விபூதியின் பெருமை
சிவபெருமானை வழிபடும் சைவர்களுக்கு சிவச் சின்னமானதாகவும், முக்கியமானதாகவும் அமைவது விபூதி.
பஸ்மம், ரக்ஷை, திருநீறு என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுவது விபூதி.
விபூதி என்பதற்கு மொழியியல்படி, பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
இறையருள்
பெற்றது, உயர்விலும் உயர்வானது, முழுமையானது, எங்கும் நிறைந்திருப்பது,
உள்ளத்தை தூய்மைப்படுத்துவது, வணங்கத்தக்கது, செழுமை நிறைந்தது, வளங்களைத்
தரக்கூடியது, சித்திகளைத் தருவது, வேண்டும் வரங்களைத் தருவது,
அலங்கரிப்பது.
சிவபெருமானின்
திருமேனி முழுவது அலங்கரிக்கக் கூடிய ஒரே பொருள் விபூதி மட்டுமே. பொன்னார்
மேனியனின் திருமேனியில் மேவியிருப்பதால், விபூதி பொன்னிறமாக, தங்கத்
துகள்களாக மின்னுகின்றதாம் (பஸ்மோத்தூளித விக்ரஹாய நம: - ஸ்ரீ
சிவாஷ்டோத்தரம்)
விபூதி காட்டும் தத்துவங்கள் எண்ணற்றவை.
இறந்தபின்
அனைவரும் சாம்பலாகத் தான் வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. ஆகையால்,
இறைவன் முன் அனைவரும் சமம் தான் என்பதையும் சுட்டுகின்றது.
உலகம் அக்னியால் தூய்மையடைவது போல விபூதியால் ஆன்மாக்கள் தூய்மையடைகின்றது.
வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும், தமிழ்த் திருமுறைகளும் விபூதியின் மகிமையைப் போற்றிப் பறைசாற்றுகின்றன.
ஒரு
சமயம், வித்துன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்னும் மூன்று அரக்கர்கள்
பறக்கும் தன்மை கொண்ட பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கொண்டு,
தேவர்களை வருத்தினர்.
அரக்கர்களின்
தொல்லை தாங்காத தேவர்கள் பிரம்மா, விஷ்ணுவிடம் முறையிட, இவர்களை அழித்து
சாம்பலாக்க, சிவபெருமானால் மட்டுமே முடியும் என்று அறிந்து, சிவனை நோக்கி
பிரார்த்தனை செய்தனர்.
பிரம்மா தனது மனதிற்குப் பிடித்தமானதும், அவர் தோற்றுவித்தத்தும் ஆகிய மானச சரோவர் என்னுமிடத்திலும்,
மஹா
விஷ்ணு தான் பள்ளி கொண்டிருக்கும், பாற்கடலில் சேரும் நதியாகிய விரஜா
எனும் நதியின் கரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவமிருந்து யாகம்
செய்தனர்.
யாகத்தின் பஸ்மம் (சாம்பல்) போல அரக்கர்கள் அழிய பிரார்த்தனை செய்தனர்.
மஹாவிஷ்ணு,
சிறப்பான மந்திரங்களால் யாகம் செய்தார். அது வேதங்களில், விபூதியைப்
போற்றக் கூடிய, மஹாநாராயண உபநிஷத் எனும் மந்திரமாக அமைந்தது.
பொதுவாக
சிவாலயங்களில், விபூதியை அபிஷேகம் செய்யும்போது இந்த மந்திரங்களைத் தான்
சொல்வது மரபு. (ஆத்மாமே சுத்யந்தாம் ஜ்யோதிரஹம் விரஜா விபாப்மா பூயாஸம்
ஸ்வாஹா)
இந்த
மந்திரம் - உடல், மனது, வாக்கு, ஆத்மா, அந்தராத்மா என அனைத்தையும் தியாகம்
செய்தால், நமது ஜீவனை சிவபெருமான் தன் உடலில் சாம்பல் போல பூசிக்கொள்வார்
என்கின்றது (மஹா நாராயண உபநிஷத்தின் முழுமையான அர்த்தம் - மிகவும்
அற்புதமானது.)
பிரம்மா,
விஷ்ணு - இருவரின் தவத்திற்கு இணங்கி, சிவபெருமான் மூன்று அரக்கர்களையும்,
தன் மந்தகாசப் புன்னகையால் மட்டுமே எரித்து சாம்பலாக்கினார். தேவர்கள்
மகிழ்ந்தனர்.
(ஒரு
உபரி தகவல் : முப்புரங்களை எரித்தபொழுது, அக்கோட்டைகளின் ஒரு பாகம்
மட்டும் முழுதும் எரியாமல் (வேகாமல்) பூமியில் விழுந்தது. அந்த இடம்
வேகாக்கொல்லை என்று அழைக்கப்படுகின்றது.
இவ்விடம்,
தமிழகம், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு அருகாமையில் உள்ளது. இவ்வூரைச்
சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் மண் செங்கல் அமைக்க உதவினாலும், இந்த
ஊர் மண் மட்டும் செங்கல் சுடுவதற்கு பயன்படாது. வேகாத மண் கொண்ட நிலம்
என்பதால் வேகாக் கொல்லை என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் அருமையான
சிவஸ்தலம் உள்ளது)
சிவபெருமான் உடல் முழுவதும் பரவியிருக்கும் விபூதியை, சிவச் சின்னமாக, புனிதமான பொருளாக சைவர்கள் மதிக்கின்றார்கள்.
விபூதி தயாரிக்கும் முறையை சாஸ்திரங்கள் அற்புதமாக விளக்கியுள்ளன.
காராம்பசுவின் சாணத்தை நிலத்தில் விழும் முன் பிடித்து, அதன் கோமயத்தால் ஈரமாக்கி, உருண்டைகள் பிடித்து காய வைக்க வேண்டும்.
அதை,
திரிபுர ஸம்ஹார காலம் என்று வர்ணிக்கக் கூடிய கார்த்திகை மாத
பெளர்ணமியும், கிருத்திகை நக்ஷத்திரமும் இணைந்த கார்த்திகை தீபத்
திருநாளில், எரியூட்ட வேண்டும். (சில ஆன்மீகர்கள் அன்று ஏற்றப்படும்,
சொக்கப்பனையில் தான் எரிக்கப்பட வேண்டும் என்பர்)
அது
திறந்த வெளியில் தானாகவே ஆறவேண்டும். மார்கழி மாதம் முழுவதும் - பனி
பொழிந்து, அந்த சாணச் சாம்பல் சற்றே நிறம் மாறிக்கொண்டிருக்கும். தை மாதம்
முழுவதும் அச்சாம்பலை கிளறிக்கொண்டேயிருக்க வேண்டும். பனி பெய்ய பெய்ய
சாம்பலின் கரிய நிறம் மாறி வெளிறும்.
மாசி
மாதத்தின் மஹா சிவராத்திரியின் காலை நேரத்தில் அச்சாம்பலை எடுத்து,
வஸ்திரகாயம் செய்ய வேண்டும். (வஸ்திரகாயம் - ஒரு பானையின் வாயில் தூய்மையான
துணியைக் கட்டி, சாம்பலை எடுத்து, துணியின் மேல் கையால் தேய்க்க தேய்க்க,
மென்மையான துகள்கள் பூசிக்கொள்ளத் தகுந்த விபூதியாக பானையினுள் சேரும்).
அதை, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பிறகு, சிவபக்தர்கள் தரிக்க வேண்டும்.
மேலே சொன்ன முறை மிக மேன்மையான முறை. மற்றும் சில முறைகளும் உள்ளன. (சாந்திகபஸ்மம், காமதபஸ்மம், பெளஷ்டிகபஸ்மம்)
பரமசிவனின்
ஐந்து முகங்களிலிருந்தும் தோன்றிய நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு
ஆகிய பஞ்சபூதங்களின் தன்மையை விபூதி கொண்டிருக்கின்றது.
விபூதியை
அனைத்து நிலையிலிருப்பவரும் பூசிக்கொள்ளலாம் என்று ஸூதஸம்ஹிதை
வலியுறுத்துகின்றது. (பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாசம்)
சிவாலயங்களில்,
விபூதியை பிரஸாதமாக வலது உள்ளங்கையில் மட்டுமேதான் வாங்க வேண்டும்.
(உள்ளங்கை பிரம்ம & விஷ்ணு பாகமாகக் கருதப்படுகின்றது. பிரம்மா, விஷ்ணு
தவமிருந்து பெற்றதால் - அவர்களின் பாகமாகிய உள்ளங்கையில்தான் பெற
வேண்டும்)
ஆண்கள்
விபூதியை திரிபுண்டரமாகவும் (விபூதியைத் தண்ணீரில் குழைத்து நெற்றியில்
மூன்று கிடைக்கோடுகளாகவும்), உத்தூளனமாகவும் (தண்ணீரில்லாமல் வெறும்
விபூதியை) அணிந்து கொள்ளலாம் என்றும்,
பெண்கள் - தண்ணீர் குழைக்காமல் மட்டுமே இட்டுக்கொள்ள வேண்டும் (உத்தூளனமாக) என்றும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
பெண்கள்
- ஆட்காட்டி விரல் அல்லது மோதிர விரலால் விபூதியை எடுத்து, நெற்றியில்
ஒற்றைக் கோடாக மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும். (சிவ தீட்சை பெற்ற பெண்கள்
மூன்று கோடுகளாக அணியலாம்)
விபூதிப் பூசிக்கொள்ளும் போது, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தையோ அல்லது சிவசிவ என்றோ சொல்லிக்கொண்டேதான் தரிக்க வேண்டும்.
ஆண்கள் - விபூதியை தண்ணீரில் குழைத்து, ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் கொண்டு மூன்று கிடைக்கோடுகளாக,
நெற்றியிலும்,
மார்பிலும், தொப்புளுக்கு மேலும், முழங்கால்கள் இரண்டிலும், இரு
தோள்களிலும், இரு முழங்கைகளிலும், மணிக்கட்டுகள் இரண்டிலும், இரு விலாப்
புறங்களிலும், கழுத்திலும் தரிக்க வேண்டும். (சிலர் இரு காதுகளிலும், சிலர்
மேல் முதுகிலும், பின்கழுத்திலும் தரிப்பார்கள்)
காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும், பூஜை காலங்களிலும் மிக நிச்சயம் விபூதி தரிக்க வேண்டும்.
பஸ்மாபிஷேகம்
- பல்வேறு தீட்டுக்களை அகற்றவல்லது. குளிக்கும் நீரில் விபூதியைத் தூவி
விட்டு, அந்த விபூதி கலந்த தண்ணீரில் தலை முழுக எவ்விதமான தீட்டுக்களும்
அகன்றுவிடும்.
பயம் நீங்கவும், ஜுரம் நீங்கவும், உடல் உபாதைகள் நீங்கவும் விபூதி பயன்பட்டிருக்கின்றது.
விபூதி இட்டுக்கொண்டிருப்பவரை சிவ அம்சமாகவேக் கருதி வழிபடும் வழக்கம் உண்டு.
விபூதியின் புனிதத்தையும் அதன் மேன்மையையும் பல்வேறு புராணங்களிலும், திருமுறைகளில் பல்வேறு இடங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்னிரு திருமுறைகளில் குறிப்பிடப்படும் சில சம்பவங்களை மட்டும் இங்கே காண்போம்.
சூலை
(தாங்காத வயிற்று வலி) நோயால் துடிதுடித்த அப்பர் சுவாமிகள், தனது
தமக்கையார் கையால் விபூதி பெற்றவுடன், வலி நீங்கப் பெற்று சைவத்திற்கு
பெரும் தொண்டாற்றினார்.
சமண
சமயத்தைச் சார்ந்திருந்த கூன் பாண்டியன் எனும் மன்னன் மதுரையை அரசாண்டு
கொண்டிருந்தான். அவனுக்கு தீராத வெப்ப நோய் இருந்தது. அதை நீக்க அவன் மனைவி
மங்கையர்க்கரசியார் சிவபெருமானை வேண்டினாள். அவள் கனவில் சிவன் வந்து
திருஞான சம்பந்தரைக் கண்டு வந்தால் நோய் நீங்கும் என்றார்.
மங்கையர்க்கரசியாரும், அதன்படியே, திருஞான சம்பந்தரை தரிசித்து, தன்
குறையைச் சொல்ல, அவர் 'மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு' எனத்
தொடங்கும் 'திருநீற்றுப் பதிகம்' பாடி விபூதியை, கூன் பாண்டியனின் உடலில்
பூசியவுடன், பாண்டியனின் நோய் நீங்கியது. கூன் பாண்டியன் சைவத் தொண்டு
ஆற்றினான்.
சிவச்சிந்தனையில் சிறந்து விளங்கிய சேரமான் பெருமான், அரசு தாங்கி, ஒரு சமயம், பட்டத்து யானை மீது அமர்ந்து நகர்வலம் வருகின்றார்.
அப்பொழுது,
துணிகளை வெளுக்கும் தொழிலாளர், உழமண் எனும் வெள்ளை நிற மண்ணைக் கூடையில்
சுமந்து வர, நீரில் நனைந்த அந்த மண் அவரின் மேனி முழுவதும் வழிந்து, விபூதி
பூசியது போல தோற்றம் தரச் செய்தது.
பட்டத்து
யானையிலிருந்து, சலவைத் தொழிலாளியின் உடல் முழுவதும் திருநீறு
பூசியிருப்பதைக் கண்ட சேரமான் பெருமான், யானையிலிருந்து உடன் இறங்கி, அவர்
பெரும் சிவத்தொண்டர் போலும் என்று எண்ணி, சலவைத் தொழிலாளியை வணங்கினார்.
அரசன்
தன்னைக் கண்டு வணங்கியதால், அச்சமுற்ற சலவைத் தொழிலாளி தன் நிலையை
உணர்த்த, வெள்ளை உழமண் விபூதியை நினைவு படுத்திய காரணத்தினாலேயே, அவரை
வணங்க முற்பட்டதை சேரன் விளக்கி, பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார்.
சிவபக்தியில்
சிறந்த ஒரு புகழ்ச்சோழ மன்னர், தனக்குக் கப்பம் கட்டாத மன்னன் மீது
படையெடுத்து வர ஆணையிட, படைகளும் எதிரி நாட்டை வென்று, தோல்வி கண்ட
வீரர்களின் தலைகளைக் கொண்டு வந்து, சோழனிடம் வெற்றிப் பரிசாக அளிக்க, அதைக்
கண்டுகொண்டு வந்த மன்னன், அந்த வீரர்களின் தலைகளுள் - ஒரு தலை மட்டும்
குடுமி கொண்டு, சிவச்சின்னமாகிய விபூதி அணிந்திருப்பது கண்டு அதிர்ந்து,
ஒரு சிவனடியாரைக் கொல்லக் காரணமாகிவிட்டோமே என்று மனம் நொந்து, சோழன்
அக்னியை மூட்டி அதனுள் விழுந்தான்.
சிவபெருமானிடம்
அதீத பக்தி கொண்ட ஏனாதிநாதனார் என்பவர், படைகளுக்கு வாள் பயிற்சி
அளிப்பவர். அவருடன் பல முறை போராடி தோல்வியுற்ற ஒருவன் அவரை வீழ்த்த, ஒரு
உபாயம் செய்தான்.
அவன்
ஏனாதிநாதரைத் தனிமையில் சமர் செய்ய அழைத்து, அச்சமயம் இவன்
சிவச்சின்னமாகிய விபூதியைத் தரித்துக்கொண்டு, அதை கேடயத்தால் மறைத்துக்
கொண்டு, போரிட வந்து, ஏனாதிநாதர் அருகில் வந்ததும், கேடயத்தை நீக்க,
ஏனாதிநாதர் எதிரியாயிருப்பவன், தன்னைக் கொல்லவந்தவன் திருநீறு
அணிந்திருப்பது கண்டு, அவனை சிவ அம்சமாகவேக் கண்டு, சண்டை செய்யாமல்
பணிந்து மடிந்து சிவலோகம் அடைந்தார்.
மெய்ப்பொருள்
எனும் அரசன் சிவபக்தி நிரம்பி, தனது அரசை நீதிமுறை தவறாது ஆட்சி செய்து
வந்தார். சிவ தத்துவங்களில் மெய்யான உண்மைகளை மக்களுக்கு அறிவிப்பதில்
தேர்ந்தவராக இருந்ததால் மெய்ப்பொருள் என்று போற்றப்பட்டார்.
இவரின்
எதிரி தேசத்து அரசன், தமது வலிமையால் இவரை வெல்லமுடியாது என எண்ணி, சிவச்
சின்னமாகிய விபூதி தரித்து, ஓலைச் சுவடிகளுடன், சிவனடியார் வேடத்தில்
வந்து, அரசனிடம் ஆகம உட்ப்பொருள் உணர்த்த வந்தேன் எனக் கூறினான்.
மெய்ப்பொருள்
அதைக் கேட்க ஆவலாகக் கண் மூடி அமர, அச்சமயம் ஓலைச்சுவடிகளுள் ஒளித்து
வைத்திருந்த கத்தியை எடுத்து, மெய்ப்பொருளை வெட்டினான்.
சத்தம்
கேட்டு வந்த மெய்க்காப்பாளன், எதிரியை வெட்டக் கையை ஓங்க, ரத்தம் சிந்திக்
கொண்டு, மரணத்தின் தறுவாயில் இருந்தபோதும், மெய்ப்பொருள், இவர் எதிரியாக
இருந்தாலும், சிவனடியார் கோலத்தில் இருப்பதால், இவரும் சிவாம்சமே, ஆகவே,
இவருக்கு எவ்வித தொல்லையுல் இல்லாமல் எல்லை வரை பத்திரமாகக் கொண்டு விடக்
கட்டளையிட்டான்.
அவ்வண்ணமே மெய்க்காப்பாளன் செய்தைக் கூற, மெய்ப்பொருள் அதன் பிறகு உயிரைவிட்டு சிவபதம் அடைந்தார்.
விபூதி
நோய்களை நீக்கும் அருமருந்தாகவும், சிவத்தொண்டிற்கு வழிகாட்டியாகவும்,
சிவசிந்தனை மேலிடுவதற்கு உதவும் சாதனமாகவும் விளங்குகின்றது.
விபூதீரைச்வர்யம் - என்ற சொல் - விபூதி ஐஸ்வர்யங்களைத் தரவல்லது - என்ற அர்த்தம் கொண்டது.