பேயன்பழமே சிவப் பழம்.
பிரம்ம, விஷ்ணு, சிவன் மறைந்து கொண்ட வாழை மரங்களிலிருந்து பெறக்கூடியது தான் பூவன் பழம், மொந்தன்பழம், பேயன்பழம் ஆகும்.
அத்ரியின் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகாள இருந்த தம் கணவர்களை முப்பெருந்தேவியரும் அநசூயையிடம், தங்கள் கணவர்களை திரும்ப அனுப்புமாறு மன்றாடினர். அன்னைக்கு குழந்தைகளைப் பிரிய மனமில்லை. குழந்தைகளுக்கும் அன்னையைப் பிரிய மனமில்லை. பாசக் கயிறு குழந்தைகளையும், அன்னையையும் பிணைத்திருந்தது.
அநசூயை நெஞ்சம் கனக்க - பிரம்ம, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சுய ரூபம் அடைய அனசூயை பிரார்த்தனை செய்தாள். அதன்படியே மூவரும் தங்கள் தனித்த உருவம் அடைந்தனர்.
மஹாவிஷ்ணு, அநசூயை பெற்ற வரத்தின் படி, பிரம்ம அம்சம், தன்னுடைய அம்சம், சிவாம்சம் இணைந்ததான குழந்தையை உருவாக்கி, அத்ரியிடம் தத்தம் (வழங்குவது) அளித்தனர்.
அவரே தத்தாத்ரேயர்.அத்ரி மஹரிஷியின் மகனாக வாய்த்ததனால் அவர் ஆத்ரேயர். தத்தம் கொடுத்ததால் தத்தாத்ரேயர்.
மூவரின் அம்சமும் கொண்ட தத்தாத்ரேயர் அத்ரி - அநசூயை தம்பதிகளிடம் வளர்ந்தார். அன்னையின் பாசம் முழுக்கப் பெற்றார். தந்தையின் ஞானம் அனைத்தையும் பெற்றார்.
உலகில் உள்ள அனைத்துக் கலைகளையும் கற்று, பெரும் ஞானவான் ஆனார்.
ஸ்ரீ வித்யா உபாஸகர்களுக்கு, சாக்த உபாஸகர்களுக்கு தத்தாத்ரேயர் தான் பரமார்த்த குரு. ஏனெனில், தாயைப் போற்றும், தெய்வத்தைத் தாய் நிலையில் கொண்டு போற்றும், உலகமனைத்தையும் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றும் வகையில் அமைந்த ஸ்ரீ வித்யா உபாஸனையை உலகுக்குக் கொண்டுவந்தவர் தத்தாத்ரேயர்தான்.
தத்தாத்ரேயருக்கு பரம ஞான சக்தியாக விளங்குவது ஸாக்ஷ¡த் ஸ்ரீ மஹா திரிபுரசுந்தரியே தான்.
தத்தாத்ரேயர் ஸ்ரீ புர உபாஸனை அல்லது ஸ்ரீ நகர பூஜை அல்லது ஸ்ரீ வித்யா தந்திரத்தை 18000 ஸ்லோகங்களில் மிக விரிவாக வடித்தார். அதுவே தத்த ஸம்ஹிதை எனப் போற்றப்பட்டது.
தத்தாத்ரேயரின் பிரதான சிஷ்யராக விளங்கியவர் பரசுராமர். இந்த பரசுராமர் தத்த ஸம்ஹிதையை 6000 ஸ¥த்திரங்களாக தொகுத்தார். அதுவே பரசுராம கல்பம் எனப்பட்டது. தற்காலத்தில் அம்பிகைக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் பரசுராம கல்பத்தை ஒட்டியே செய்யப்படுகின்றது.மேலும் ஸ்ரீ வித்யா உபாஸனை பற்றி அறிந்து கொள்ள நவாவரண பூஜை பதிவைக் காணவும். அல்லது இங்கே க்ளிக் செய்யவும்.
வடமொழியில் அமைந்த நக்ஷத்ர மாலிகா ஸ்லோகங்கள் தத்தாத்ரேயரைப் பற்றி பல சிறப்பம்சங்களைக் கூறுகின்றன.
தத்தாத்ரேயர் யோகியர்களுக்கும், ஞானிகளுக்கு ஒரு தூய வழிகாட்டியாக அமைந்துள்ளார். அவர் போதித்தது அனைத்தும் ஞானாம்சம் பெற வழிகோலுவது.

தத்தாத்ரேயர் வழிபட்ட மஹா திரிபுர சுந்தரியாக, பராபட்டாரியாக, லோகநாயகியாக, உலகமாதாவாக விளங்கும் ஸ்ரீ லலிதா தேவியின் ரூபமாக விளங்கும் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை வணங்குவோம்! வளம் பெறுவோம் !!

முப்பெருந்தேவியர்களையும் (துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி) ஒருங்கே வழிபடவகை செய்யும் பெரும் விழாவாகிய நவராத்திரி விழாவினைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
- பி.கு. : - நேந்திரம் பழம் : சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி மூவரும் அத்ரியின் ஆசிரமத்தை அடையும் முன், தேவ நாயகனாகிய இந்திரனை அழைத்து, தமது கணவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். இந்திரனும் அத்ரியின் ஆசிரமம் அடைந்து, விபரம் அனைத்தையும் அறிந்து, அவனும் தாய்ப் பாசத்தினைப் பெற வேண்டி, தானும் ஒரு குழந்தையானான். இந்திர¨னைக் காணாமல் நெடுநேரமாகியதைக் கண்ட தேவியர் நேரில் ஆசிரமம் வர, இந்திரனும் வாழைத் தோட்டத்தில் உள்ள ஒரு வாழை மரத்தில் ஒளிந்து கொள்கின்றான். தேவியர் மூவரும் விபரம் அறிந்து, ஆசிரமத்தில் இருக்கும் வாழைத் தோட்டத்திற்கு நுழைகையில் இவர்களின் கண்களில் முதலில் பட்டது இந்திரன் தான். இந்திரனின் அம்சமாக இருந்த குழந்தையை இவர்கள் அழைக்க, இந்திரன் வடிவில் இருந்த குழந்தை, அன்னையின் பாசத்திற்குக் கட்டுண்டு - தான் இந்திரன் இல்லை (ந: இந்திரன்) என்றது. இந்திரன் நின்ற வாழைமரத்திலிருந்து பெறப்படுவது தான் நேந்திரன் பழம்.

சியமந்தக மணி



(சென்ற பதிவுக்கு (விநாயகர் சதுர்த்தி) முந்தைய பதிவாகிய சங்கடஹர சதுர்த்தி எனும் பதிவில், விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வழிபட்டு, தன் மேல் ஏற்பட்ட வீண் அபவாதத்தை ஸ்ரீ கிருஷ்ணர் நீக்கிக்கொண்டதைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. அதை விரிவாகத் தெரிந்துகொள்ள அன்பர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன்கண், இந்தப் பதிவு சியமந்தக மணி பற்றியது)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நாள் இரவில் நேரம் காண்பதற்காக விண்ணைக் காண்கின்றார். அங்கு வளர்பிறை நான்காம் நாள் நிலவு தெரிகின்றது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ராஜ்யத்தின் குறுநில மன்னராக யதுகுல வம்சத்தினன் ஆகிய சத்ராஜித் எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான். மிக ஏழ்மையான பகுதி அவனுடையது. ஏழ்மையில் இருந்தும் சூர்யபகவான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் சூர்யனை வழிபட்டுத்தான் மற்ற செயல்களைத் தொடங்குவது அவன் வழக்கம். வறுமை நீங்கவும், வாழ்வு செழிக்கவும் சூர்யனை தினமும் நினைந்து வழிபாடு ஆற்றியமையால், சூர்ய பகவான் அவனின் பக்தியை மெச்சி, அவன் முன் தோன்றி, தன் சூர்ய அம்சத்திலிருந்து ஒரு ரத்தினக் கல் எடுத்து அவனிடம் கொடுத்தார். அது சியமந்தக மணி எனப்பட்டது. அதன் சிறப்பம்சம் ஒவ்வொரு நாளும் அந்த சியமந்தக மணியிலிருந்து எட்டு பாரம் (எடையளவு) அளவு தங்கம் சுரந்து கொண்டேயிருக்கும்.
பக்தியின் பயனாக தான் பெற்ற சியமந்தக மணியை பயபக்தியுடன் பூஜைகள் செய்து வந்ததான் சத்ராஜித். அந்த மணியிலிருந்து பெற்ற தங்கத்தினைக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்திகொண்டான். தனது மக்களுக்கும் நல்வழியில் வாழ்க்கை அமைத்துக் கொடுத்தான்.
ஒரு நாள் தனது சக்ரவர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணரைக் காணவும், இந்த மணியைப் பற்றி சொல்லவும் விழைந்தான். அந்த சியமந்தகமணியைத் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு கிருஷ்ணரைக் காணச் சென்றான். துவாரகா நகர மக்கள் வினோத ரத்தினத்தைக் கட்டிக் கொண்டு வந்த சத்ராஜித், மணியின் அதீத பிரகாசத்தினால், ஒரு சூர்யனைப் போல வந்து கொண்டிருந்ததைக் கண்டு, கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.
கிருஷ்ணர் சத்ராஜித்தை அன்புடன் வரவேற்று உபசரித்தார். தான் பெற்ற சியமந்தகமணியைப் பற்றி கண்ணனிடம் விவரித்தான் சத்ராஜித். அதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அதன் சிறப்பம்சங்களை உணர்ந்து, அவனின் பக்தியைப் பாராட்டி, அந்த மணியைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைந்து, அந்த மணி பாதுகாவல் நிறைந்த துவாரகாக் கோட்டையில் பூஜையில் இருக்கட்டும், ஒவ்வொரு நாளும் அதிலிருந்து சுரக்கும் தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.
ஆயினும், சத்ராஜித் - தான் அரும்பாடுபட்டு தவம் செய்து பெற்ற மணியை பிறரிடம் கொடுக்க மனமில்லாதவனாக இருந்தான். கிருஷ்ணர் தன்னிடம் இருந்து சியமந்தக மணியை அபகரிக்க நினைக்கின்றாரோ என்று அச்சப்பட்டான்.
சத்ராஜித்தின் உள் எண்ணத்தை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், நீ பாடுபட்டு சேர்த்த பொருள் உன்னுடனே இருக்கட்டும் என்று சொல்லி அவனை வழியனுப்பி வைத்தார்.
ஊர் திரும்பிய சத்ராஜித்துக்கு கிருஷ்ணரை எண்ணி பயம் வந்தது. தன் மேல் படையெடுத்து மணியைப் பறித்துக்கொள்வாரோ என்று எண்ணி நடுங்கிக் கொண்டே இருந்தான். சத்ராஜித்துக்கு பிரசேனன் எனும் தம்பி இருந்தான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தான். அவன் என்ன கேட்டாலும் வழங்கும் எண்ணம் கொண்டிருந்தான் சத்ராஜித்.
ஒரு நாள், பிரசேனன் தன் அண்ணனிடம், தான் நண்பர்களுடன் வேட்டையாடச் செல்லவிருப்பதாகவும், அச்சமயம் தன்னிடம் சியமந்தக மணி இருந்தால் நல்லது என்றும் அண்ணனிடம் கூறினான்.
தன்னிடம் இருப்பதை விட தன் தம்பியிடம் சியமந்தக மணி இருப்பது கிருஷ்ணரிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி பிரசேனனிடம் மணியைக் கொடுத்தான்.
சியமந்தக மணியை அணிந்த பிரசேனன், அதற்குரிய பூஜனைகளை மறந்து, அதைக் கட்டிக்கொண்டிருந்ததால் மேன்மையானவன் என்ற அகங்காரம் கொண்டு, நண்பர்களுடன் உற்சாகமாக வேட்டையாடினான். ஒரு சமயம் பிரசேனன், தன் நண்பர்களிடமிருந்து பிரிந்து கானகத்தின் நடுவே சென்றுகொண்டிருக்க, அங்கே எதிர்பாராமல் வந்த சிங்கம் ஒன்று, பிரசேனனையும், அவனின் குதிரையையும் கொன்று, அவன் அணிந்திருந்த மணியை கவ்விக்கொண்டு சென்றுவிட்டது.
அந்த கானகத்தில் ராஜ்யம் செய்துகொண்டிருந்த ஜாம்பவான் (ராமாயணத்தில் வரும் கரடி ராஜா, யுகங்கள் தாண்டிய வயதைக் கொண்டவர்) சியமந்தக மணியைக் கவ்விக்கொண்டிருந்த சிங்கத்தை வென்று, அதனைக் கொன்று, அந்த மணியைத் தன் குழந்தைக்கு விளையாடக் கொடுத்துவிட்டார்.
காட்டுக்கு வேட்டையாடச் சென்ற தன் தம்பி பிரசேனன் நெடு நாட்களாகியும் திரும்பாததைக் கண்டு மனம் கலங்கியிருந்தான் சத்ராஜித். ஒரு நாள் அவன் நண்பர்கள் பிரசேனன் நடுக்காட்டில் இறந்து விட்டதையும், அந்தக் கல் காணாமல் போனதையும் வந்து சொன்னார்கள்.
கிருஷ்ணர்தான், அந்த சியமந்தக மணி மேல் ஆசைப்பட்டு, தன் தம்பியைக் கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, கிருஷ்ணர் மீது அவதூறைப் பரப்பிவந்தான்.
கிருஷ்ணர் இந்த அவச்சொல்லைக் கேட்க நேர்ந்தது. தன் மீது ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்கிக் கொள்ள ஆவலானார்.
(கிருஷ்ணர் வளர்பிறை சதுர்த்தியில் இரவில் நிலவைப் பார்த்ததால் ஏற்பட்ட இடர்தான் இவ்வளவுக்கும் காரணம் என நாரதர் கூற, அவப் பெயர் நீங்க, விநாயகரை தேய்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபடச் செய்தார். விநாயகரும், கிருஷ்ணர் மேல் படிந்த கெட்ட பெயரை நீக்க திருவுள்ளம் கொண்டு அருள்பாலித்தார். தன் சங்கடங்கள் யாவும் நீங்க விநாயகரை வழிபட்ட தினம் தேய்பிறை சதுர்த்தி (நான்காம்) தினம். )
கிருஷ்ணர் தன் கெட்டபெயரை நீக்கிக் கொள்ள, பிரசேனனின் நிலையைக் காண கானகம் சென்றார். பிரசேனன், குதிரை, சிங்கம் ஆகியன இறந்த நிலையை அறிந்த கிருஷ்ணர், அடர்கானகத்தில் ஒரு இடம் மட்டும் அதிக பிரகாசமாக இருப்பதைக் கண்டு அந்த இடத்தை நெருங்குகின்றார்.
அங்கே ஒரு குகையில், ஜாம்பவானின் மகளாகிய ஜாம்பவதி தன் தம்பியைத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். ஜாம்பவதி அறிவில் சிறந்தவள். புத்தி கூர்மை மிக்கவள். கிருஷ்ணர் சியமந்தகமணியைத் தேடித்தான் வருகின்றார் என்பதை அறிந்து, குழந்தையைத் தாலாட்டுவது போல பாடினாள்.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:"
"சிங்கம் பிரசேனன் என்பவனைக் கொன்று மணியைக் கவர்ந்தது. அந்த பலம் மிகுந்த சிங்கத்தை, மஹா பலம் பொருந்திய ஜாம்பவான் ஆகிய உன் தந்தை கொன்று, அந்த மணியைப் பெற்றார். அந்த மணியோ இப்பொழுது உன்னிடம்" என்று பொருள் பதிய பாடினாள்.
கிருஷ்ணர் இந்தப் பாடலைக் கேட்டு, குரல் வந்த திசையை நோக்கி வந்தார். அந்தக் குகைக்குள் நுழைந்து மணியை எடுக்க நினைக்க, யாரோ ஒரு அந்நியன் தனது குகைக்குள் வந்து பிரகாசமான மணியைக் கவர நினைக்கின்றாரோ என்று எண்ணிய ஜாம்பவான், கிருஷ்ணரை தாக்கினார்.
இதை எதிர்பாராத கிருஷ்ணர் ஜாம்பவானின் தாக்குதல்களை மிக எளிதாகக் கையாண்டார். ஒவ்வொரு முறையும் ஜாம்பவான் கிருஷ்ணரைத் தாக்கும் போதும் ஏதோ ஒரு அருமையான பழைய பந்த உணர்வு ஜாம்பவானுக்குத் தோன்றியது.
இருந்தபோதிலும் கிருஷ்ணரை உணராத ஜாம்பவான் தாக்குதல்களை மேலும் பெருக்கினார். ஆயினும், மஹா பலசாலியாகிய ஜாம்பவானின் தாக்குதல்களை, மிக எளிதாக எதிர்த்து, அதே சமயம் ஜாம்பவானை தலைக்கு மேல் சுற்றி சுவற்றில் எறிந்தார். ஜாம்பவானுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. மஹா பலவானாகிய தன்னை ஒருவர் மிக எளிதாக தாக்குகின்றாரே என்ற எண்ணம் கொண்டு, தனது புஜ பலத்தை நம்பி, கிருஷ்ணரை தனது கைகளால் தாக்குகின்றார்.
இருவரும் கட்டிப்பிடித்து சண்டை போடுகின்றனர். ஆலிங்கனம் செய்து சண்டையிடும் போது ஜாம்பவானையும் அறியாமல் மெய்சிலிர்த்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதே போன்றதொரு சமயம், ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமர், சீதையை மீட்டதற்கு நன்றியாக, ஜாம்பவானை ஆலிங்கனம் செய்திருந்தார். அந்தக் கணம் இப்பொழுது கிருஷ்ணரைத் தாக்க தழுவியபோது தெரிந்தது. அவரையும் அறியாமல் 'ராம, ராம' என்றார். நிலமையை உணர்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் தனது தோற்றத்தை நீக்கி, ராமச்சந்திர பிரபுவாக ஜாம்பவானுக்குக் காட்சியளித்தார். எல்லையற்ற மகிழ்ச்சி கொண்ட ஜாம்பவான், கிருஷ்ணரைப் பணிந்து வணங்கி, சியமந்தக மணியை அவரிடம் கொடுத்து, தனது மகளாகிய ஜாம்பவதியை அவருக்கு மணம் முடித்து வைத்தார்.
சியமந்தக மணியுடன் வந்த கிருஷ்ணர், நேராக சத்ராஜித்திடம் சென்று, அந்த சியமந்தக மணியை அவனிடம் கொடுத்து, உன் பொருள் உன்னோடு இருக்கட்டும் என்று கூறி, நடந்ததையெல்லாம் விவரித்தார்.
சத்ராஜித்துக்கு கிருஷ்ணர் மீது பெரும் பக்தி உண்டு. ஆயினும், தன் பொருள் மீது அவர் ஆசை வைத்தாரோ என்று எண்ணியது தன் தவறு என்று எண்ணி, மிகவும் வருத்தம் கொண்டு, கிருஷ்ணர் பெயருக்குத் தாம் பெரும் களங்கம் செய்துவிட்டோமே என்று நினைந்திருந்தான். தான் செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தமாக, தன் மகள் பாமாவை கிருஷ்ணருக்கு மணம் முடித்துவைத்தான்.
சியமந்தக மணி பிரச்சனை பாமாவின் திருமணத்தோடு முடியவில்லை. பாமாவைத் திருமணம் செய்யக் காத்திருந்த சததன்வா என்பவன், ஸ்ரீ கிருஷ்ணருக்கு பாமாவை மணம் முடித்துக் கொடுத்த சத்ராஜித் மேல் கோபம் கொண்டு, கிருஷ்ணர் இல்லாத நேரமாகப் பார்த்து, சத்ராஜித் மீது படையெடுத்து, சத்ராஜித்தைக் கொன்று, சியமந்தக மணியைப் பறித்து வந்துவிடுகின்றான்.
கிருஷ்ணர் துவாரகையை அடைந்தவுடன் நடந்ததை அறிந்து சததன்வாவைத் தாக்க, தனது அண்ணனாகிய பலராமனுடன் செல்கின்றார்.
கிருஷ்ணர் தன்னைத் தாக்க வருகின்றார் என்று அறிந்த சததன்வா, அந்த மணியை தனது தம்பியாகிய அக்ரூரர் என்பவரிடம் (அக்ரூரர் - மஹா தபஸ்வி. மேன்மையானவர். கிருஷ்ண பலராமரிடத்தில் பேரன்பு கொண்டவர். யமுனா நதியின் அடியிலேயே கிருஷ்ண பலராமர்களை தெய்வங்களாக உணர்ந்து கண்டுகொண்டவர்) கொடுத்துவிடுகிறான்.
அவர் தவம் செய்வதற்காகக் காசி நோக்கிச் சென்று விடுகின்றார்.
கிருஷ்ணர் சததன்வாவைத் தேடிச் சென்று அவனைக் கொன்று விடுகின்றார். ஆனால் அவனிடம் சியமந்தக மணி இல்லை. வெறும் கையுடன் திரும்பி வந்த கிருஷ்ணர் மீது பலராமரே சந்தேகப் படுகின்றார்.
பிறகு, அந்த மணி அக்ரூரரிடம் இருப்பதை அறிந்து அவரை நோக்கிச் செல்ல, அக்ரூரர் சியமந்தக மணியை கிருஷ்ணரிடம் சமர்ப்பித்தார். ஆனால், கிருஷ்ணர் தபஸ்வியாக விளங்கும் அக்ரூரரிடம் இருப்பதே நல்லது என்று அவரிடமே திருப்பித் தந்துவிடுகின்றார்.
இப்பொழுது, கிருஷ்ணர் மீதிருந்த அவப்பெயர் முற்றிலுமாக நீங்கப் பெற்றது.
பாகவதத்திலும், விஷ்ணு புராணத்திலும் சியமந்தக மணியைப் பற்றி விரிவாக விவரிக்கப்படுகின்றது. பல இடர்கள் தந்த அந்த மணியை கிருஷ்ணர் திரும்பவும் சூர்யபகவானிடமே சேர்ப்பித்து விட்டார் என்றும், அந்த மணியை பூமியில் ஓங்கி அடித்துப் புதைத்துவிட்டார் என்றும், பாண்டவர்களின் வம்சத்தினன் ஆகிய பரீக்ஷித்து மஹாராஜாவிடம் அந்த மணி சேர்க்கப்பட்டது என்றும் பல உப புராணங்கள் கூறும்.

நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு என்பார்கள். அது இந்த சியமந்தகமணி சம்பவத்தை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டது.
ஒருவேளை நான்காம் பிறையைப் பார்க்க நேர்ந்தால், பாகவதத்தைப் படித்தாலோ அல்லது ஜாம்பவதி சொல்வதாக அமையக் கூடிய
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:" - என்ற (சியமந்தக உபாக்யானம்) ஸ்லோகத்தைச் சொன்னால் விமோசனம் கிடைக்கும் என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.
கிருஷ்ணர், தேய்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபட்டதால் களங்கமும், சங்கடமும் நீங்கியதாகவும், அதுமுதல் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியத்துவம் பெறலாயிற்று. ஆகவே அந்த தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்பட்டு, அன்றைய தினத்தில் விநாயகருக்கு உரிய வழிபாடுகள் செய்வது, வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க வழிசெய்யும்.

பார்கவ புராணம் - ஸ்ரீ கிருஷ்ணர் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு செய்து சங்கடங்களை நீக்கிக் கொண்டதாகக் கூறுகின்றது.


சங்கடஹர சதுர்த்தி அன்று சக்தியின் மைந்தனாகிய விநாயகரைப் பணிந்து வழிபாடு செய்வோம் ! சங்கடங்கள் யாவும் நீங்கப் பெறுவோம் !!

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி


சைவத்தின் பெருவிழாவாக, சிவ பெருமானுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.
சிவராத்திரியின் சிறப்புகள்:வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றதும்,
கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும்,
பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும்,
தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும்,
பார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.
பூஜைகள்:சிவராத்திரியன்று சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
ஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
அன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை சொல்வது மிகவும் சிறந்தது.
தான தர்மங்கள் செய்வது, தெய்வத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வது, பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன.
சிவராத்திரி இருவகைப்படும். ஒன்று மாத சிவராத்திரி. மற்றது மகா சிவராத்திரியாகும்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து (அனுஷ்டித்து) வருகின்றனர்.
மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி" ஆகும்.
வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.
மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.
முதல் கால பூஜைஇந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாவது கால பூஜை
இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்.
இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாவது கால பூஜைஇந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்.
இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.
இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதைலிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காவது கால பூஜைஇந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.
குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும்சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.
விரத முறை :விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
புராண விளக்கம் 1 :ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்.
புராண விளக்கம் 2 :மற்றொரு கல்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக உருவெடுத்தார். அவ்வராகம் நீரில் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது. திருமால் செருக்கோடு தம் இடம் சென்றார். அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார். படைப்புத் தொழில் தொடங்கியது. அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான். பிரமன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார். அவ்வெளிப்பாட்டிற்கு லிங்கோத்பவரென்று பெயர். பிரம விஷ்ணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர்.
இச்சரித்திரத்தை,
'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்
பக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:"
(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரம்மாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்) என வேத(சரப)மும் எடுத்துரைக்கிறது. இச்சம்பவமும் இரவில் நடந்தது. ஆகையால் அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது.
'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்கங்களை அழிக்கின்றது என்று பொருள். 'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள். ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் பக்தியைக் கொடுப்பது என்று பொருள்படும்.
திரயோதசி உமா ஸ்வரூபம். சதுர்த்தசி ஸ்வரூபம். அவ்விரண்டு திதியுங்கூடிய இரவு சிவலிங்க ஸ்வரூபம்.
புராண விளக்கம் 3:
ஒரு சமயம், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார். பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது வைத்ய விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் சிவபெருமானை இரவு முழுதும் சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி. சிவன் உலகைக் காத்த இரவு என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிவராத்திரி.
மற்றுமொரு புராண விளக்கம் :காட்டில் இரவில் மாட்டிக்கொண்ட ஒருவன் மிருகங்களுக்கு பயந்து, ஒரு மரத்தின் மேலேறி, பயத்தால் அம்மரத்தின் ஒவ்வொரு இலைகளையும் கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனை சிவகணங்கள் வந்து வணங்கி வேண்டும் வரங்களை வழங்கின.
சிவகணங்கள் வந்த காரணமென்ன எனில், அவன் ஏறியது வில்வ மரம். வில்வ மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கத்திற்குத் தான் வில்வ இலைகளை எறிந்திருக்கின்றான். சிவகணங்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்கின்றான் என எண்ணி அருள் பாலித்திருக்கின்றன.
அவன் இரவு முழுவதும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்திருக்கின்றான். அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் சில புராணங்கள் கூறும்.
எந்த ஒரு இறை சிந்தனையும் இல்லாமல், வெறும் வில்வ இலைகளை மட்டுமே அர்ச்சனை செய்ததாலேயே ஒருவனுக்கு சிவ அனுக்ரஹம் கிடைத்தது என்றால், சிவ சிந்தனையோடு, சிவனுக்கு உரிய பொருட்களை சிவலிங்கத்திற்கு பக்தி சிரத்தையோடு செய்தோமாகில் சிவ கடாட்சம் மிக நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
விரதமிருந்து பேறு பெற்றவர்கள் :சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.
பிரமன் சிருஷ்டித் தொழிலையும்,
மஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும்,
இந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,
குபேரன் அளவற்ற நிதியையும்,
குமரன் அழகான மேனியையும்,
கன்மாடபாதனென்னும் வேந்தன் பிரமகத்தி நீக்கத்தையும் பெற்றனர்.

பாம்பு இயற்றிய பாடல்



ஆதிசேஷன் எனும் நாகத்தின் மேல் அரிதுயில் கொண்டிருப்பவர் மஹா விஷ்ணு. ஆதிசேஷன் ஆயிரம் தலைகளை உடைய நாகமாக, பாம்பாக வடிவம் கொண்டு மஹாவிஷ்ணுவை எந்நேரமும் தாங்கிக் கொண்டிருப்பவர்.
ஆதிசேஷன் கத்ரு என்பவரின் புத்திரன். ஆயிரம் தலைகள் கொண்டவர். பாற்கடலில் விஷ்ணு மூர்த்திக்குப் படுக்கையாகவும், பரமபதத்தில் ஆசனமாகவும், நடந்தால் குடையாகவும் இருப்பவர். மஹா ஞானி. அதி அற்புத திறன் பெற்றவர். ஸஹஸ்ராவதானி.
ஒரு சமயம் பாற்கடலில் விஷ்ணு மூர்த்தி யோக நித்திரையில் அமைந்திருக்கின்றார். எப்பொழுதும் போல் இல்லாமல், விஷ்ணுவின் உடலில் திடீரென்று சிறு மாற்றம். அனுதினமும் விஷ்ணுவிடமே இருக்கும் ஆதிசேஷனுக்கு இந்த மாற்றத்தை மிக அற்புதமாக உணரமுடிந்தது. விஷ்ணுவின் உடலில் வியர்வை வெளியேறியது. ஆதிசேஷன், விஷ்ணுவிடம் தங்கள் உடம்பில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன என்று வினவினார்.
அதற்கு மஹா விஷ்ணு, "ஒரு சமயம் தேவலோகத்தில், நடராஜர் ஆனந்த நடனக் காட்சியளித்ததை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனந்த நடனம், அற்புத நடனம், அதிசய நடனம். அந்நடனத்தில் நான் முரசு கொட்டினேன். அந்த ஆனந்த பரவச நிலையை இக்கணமும் உணர்ந்ததால், முரசு கொட்டியதால் ஏற்பட்ட வியர்வையை உன்னால் உணரமுடிந்தது" எனக் கூறினார். மஹாவிஷ்ணு, தான் கண்ட ஆனந்த நடனக் காட்சியை ஆதிசேஷனுக்கு மிக அழகாக அனுபூதியாக உணர்த்தினார்.

ஆதிசேஷனுக்கு, மஹா விஷ்ணு உணர்த்திய காட்சியைத் தானும் காண வேண்டும் எனும் பெரும் ஆவல் உண்டாயிற்று. தன் விருப்பத்தை மஹாவிஷ்ணுவிடம் முன் வைக்கிறார். அவரும் தக்க உத்தரவு கொடுத்தார்.
அத்ரி மஹரிஷியின் மனைவி அநசூயை. கணவரின் சிவபூஜைக்கு உதவியாக இருந்தவர். மஹா தபஸ்வினி. ஒரு சமயம் ஆற்றங்கரையில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது, ஆதிசேஷன் விஷ்ணு கொடுத்த வரத்தால் அநசூயையின் குவிந்த கரத்தில் (அஞ்சலி ஹஸ்தம்) வந்து, அவளின் பாதத்தில் விழுந்தார். பாம்பின் காலும், மனித முகமும் கொண்டு, அஞ்சலி செய்த கையில் வந்து, பாதத்தில் வந்து விழுந்ததால் பதஞ்சலி எனப் பெயர் பெற்று வளர்ந்து வந்தார்.

ஆதிசேஷன், கலைகள் அனைத்தையும் கற்று, தில்லை வனம் எனும் காட்டில், புலிக்கால் கொண்ட முனிவராகிய வியாக்ரபாதருடன் இணைந்து ஆதி மூலவருக்கு சிவபூஜை செய்து வந்தார். சிவபூஜையில்

மகிழ்ந்த சிவபெருமான், ஆனந்த நடனக் காட்சியை அளிப்பதாக அசரீரியாக வாக்கு அளித்தார்.

தேவர்கள், ரிஷிகள், கணங்கள் வேண்டியதற்கு இணங்க, முன்னர் வரம் அளித்தபடி, சிவபெருமான் ஆனந்த நடனக் காட்சி நல்க பூலோகம் வரும் நேரம் வந்தது.

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கையில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னகை பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவது பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

ஆனந்த நடனமாடிய அம்பலவாணர், தவம் செய்த பதஞ்சலியை நோக்கி என்ன வரம் வேண்டும் என வினவ, பதஞ்சலியோ தாம் கண்ட இத்திருக்காட்சியை எதிர்காலத்தில் அனைவரும் காண வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில், நடராஜ ராஜர் பொன்னம்பலத்தின் எப்பொழுதும் பதஞ்சலியாமல் (பாதம் சலிப்படையாமல்) ஆடவேண்டும் என பெருவரம் கேட்டார்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றௌ உடன் அருளும் குஞ்சிதபாதர், பதஞ்சலிக்கு அவ்வண்ணமே அருள்பாலித்தார்.நடராஜராஜரின் அற்புத ஆனந்த நடனம் இன்றும் என்றும் நடக்கிறது.

ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி, ஒரு அற்புத பாடல் ஒன்றை இயற்றினார்.
பதஞ்சலி - நாக அம்சம். பாம்பின் வடிவம் கொண்டவர். பாம்புக்கு காலும் கிடையாது. கொம்பும் கிடையாது. ஆகவே தான் எழுதிய பாடல் தொகுப்பு ஒன்றிற்கு காலும், கொம்பும் இல்லாமலேயே இயற்றியுள்ளார்.நடராஜரின் ஆனந்த நடனத்தைப் போற்றிச் சொல்லக்கூடிய, தான் எழுதிய ஒரு பாடல் தொகுப்பினை, கால் வைத்த எழுத்தாகிய நெடில் ('ஆ'காரம்) மற்றும் கொம்பு வைத்த எழுத்தாகிய ஒகாரமும் இல்லாமலேயே எழுதியுள்ளார்.`அது ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித நடராஜ ஸ்தோத்ரம் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஸ்லோகங்களைச் சொல்லும்போதே ஆனந்த நடனக் காட்சி நம் கண்ணில் தெரியும்.


ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)

1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ரஹிதம்விரிஞ்சிஸ¤ர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்பரம் பதவிகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸ¤ரஸரித்தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸ¤ஹரம் பவஹரம்சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனிஹ்ருதந்தர வஸந்த மமலம்கபந்த வியதிந்துவஹனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்அனந்தவிபவம் த்ரிஜகதந்தரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம் ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்முகுந்த ஸ¤ரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்அகம்ப மனுகம்பிதரதிம் ஸ¤ஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
7. பரம்ஸ¤ரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸ¤மனஸம் ஹிமருசிம்அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
8. அஜம் க்ஷ¢தி ரதம் புஜங்கபுங்கவகுணம் கனகச்ருங்கிதனுஷம் கரலஸத்குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும் ருசிம் டமருகஞ் ச தததம்முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷ¢தி துரந்தர மலம் கருணயந்த மகிலம்ஜ்வலந்த மனலம் ததத மந்தகரிபுரம் ஸததம் இந்த்ரஸ¤ர வந்திதபதம்உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸ¤கந்தி வபுஷம்பத்ஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ
10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்கவக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸ¤லலிதம் சரணச்ருங்க ரஹிதம்ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்
இதி ஸ்ரீபதஞ்சலிமஹர்ஷிக்ருத ஸ்ரீசரணச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

மேற்கண்ட ஸ்லோகங்களில் எந்தப் பகுதியிலும் நெடில் (கா, சா, தா போன்றவை) மற்றும் ஒகாரம் (கொ, சொ, தொ போன்றவை) வராததைக் கவனிக்கவேண்டும்.

பதஞ்சலி எழுதிய பூஜா ஸூக்தம் என்ற பூஜை முறைப்படியே தினமும் ஆறுகாலமும் சிதம்பரத்தில் பூஜைகள் நடந்தேறுகின்றது.
பதஞ்சலி வடமொழியில் அமைந்த, பாணிணி சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார். ஆகையால் இவரை மஹா பாஷ்ய காரர் என்பார்கள்.
ஆதிசேஷன் - பாம்பு வடிவினர். ஆகையால் அவர் மூச்சுக் காற்று விஷம், அக்காற்றை சுவாசிப்பவர் மரணமடைவார்கள். பதஞ்சலி, தன் கலைகளையெல்லாம் சிஷ்யர்களுக்கு சொல்லித் தர ஆசைப்படுகின்றார். ஆதிசேஷன் வடிவத்தில் பாடங்களை நடத்தித் தர முன்வருகின்றார்.

இக்காரணத்தால், பாடம் நடத்தும்போது சீடர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு மந்திர சக்தி வாய்ந்த திரை அமைத்துப் பாடம் நடத்துவார். மாணவர்களுக்கு எக்காரணம் கொண்டும் பாடம் நடத்தும்போது திரையை விலக்கக் கூடாது என்ற ஒரு கட்டளையும் இட்டார்.

ஆயிரக்கணக்கான சீடர்களுக்கு பாடங்கள் நடந்து கொண்டிருந்தது. மாணவர்கள் கேட்கும் ஆயிரக்கணக்கான சந்தேகங்களுக்கு அவரவர் கேள்விகளுக்கு தக்கவிதத்தில் அழகுற பதில் கூறி விளக்கங்கள் கூறுவார் ஆதிசேஷன்.

மாணவர்களுக்கோ இது அதிசயமாக இருக்கும். எப்படி ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் கூற முடியும் என்ற சந்தேகம் சீடர்களுக்கு ஏற்பட்டது. திரையை விலக்க, குருவின் கட்டளையை மீற வேண்டுமே என்ற பயமும் இருந்தது.

ஒரு நாள் வழக்கம்போல் பாடம் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு குறும்புக்கார மாணவன் குரு பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காண வேண்டி ஆர்வமிகுதியில் திரையினைத் தள்ளினான். அங்கே பதஞ்சலி மஹரிஷி, ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாக அமைந்ததைக் காண்கிறார்கள். திரை தள்ளியமையால், ஆதிசேஷனின் விஷத் தன்மை கொண்ட மூச்சுக் காற்றுபட்டு, எதிரில் இருந்த அனைவரும் இறக்கின்றனர்.

ஆழ்ந்த வருத்தம் கொண்டார் பதஞ்சலி. இத்தனை காலம் தான் கற்றுக் கொடுத்த அனைத்தும் வீணானதே என்று மிகவும் வருந்தினார்.

ஆனால், ஒரு ஆச்சர்யம். அன்று மட்டும் ஒரே ஒரு சீடர் மட்டும் மிகத் தாமதமாக வந்ததைக் கண்டதும் மிகவும் ஆனந்தித்தார். இவர் ஒருவராவது உயிரோடு இருக்கின்றாரே என்று மகிழ்ச்சி கொண்டார். அந்த ஒரு சீடருக்கு தன் அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுத்தார்.

அவர் தான் கௌடபாதர்.
இந்த கௌடபாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதர். (இவர் உத்தர கீதைக்கு பாஷ்யம் எழுதியவர்.)கோவிந்த பகவத் பாதரின் சீடர்தான் ஸ்ரீ ஆதிசங்கரர்.
ஆதிசேஷன் வடிவான பதஞ்சலியின் பாடலைக் கேட்டு இன்புற்று, ஆனந்த நடனக் காட்சி அருளும் ஸ்ரீ நடராஜ ராஜரை தரிசித்து ஆனந்தம் காண்போம்.

மகாவிஷ்ணுவின் சக்கராயுதமும் சலந்தரனும்

மகேஸ்வர வடிவங்கள் இருபத்து ஐந்தினுள் ஒன்று சக்ரதான மூர்த்தி. மஹாவிஷ்ணுவுக்கு சுதர்சனம் எனும் சக்ரத்தை அருளியவர் சக்ரதான மூர்த்தி.
மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தை சலந்தரன் என்ற அரக்கன் பறித்துச் சென்று விட்டான். அவர் பரமசிவனிடம், சக்ராயுதத்தை மீட்டுத்தர வேண்டினார். பூலோகத்தில் வீழிச்செடிகள் அடர்ந்த இடத்தில் தான் இருப்பதாகவும், அங்கு தினமும் பூஜை செய்தால் சக்ராயுதம் கிடைக்கும் என்றும் அருளினார். விஷ்ணுவும் இத்தலத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதிலிருந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து ஆயிரம் தாமரை மலர்களால் ஈசனை வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் சிவனின் திருவிளையாடலால், சிவபூஜைக்கான ஆயிரம் தாமரையில் ஒன்று குறைந்தது. அந்த ஒரு தாமரைக்கு பதில் விஷ்ணு தன் கண்ணையே ஆயிரமாவது மலராக தந்தார். இப்பூஜைக்கு மகிழ்ந்த சிவன், சலந்தரனை வதம் செய்து, சக்கராயுதத்தை கொடுத்தருளினார். (திருவீழிமிழலை புராணம்)
சிந்தை மகிழ்ந்து சிவ பூஜையில் பங்கெடுப்போம். சிறப்பான வாழ்வைப் பெறுவோம்.

மகேஸ்வர வடிவங்கள் இருபத்து

மகேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை 

1.ஸத்யோஜாதம்,
2.அகோரம், 
3.வாமதேவம்,
4.தத்புருஷம் 
5.ஈசானம்.

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து சிவ வடிவங்கள் தோன்றின. 5 x 5 = 25 மூர்த்திகள் - மாகேஸ்வர வடிவங்கள் என்று அழைக்கப்படும்.

1. சந்திரசேகரர் 
2. திரிபுரஸம்ஹாரர் 
3. ஜலந்தரஹரர்,
4. கஜஸம்ஹாரர்,
5. நீலகண்டர் 
6. சக்ரதானர்
7. விக்னேஸ்வர அனுக்ரஹர் 
8. ஸோமாஸ்கந்தர் 
9. ஏகபாதர் 
10. காலஸம்ஹாரர், 
11. உமா மகேசர்
12. ரிஷபாரூடர் 
13. தக்ஷ¢ணாமூர்த்தி,
14. கிராதர் 
15. பிக்ஷ¡டனர், 
16. கல்யாண சுந்தரர் 
17. காமஹரர் 
18. கங்காளர் 
19. சண்டேசானுக்ரஹர் 
20. வீரபத்ரர் 
21. அர்த்த நாரீஸ்வரர் 
22. சங்கர நாராயணர், 
23. சுகாசனர் 
24.லிங்கோத்பவர் 
25. நடராஜர்

சிவபெருமானுக்கு பிரதி மாத பெளர்ணமி அபிஷேகப் பொருள்களும் பலனும்

ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை,
மாதம் - அபிஷேகப் பொருள் - பலன்
சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை -கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் -கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி -குழந்தை பாக்கியம் 
பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் -மனைவி, மக்கள், உறவினர் உதவி

மஹா அன்னாபிஷேகம்

மஹா அன்னாபிஷேகம்




உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை. அன்னம் எனும் உணவே அனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன.
தைத்ரீய உபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறை சாற்றுகின்றன. அதர்வண வேதத்திலுள்ள அன்னபூர்ணோ உபநிஷத் அன்னத்தின் மேன்மைகளைக் கூறுகின்றது.
அன்னம் ந நிந்த்யாத் - அன்னத்தை நிந்தனை செய்யக் கூடாது.
அன்னம் ப்ராணாவோ அன்னம் - எது உயிர் கொடுக்கின்றதோ அதுவே அது இல்லாமல் போனால் அதுவே உயிர் எடுக்கின்றது. எது ஒன்றை ஒருவர் உண்கின்றாரோ அதுவே அவரை உண்கின்றது.
அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னம் - அன்னமே இறை வடிவம். மஹேஸ்வரப் பெருமானே அன்னத்தின் வடிவத்தில் இருக்கின்றார். அன்னமே தானாக இருக்கின்றேன் என்று வேதநாயகனே கூறுவதாக வேதங்கள் விளக்குகின்றன.
தெய்வங்களுக்குச் செய்யப்படும் யாகத்தில் அன்னம் மிகப் பெரும் பங்கு வகிக்கும். அந்த அன்னம் மட்டுமே ஹவிர் பாகமாக - தெய்வத்திற்கு உணவாக, பெரும் மரியாதையாக செய்யப்படுவது.
ஹோமத்திற்கான ஹவிர் பாகத்தைப் பெறுவதற்கு என்றும் தெய்வங்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன.
அன்னம் எனும் ஹவிர் பாகத்திற்காகப் பெரும் சண்டையே நடந்திருப்பதைப் புராணங்கள் அனேகம் பகர்கின்றன.சிவனுக்குரிய ஹவிர் பாகத்தைத் தர மறுத்த தக்ஷனின் தலையைக் கொய்திருக்கின்றார் வீரபத்திரம் வடிவம் கொண்ட சிவன்.
இறை வடிவம் கொண்ட அன்னத்தினை அன்னலாருக்கு அபிஷேகம் செய்து காண்பது அளவிற்கடந்த புண்ணியங்களைத் தரவல்லது.
தானத்திலும் மிக உயர்ந்ததாகக் கூறப்படுவது அன்ன தானம் மட்டுமே.உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று புறநானூறும், மணிமேகலையும் அன்னதானத்தின் மகிமையைக் கூறுகின்றன.
உணவு அளிப்பதனால் உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் குளிர்ந்ததால் உண்டாகும் வாழ்த்துக்கள் என்றும் வீண்போவதில்லை.
சிவலிங்க வடிவம் ஓர் ஒப்பற்ற வடிவம்.
ELLIPTICAL எனும் நீள்வட்ட வடிவம் கொண்ட சிவ வடிவம் எண்ணற்ற அர்த்தங்களை நமக்குத் தருகின்றது. சிவ லிங்க வடிவம் எல்லையற்ற ஒன்றைக் குறிப்பிடுகின்றது. பிரபஞ்சத்தின் சக்தியைக் குறிக்கக் கூடியது. உலகம் தோன்றிய விதத்தையும், இயற்கையையும், பிரபஞ்ச வடிவத்தையும் விவரிக்கக் கூடியது. சூரியனைச் சுற்றிக் கோள்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையான சிவலிங்க வடிவத்திலேயே சுற்றுகின்றன. ஆற்றில் அடித்துவரப்படும் கூழாங்கற்கள் கூட சிவ வடிவத்திலேயே இருக்கின்றன. சிவம் எனும் ஆற்றல் இந்த பிரபஞ்சம் முழுதும் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
அன்னம் எனும் அரிசியின் வடிவம் கூட நீள்வட்ட வடிவம் தான். அன்னமும் ஒரு சிவ வடிவம் தான்.
அண்டம் முழுக்க சிவ வடிவம் தான்.
சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகம் முழுக்க சிவ வடிவமாகவே இருப்பதால் எண்ணற்ற சிவாலயங்களை தரிசனம் செய்த பெரும் பாக்கியம் கிடைக்கும்.
சிவ பெருமானை அபிஷேக பிரியர் என்றும், மஹா விஷ்ணுவை அலங்கார பிரியர் என்றும் கூறுவார்கள்.
சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யக் காண்பது கண்கள் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பால், தயிர் போன்ற பொருட்கள் கொண்டு செய்யப்படுவது போல உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைஅனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு செய்வது பெரும் புண்ணியத்தினைத் தரக்கூடியது.
வடித்த சாதத்தில் தீர்த்தம் விட்டு ஆறவைத்துப் பிறகு சிவவடிவத்தை முழுவதும் மறைக்கும் படியாக அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ஆகும்.
சிதம்பரம் போன்ற ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும்.
அன்னாபிஷேக பிரஸாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் அனைத்தும் அனைவருக்கும் அன்னதானமாக அளிக்கப்படும்.
ஒவ்வொரு மாத பெளர்ணமியன்றும் சிவபெருமானுக்கு என்று சிறப்பான அபிஷேகப் பொருள் உண்டு.ஐப்பசி மாதத்து பௌர்ணமியில் அன்னம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது போல ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் ஒரு சிறப்பான பொருள் கொண்டு அபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்றும் அவற்றிற்கான பலன்களையும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை,
மாதம் - அபிஷேகப் பொருள் - பலன்
சித்திரை பௌர்ணமி - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி பௌர்ணமி - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி பௌர்ணமி - முக்கனி = மா, பலா, வாழை -கேட்ட வரம் கிட்டும்
ஆடி பௌர்ணமி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி பௌர்ணமி - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி பௌர்ணமி - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி பௌர்ணமி- அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை பௌர்ணமி - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி பௌர்ணமி - பசு நெய் & நறுமண வென்னீர் -கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை பௌர்ணமி - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி பௌர்ணமி - பசுநெய்யில் நனைத்த கம்பளி -குழந்தை பாக்கியம் பங்குனி பௌர்ணமி - பசுந்தயிர் -மனைவி, மக்கள், உறவினர் உதவி

அன்னாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, அந்த அன்னம் முழுக்க அன்னதானம் செய்யப்படும்.
அன்னாபிஷேகக் காட்சி அளவற்ற இன்பம் தரக்கூடியது.
அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வதால், அன்னதானம் செய்த புண்ணியமும் கிடைக்கின்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கு கொள்வோம் ! அளவற்ற புண்ணியம் பெறுவோம் !!