Sunday 25 December 2016

இடரினும் தளரினும் எனதுறுநோய் – பொருள்

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்தபோது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர் களைக் காத்த வேதநாயகனே ! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப்பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன்திரு வடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றி ருக்கும் சிவபெருமானே ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தரவில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா ?


வாழினும் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேன்அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கை யையும், பிறைச்சந்திரனையும் அணிந்த சிவபெருமானே ! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத் திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறி யினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக ) எனக்குப் பொருள் தாராவிடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா ?
நனவினும் கனவினும் நம்பாஉன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றை யையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி யுள்ளவனே ! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந் திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ ? திரு வாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவை யான பொருளை எனக்குத் தாராவிடில், அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரிஎழ முனிந்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே ! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும்பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத் தையும் உடைய மறையவனே ! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதலல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய்உன் னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனி யில் அணிந்துள்ள சங்கரனே ! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே ! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ. ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியு மாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத் துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
சீருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும்படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! தீவினை யால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வுதரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவையான பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே ! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன்உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பொருள் / விளக்கம் :
புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட் படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே ! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா ! உன் திரு வடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே ! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும்முறை இதுவோ ? ( உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத் ) தேவைப்படும் பொருளை எனக்குத் தாராவிடில் அஃது உனதின்னருளுக்கு அழகாகுமா ?
அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.
பொருள் / விளக்கம் :
அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.

திருநீற்றுப் பதிகம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே
திருநீறானது, மந்திரச் சொல் போன்று அச்சம் நீக்கி, வேண்டிய நற்பயனைத் தருவது ஆகும். வானவர்கள் திருநீற்றைஅணிகின்றனர். மனிதர்களுக்கு இது, வானவர்களை விட மேலானதாகி விளங்குவது. அழகினைத் தந்து பொலியும்திருநீறு, துதிக்கப் படும் பொருளாக உள்ளது. உமையவளைப் பாகங் கொண்ட ஆலவாய் அண்ணலாகிய ஈசனின்திருநீறு இத்தகையது ஆகும்.
(2)
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
வேதத்தால் போற்றப் படுகின்ற பெருமையுடையது திருநீறு. உலக வாழ்க்கையில், ஏற்படும் பிணிகளையும், மனதால் ஏற்படும் துயரங்களையும், தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மை, ஓதத் தகுந்த பெருமையுடையதும், உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் விளங்குவதாகும். இது திருவாலவாய் அண்ணலாக விளங்கும் ஈசனுக்கு உரிய திருநீறு.
(3)
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே
திருநீறு, முக்தி இன்பத்தை தருவது. முனிவர் பெருமக்கள் அணியும் பெருமை உடையது. எக்காலத்திலும்மேலானதாக விளங்கி நலம் தருவது. இத்தகைய திருநீற்றின் மகிமை அறிந்து, சிவனடியார்கள் போற்றுகின்றனர்.திருநீறானது மன்னுயிர்களுக்கு, சிவபக்தியைத் தருவதாகும். அதனைப் போற்றி வாழ்த்த இனிமை நல்கும். எட்டு வகையான சித்திகளைத் தரவல்லது. அது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(4)
காணஇனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணிஅணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே
திருநீறு அணிந்தவர்களைக் காணும் அன்பர்கள் இனிமைக் கொள்வார்கள். அத்தகைய திருநீற்றை விரும்பி அணிபவர்களுக்கு பெருமை கொடுக்கும். வல்லமை தரும். இறப்பினைத் தடுக்கும். நல்லறிவைத் தரவல்லது திருநீறு. மன்னுயிர்களுக்கு உயர்வைத் தரும் ஆற்றல் உடையது இத்திருநீறு. இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(5)
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே
திருநீறு மெய்யில் பூசி அணிய, இனிமை சேர்க்கும். புண்ணியம் சேர்க்கும். திருநீற்றின் பெருமை பேச இனியது. உலக பந்தத்தால் உண்டாகும் ஆசைகளை நீக்கி, உயர்ந்த நிலைக்கு செல்ல வழி வகுக்கும். எல்லாவற்றிர்க்கும் அந்தமாகத் திகழ்வது திருநீறு. தேசமெல்லாம் புகழ்ந்து போற்றும் சிறப்புடைய இத்திருநீறு, இது ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(6)
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே
பொன்போன்ற பெரிய செல்வமாக விளங்குவது திருநீறு, அவலமாகும் துன்பத்தைப் போக்குவதும், மனத்தில் வருத்திக் கொண்டிருந்து துன்புறுத்தும் நெஞ்சக் கனலைத் தணித்து விளக்குவதும், சிறப்பினை அளிப்பதும், எல்லாநிலைகளிலும் பொருந்தி விளங்கிச் சிறப்பு தருவதும் திருநீறு. புண்ணியத் தன்மை கொண்டதுடன், புண்ணியம் செய்த பெருமக்கள் விரும்பி பூசி, மேலும் பொலிவு கொள்வதற்கும் காரணமாவது திருநீறு. செல்வம் மிக்க மாளிகைகள் சூழ்ந்த திரு ஆலவாயில் வீற்றிருக்கும் ஈசனார்க்கு உரிய திருநீறு, இத்தகைய சிறப்பினை உடையதாகும்.
(7)
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
முப்புரத்தை எரித்துச் சாம்பலாக்கியது திருநீறு. இம்மை, மறுமை, ஆகிய இரண்டினுக்கும் உயிர்களுக்குத் துணையாக இருப்பது திருநீறு. நித்தியமாயும், உயர்ந்த பொருளாயும் பயின்று , நுகரும் பொருளாக உடையது நீறு. அது பாக்கியமாக இருந்து விளங்கும் சிறப்புடையது. மாயையின் வயப்பட்டும் சோர்வுற்றும் தடைப்படுத்தும் உறக்க உணர்வினைத் தடுத்து புத்துணர்ச்சி தந்து தூய்மைப்படுத்தும் இயல்புடையது. அத்தகைய திருநீறு, கூர்மையான சூலப் படையுடைய திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(8)
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவதுநீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் கும்திரு மேனி ஆலவா யான்திருநீறே
இராவணன் திருநீறு அணியப் பெருமையுறச் செய்தது. எண்ணத்தால் தகுதியாக்கிப் போற்றி வழி படுவதற்கு உரியது திருநீறு. பராபரனைப் போன்று துதிக்கப் படும் பொருளாக விளங்குவதும், பாவத்தைப் போக்குவதும் திருநீறு.தராவனமாக இருப்பது திருநீறு. அது தத்துவமாகவும் விளங்கி நிற்பது. அத்தகையது, அரவம் அணைந்து விளங்கும்திருமேனியராகிய திரு ஆலவாய் அண்ணலுக்கு உரியதாகிய திருநீறு ஆகும்.
(9)
மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே
திருமாலும், பிரம்மனும் அறிவதற்கு அரியதாகிய வண்ணத்தை உடையது திருநீறு. தேவர்கள் தமது மெய்யில் பூசிமகிழ்வது திருநீறு. பிணிகளை நீக்கி இன்பத்தை தரவல்லது திருநீறு. அத்தகைய சிறப்புடையது, நஞ்சினை உண்டமிடற்றுடைய ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(10)
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயன் திருநீறே
சமணர்களும், சாக்கியர்களும் திகைக்கும் தகைமையில் காட்சி தருவது திருநீறு. திருநீற்றை நெஞ்சில் பதித்த போதும் இனிமையைத் தரவல்ல அத்தகைய தெய்வீகம் உடையது. எண் திசையில் உள்ள சிவமாகிய மெய்ப் பொருளைச் சரணடைந்த பெருமக்களும் ஏத்தும் சிறப்புடையது திருநீறு. அத்தகையது, தேவர்கள் பணிந்து ஏத்தும் திரு ஆலவாய் அண்ணலாகிய ஈசனுக்கு உரிய திருநீறு ஆகும்.
(11)
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
வலிமை மிக்க இடப வாகனத்தில் விளங்குகின்ற ஆலவாய் அண்ணலாரின் திருநீற்றைப் போற்றித் துதித்தஞானசம்பந்தர், மன்னவனாகிய கூன் பாண்டியனுடைய தீமையான பிணி யாவும் தீரும் வகையில் தேற்றிச் சாற்றிய இத் திருப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம

ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்கு ஓதவேண்டிய பதிகம்


3.022.திருப்பஞ்சாக்கரப்பதிகம்
பண் – காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்;
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.
தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள். பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.
மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன;
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.
மந்திரங்களாகவும், நான்கு வேதங்களாகவும் ஆகித் தேவர்களுடைய சிந்தையினுள்ளும் நின்று அவர்களை ஆட்கொண்டு நன்னெறி பயப்பது திருவைந்தெழுத்தே ஆகும். செந்நிற அழலோம்பிச் செம்மை நெறியில் நிற்கும் வேதியர்க்கும் காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்தியா காலங்களிலும் செபிக்க வேண்டிய மந்திரம் திருஐந்தெழுத்தேயாகும்.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர்
ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.
உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி, ஞானவிளக்கம் பெறச் செய்து, அறிவைப் பெறும் வாயில்களால் நல்ல மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுவார்கட்கு அறியாமையால் வரும் துன்பங்களைக் கெடுப்பன திருவைந்தெழுத்தேயாகும்.
நல்லவர் தீயர் எனாது, நச்சினர்
செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ;
கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே.
புண்ணியர், பாவிகள் என்ற பாகுபாடு இன்றி விரும்பிச் செபிப்பவர்கள் யாவரேயாயினும் அவர்களுடைய மலங்களை நீக்கிச் சிவமுத்தி காட்டும் ஆற்றலுடையன திருவைந்தெழுத்தாகும். எமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும் காலத்தும், மரணத்தறுவாயில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவனவும் திருவைந்தெழுத்தேயாகும்.
கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து
அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை
அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே.
வலிய மன்மதனின் அம்பானது தேன்துளிர்க்கும் தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை என்ற ஐந்து மலர்கள் ஆகும். இவ்வுலகிலுள்ள பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும். சோலைகள் அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என ஐந்தாகும். பாம்பின் படம் ஐந்து ஆகும். செபிப்போருடைய கைவிரல்கள் ஐந்தாகும். இவ்வாறு ஐவகையாகக் காணப்படும் யாவற்றுக்கும் ஒப்ப, மந்திரமும் திருவைந்தெழுத்தேயாகும்.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்,
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்,
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே.
தும்மல், இருமல் தொடர்ந்து வந்த பொழுதும், கொடிய நரகத் துன்பத்தை அனுபவிக்க நேரும் பொழுதும், முற்பிறப்புக்களில் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், இப்பிறவியில் நாள்தோறும் ஓதிவந்ததன் பயனால் மறுபிறவியிலும் வந்து துணையாவது திருவைந்தெழுத்தேயாகும்.
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்;
பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும்
மாடு கொடுப்பன; மன்னு மாநடம்
ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே.
இறப்பு, பிறப்பு இவற்றை அறுத்து இத்திருமந்திரத்தைப் பாராட்டிச் செபிப்பவர்களின் துன்பங்களை நீக்குவன. தினந்தோறும் செல்வங்கள் யாவும் கொடுப்பன. நிலை பெற்ற நடனத்தையாடும் சிவபெருமான் மகிழ்வன திருவைந்தெழுத்தேயாகும்.
வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண,
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.
கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச்
சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே.
திருமாலும், பிரமனும் காணவொண்ணாத சிறப்புடைய திருவடிகளின் பெருமையை நாள்தோறும் பலமுறை பேசிப் போற்றும் பக்தர்கட்கு ஆர்வமாக விளங்குவன திருவைந்தெழுத்தாகும்.
புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே.
புத்தர்களும், சமணர்களும் கூறும் பொய் வார்த்தைகளை மனத்திற் கொள்ளாத தௌந்த சித்தத்தவர்களால் உறுதியுடன் ஓதப்படுவன திருவைந்தெழுத்தாகும். சகல சக்திகளுமுடைய திருநீற்றை அணிபவர்களுடன் போர்புரிய வரும் பகைவர்களை எதிர்த்து அம்புபோல் பாய்ந்து அழிக்கவல்லன திருவைந்தெழுத்தேயாகும்.
நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை
கற்றவன் காழியார் மன்னன் உன்னிய
அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே
நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள் வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.
திருச்சிற்றம்பலம்

திருவாசகம்-சிவபுராணம் – பொருள் / விளக்கம்


திருச்சிற்றம்பலம்
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
பொருள்:
நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.
குறிப்பு:
1. மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற
திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல்
வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது
அவருடைய பணிவன்பின் வெளிப்படை.
2. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப்
போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன.
வேதங்கள் இறைவனுடைய இயல்பு கூறுகின்ற போது,ஆகமங்கள் அப்பெருமானை எவ்வகைஅடையலாம் என்பது பற்றி நமக்குக் காட்டுகின்றன. வேதங்கள் அறிவானால் ஆகமங்கள்
அந்த அறிவின் பயன்பாடு. இவ்வாறு ஆகமங்கள் நமக்கு இறைவனின் அருகில் செல்லும்
வழி காட்டுவதாலும், ஆகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாலும் இறைவனை,
“ஆகம நெறி தந்து அருகில் வரச் செய்கின்ற வள்ளல்” எனப் போற்றுகின்றார்.
3. இறைவன் ஒருவனே. (ஏகம் சத் – வேதம், ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும் – திருமந்திரம்). அவ்விறைவன் பசுக்களாகிய நாம் உய்வுறும்
பொருட்டு பலபல வேடங்கள் தாங்கி நம்மை ஆட்கொள்கிறான்.
2
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
பொருள்:
என்னுடைய வேகத்தைப் போக்கி ஆண்டுகொண்ட மன்னனின் திருவடி வெல்லட்டும்.
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும்.தன்னை விடுத்து நிற்பவர்களுக்கு வெகு தூரத்தில் உள்ள (அரிய பொருளாக உள்ள) பெருமானின் பூப்போன்ற மென்மையான கழல்கள் வெல்லட்டும்.
கைகளைக் கூப்பி வழிபடுவார் உள்ளத்தில் மகிழ்ந்து இருக்கும் மன்னனுடைய கழல்கள் வெல்லட்டும்.
தலை தாழ்ந்து வணங்குவார்களை மிக உயர்ந்த நிலைக்கு ஓங்கச் செய்யும்
பெருங்குணம் வாய்ந்தவனுடைய கழல்கள் வெல்லட்டும்.
குறிப்பு:
1. வேகம் கெடுத்தல் – துயரம் நீக்குதலைக் குறிக்கும். மனத்தின் வேகத்தையும்
(நிலையில்லாமல் அலைபாய்தல்) அதனால் வரும் கேட்டின் வேகத்தையும் குறைத்து
தன் பால் மனத்தை நிலைபெறச்செய்யும் ஈசனின் கருணையையும் குறிக்கும்.
2. பிஞ்ஞகன் – பீலி அணிந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.
(இறைவன் குரண்டாசுரனின் பீலியை அணிந்த விபரம் கந்த புராணம் ததீசி முனிவர் வாக்கில் காண்க.)
3. சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்.
3
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15
பொருள்:
எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டவனின் திருவடி போற்றி.
எம் தந்தை என நின்று அருளுபவனின் திருவடி போற்றி.
ஒளி வடிவானவனின் திருவடி போற்றி.
சிவன் எனப்பெறும் செம்பொருளின் சிவந்த திருவடி போற்றி.
அன்பினில் நிற்பவனான தூயவனின் திருவடி போற்றி.
மாயப் பிறப்பினை நீக்கும் உயர்ந்தோனின் திருவடி போற்றி.
அமைப்பு சிறந்து விளங்கும் திருப்பெருந்துறையில் இருக்கும் நம் தேவனின் திருவடி போற்றி.
குறிப்பு:
1. தேசு – ஒளி
4
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 20
பொருள்:
அடங்காத இன்பம் அருளும் கருணையின் மலை போன்றவனுக்கு போற்றுதல்கள்.
சிவபெருமான் என்னுடைய சிந்தையில் பெருங்கருணையால் வந்திருக்கின்ற காரணத்தால்
அவனுடைய திருவருளே துணையாகக்கொண்டு அவனுடைய திருவடியை வணக்கம் செய்து உள்ளம் மகிழும் வண்ணம் சிவபுராணமாகிய இதனை
முன் செய்த வினைகள் எல்லாம் தீரச் சொல்லுகின்றேன்.
குறிப்பு:
1. “சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”
என்ற இவ்வரிகள் அன்பினால் நிறை நிற்கின்ற அடியவர்க்கு மட்டுமல்லாது தத்துவம்
விரும்புவோருக்கும் பெரும்பொருள் வாய்ந்தது. திருவாசகத்தில் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் கருத்து,
“இறைவன் தானே வந்து ஆட்கொள்கிறான்.” கட்டுண்டு தவிக்கும் பசுக்களாகிய நம் எல்லா
உயிர்களின் பொருட்டு அரியவனாகிய இறைவன் எளிமையாக நிற்பது சித்தாந்தத்தில் காண்க.
அவ்வாறு எளிமையாக வந்திருக்கும் இறைவனைத் தொழுவதற்கும் அப்பெருமானுடைய அருளையே
துணையாகக் கொண்டாலேயே அது முடியும்.
(அருளே துணையாக … அப்பர் சோற்றுத்துறை சென்று அடைவோமே – சம்பந்தர்)
5
கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் 25
பொருள்:
நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன்.
சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று,
வானம், பூமி மற்றும் இவை தவிர மீதி உள்ளன யாவையுமாய், ஒளிமிக்கதாயும்,
அளவிடும் எல்லைகள் எல்லாம் கடந்து உள்ள பெருமானே ! – உன் பெரிய பெரிய தன்மைகளை மோசமான வினைகளில் கிடக்கும் நான் புகழ்ந்து போற்றும் வகை தெரியாது இருக்கிறேன்.
குறிப்பு:
1. பாசத்தால் கட்டுண்ட பசுக்களின் உய்வின் பொருட்டு இறைவனால் நுண்ணுடலும்
(சூக்ஷ்ம சரீரம்) அவற்றின் வினைக்கேற்ற (பரு) உடல்கள் பின்னும் அருளப்பட்டன
என்பது சித்தாந்தம் கூறும் உலகின் துவக்கம்.
2. நுதல் – நெற்றி; இறைஞ்சி – வணங்கி; இறந்து – கடந்து; புகழும் ஆறு – புகழும் வகை.
6
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் 30
பொருள்:
புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும்,
பலவகை மிருகங்களாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும்,
கல்லில் வாழும் உயிராகவும், மனிதராகவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும்
இந்த அசையும் மற்றும் அசையாதவற்றால் ஆன (அண்டம்) முழுதும் சென்று
எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்துவிட்டேன், எம்பெருமானே!
குறிப்பு:
1. விருகம் – மிருகம்; தாவர சங்கமம் – (ஸ்தாவர ஜங்கமம்) சராசரம்.
7
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
பொருள்:
உன்னுடைய தங்கத் திருவடிகளைக் கண்டு இன்று உண்மையாகவே வீடு பேறடைந்தேன்.
நான் உய்யும் பொருட்டு எனது உள்ளத்துள் ஓம் எனும் ஒலியாய் எழுந்த
உண்மைப் பொருளே ! காளையை ஓட்டி வருபவனே ! வேதங்கள்
“ஐயா !” எனப் பெரிதும் வியந்து கூறி ஆழமாகவும் பலபல தன்மைகளைப் பெருகி
ஆராய்ந்தும் காண முயலுகின்ற மிகச்சிறிய பொருளுமாக இருப்பவனே !
குறிப்பு:
1. இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமகளில் மூழ்கியிருப்போருக்கு
இங்கேயே வீடுபேறு – வேதம்.
2. வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்தும், பலபல கோணங்களில் கூறியும்
அவர் தம் பெருமையைக் கூறச் சொற்கள் இல்லாமையை உணர்த்துகின்றன. அத்தகு பெரிய
அவரோ மிகச்சிறியவற்றிலும் நிறைந்துள்ளார். என்ன விந்தை இது ?!
8
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
பொருள்:
வெப்பமாகச் சுடுகின்றவரும், குளுமையாக இருக்கின்றவரும் நீரே.என் உரிமையாளனாக உள்ள மாசற்றவனே ! பொய்மைகள் எல்லாம் அகலும் வண்ணம் வந்து அருள்செய்து,
உண்மை அறிவாக ஒளிவிடும் மெய்ச்சுடரே !
எந்த அறிவும் இல்லாத எனக்கும் இன்பமாம் பெருமானே !
அறிவின்மையைப் போக்கும் நல்லறிவே !
குறிப்பு:
1. சுடர் மிகுவதால் இருளுக்குக் கேடு – பசவண்ணர்.
உள்ளத்தில் மெய்ச்சுடரான இறைவன் வர பொய்யிருளுக்குக் கேடு.
2. வெய்ய – காய்கின்ற/ சூடான; தணிய – குளுமையான.
9
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
பொருள்:
தோற்றம், குறித்த வயது, முடிவு இல்லாதவனே ! நீ உலகங்களையெல்லாம்
தோற்றுவிக்கின்றாய், தொடர்ந்து (அழியாது) இருக்கச் செய்கின்றாய்,
(இறுதியில்) அழிக்கின்றாய், அருள் தந்து உய்யக் கொள்கின்றாய்,
உயிர்களை மாயைக்குள் போக்குவாய் ! நீ என்னை உன்னுடைய அடியார் கூட்டத்தில் புகவைப்பாய்.
மணத்தினும் (வாசனை) நுண்மையான (சூச்க்ஷ்சுமமான) பொருளே !
வெகு தொலைவாகியும், மிக அருகில் இருப்பவனே !
சொல்லிற்கும் சிந்தனைக்கும் எட்டாது நிற்கும் மறை நாயகனே !
குறிப்பு:
1. இறைவனுக்கு பிறவற்றைப் போலத் தோற்றம், வாழ்வு, முடிவு இல்லாமையைக் குறிப்பிட்டு,
அப்பெருமானே மற்ற எல்லாப் பொருள்களுக்கும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
என்ற ஐந்தொழில்கள் மூலம் இயங்கச்செய்கிறார் என்னும் திறத்தை வெளிப்படுத்துகிறார்.
2. ஒப். உன்றன் அடியார் நடுவுற்றிருக்கும் அருளைப் புரிவாய்.
3. மணமானது காண இயலாத நுண்பொருள்களாகப் பரவுகின்றது.
இறைவன் அந்த நுண்மையினும் நுண்மையாக இருக்கிறார்.
4. சேய்மை – தொலைவு; நணியது – அருகில் இருப்பது; மாற்றம் – சொல்.
10
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் ……
பொருள்:
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !
குறிப்பு:
1. வினை நிறைந்த பிறப்பினால் அவதிப்படும் ஆன்மாக்களில் அன்பினால் இறைவன்
திருவடி பற்றுபவர்களுக்குக் கடினமான முறைகளினால் அல்ல, மிகவும் எளிதாகவும் தேனினும்
இனிய ஊற்றாக அவர்கள் உள்ளத்தில் தோன்றி அவர்களுடைய பாச மலம் அறுக்கிறார் சிவபெருமான்.
11
……. வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
பொருள்:
கொடிய வினையில் சிக்குண்டிருக்கும் என்னை
மறைத்து மூடிய மாயையாகிய இருளினை
செய்யத்தகுந்தது, செய்யத் தகாதது என்னும் விதிகளால் கட்டி,
மேலே ஒரு தோலும் சுற்றி, கெட்டுப் போவதாகவும்,
அழுக்கினை உடையதாகவும் உள்ள திசுக்கள் நிறைந்து,
மலத்தினை வெளியேற்றும் ஒன்பது துளைகள் உள்ள வீடான இவ்வுடலை வைத்துக்கொண்டு
மயங்கிநிற்க, ஐந்து புலன்களும் ஏமாற்ற,
குறிப்பு:
1. உடலின் கட்டுமானம் விவரிக்கப் படுகிறது.
12
விலங்கும் மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
பொருள்:
ஒருமைப்படாமல் சிதறுகின்ற சிந்தனைகளை உடைய மனத்தால், மாசிலாதவனே, உன்னிடம்
கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்நிறைவால் கசிந்தும், உள்ளம் உருகி நிற்கின்ற
நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவனாகிய என்க்கும் அருள்செய்து,
இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையால் வந்து,
உன்னுடைய நீண்டு அழகிய கழலணிந்த திருவடிகள் காட்டி,
நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்குப்
பெற்ற தாயினும் அதிகமான அன்பு உடையவனான தத்துவப் பொருளே !
குறிப்பு:
1. கேவலமான நிலையில் நாம் இருப்பினும் இறைவன் திருவருள் நம்முடைய
இழிவு கண்டு புறம் தள்ளாது, அளத்தலுக்கு இயலாத கருணையினால் நம்மை
ஆண்டு கொண்டருளும் வண்ணம் இங்கு தொழப் படுகின்றது.
13
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
பொருள்:
குற்றமற்ற தூய ஒளி மலர்கின்ற மலர் போன்று இனிய சுடரே !
ஒளியுருவினனே ! தேன் நிறைந்த அமுதமே ! சிவபுரத்தை உடையவனே !
பாசமாகிய கட்டினை அறுத்துத் திருவருள் புரியும் அறிவிற் சிறந்தோனே !
இனிய அறக்கருணை புரிந்து, அதனால் என்னுடைய நெஞ்சில் வஞ்சனை ஒழிய,
என் உள்ளம் நீங்காது நின்று பெருங்கருணை பெருக்கெடுக்கும் பெருவெள்ளமே !
குறிப்பு:
1. இறைவன் உயிர்கள் பால் அவரவர் தன்மைக்கு ஏற்ப அறக்கருணை, மறக்கருணை
காட்டி நல் வழிப்படுத்துகிறார். மணிவாசகப் பெருமான், சிவபெருமான் தமக்கு அறக்கருணை
புரிவதன் மூலமே நெஞ்சின் வஞ்சமெல்லாம் அகல வழிவகை செய்துவிட்ட வகையைப் போற்றுகின்றார்.
14
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
பொருள்:
தெவிட்டாத அமுதமே ! அளவுகள் கடந்து நிற்கின்ற பெருமானே !
ஆர்வம் / முயற்சி இல்லாதவர் உள்ளத்தில் வெளிப்பாடின்றி மறைந்திருக்கும் ஒளியானே !
(என் உள்ளத்தை) நீரென உருகச்செய்து, என்னுடைய இன்னுயிராக நிற்பவனே !
இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்டவனே ! உள் நிற்பவனே !
குறிப்பு:
1. இறைவன் எல்லாருடைய உள்ளத்திலும் உள்ளார். எங்கும் நிறைந்தும் அதே நேரத்தில்
எல்லாம் கடந்தும் இருப்பதால் அவரைக் கடவுள் என்கிறோம். ஆயினும் ஆர்வமும் முயற்சியும்
உடையவர்கள் சிவபெருமான் திருவருளினால் அவரை உணர்கின்றார்கள். மற்றவர்கள் அலைவரிசை
ஒன்றியையாத ஒலிப்பெட்டி போல அவர் மிக அருகில் இருந்தும், பேரொளியாக இருந்தும்
காண இயலாதவர்களாக உள்ளனர்.
(ஒ. பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாகக் கொள்வானே – திருமூலர்)
2. இறைவனுடைய எண்குணங்களில் ஒன்று வரம்பில் இன்பமுடைமை. அவ்வாறு இருக்க
“இன்பமும் துன்பமும் இல்லானே” எனக் கூறுவது பொருந்துமா எனக் கேட்டால்,
இறைவனுக்குப் பிறவற்றால் எவ்வித இன்பமோ துன்பமோ இல்லை.
செம்பொருளாக உள்ள அது தன்னுடைய வற்றாத இன்பத்தில் தானே என்றும் மகிழ்ந்து இருக்கும்.
15
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே
பொருள்:
அன்பினால் தன்னைத் தொழும் அடியார்களுக்கு அன்பே உருவாயவனே !
எல்லாமும் தானே ஆகி, எதுவும் தானாக இல்லாது இருக்கின்றவனே !
சுடருருக்கொண்டவனே ! அடர்ந்த இருளாகவும் இருப்பவனே !
பிறப்பு என்பதே இல்லாத பெருமை உடையவனே !
முதலாக இருப்பவனே ! இறுதியாகவும் இடைப்பட்ட நிலையாகவும்
ஆகி இத்தத்துவங்கள் எல்லாம் கடந்தவனே !
(காந்தம் போல) என்னை ஈர்த்து என்னை ஆளாக –
அடியவனாகக் கொண்டு அருளிய என் தந்தைக்கும் தலைவனே !
உன்னைத் தமது கூர்மையான மெய்யறிவின் துணையாகக் உணர்கின்ற பெரியோர்களுடைய சிந்தையின்
பார்வை வியத்தற்கு உரிய பார்வை ! அவர்களுடைய ஆராயும் திறன் வியத்தற்கு உரிய ஆய்வுணர்வே !
குறிப்பு:
1. சிவபெருமான் எல்லாப் பொருள்களுடனும் கலந்து தோன்றினும் இவை எதுவும் அவரல்ல.
அவர் கலந்து இருப்பது போலவே எல்லாம் கடந்தும் உள்ளார்.
2. சிவபெருமானுக்கு அவதாரம் இல்லை. அவர் பிறப்பது இல்லை.
3. இறைவன் அன்பர்களுக்கு எளியவனாகக் காட்சி அளித்த போதிலும்,
அவருடைய பேரியல்பு யாராலும் முழுதும் ஆய்வது பற்றி எண்ணியும் பார்க்க இயலாதது.
எனவே தான் அவருடைய இயல்பினை சற்றேனும் காண முயல்கின்ற ஞானிகளின் திறனை
வியந்து கூறுகின்றார் மாணிக்க வாசகர்.
(ஒ. பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறியாமை விளம்புகின்றேனே – திருமந்திரம்)
16
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
பொருள்:
நீங்குவதும், புதிதாக வருவதும், கலப்பதும் இல்லாத புண்ணிய மூர்த்தியே !
என்னைக் காக்கின்ற காவல் தெய்வமே ! காண்பதற்கு அரியதாக ஒளி மிகுந்து இருப்பவனே !
தொடர்ச்சியாகவும் முறையாகவும் வருகின்ற இன்ப வெள்ளமே ! தந்தையே ! மிகுதியாக நின்ற
ஒளி வீசும் சுடரான தோற்றத்தினனாய், சொல்லப்படாத பூடகமான நுண் உணர்வாக இருந்து
குறிப்பு:
1. இறைவன் எங்கும் நிறைந்து இருக்கும் பொழுது அவர் எதனை நீங்குவார்,
புதிதாக வருவதற்கு அவர் இல்லாத்தது என்ன உள்ளது, அவர் கலந்து இல்லாத
பொருள் தான் ஏது – புதிதாகக் கலப்பதற்கு ? இவ்வாறு எல்லாப் பொருளிலும் இருந்த போதிலும்,
பொருளின் தன்மையால் குறைபடாமல் தான் என்றும் தூயவனான புண்ணிய மூர்த்தியாகவே உள்ளார்.
2. இறைவன் சொற்களால் சொல்லி முடியாதவர். நுண் உணர்வால் அறியப் படுபவர்.
(ஒ. அவனருளே கண் கொண்டு காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே – தேவாரம் )
17
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
பொருள்:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு
குறிப்பு:
1. ஒ. ஏகம் சத் விப்ரா பஹ¤தா வதந்தி – வேதம்.
18
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
பொருள்:
போற்றுதல்கள் செய்து, புகழ் கூறித் தம்முடைய பொய்கள் ஒழிய உண்மையே ஆன அடியவர்கள்
மீண்டும் இவ்வுலகுக்கு வந்து வினை நிறைந்த பிறவியில் சிக்குறாது
மாயையால் ஆன இவ்வுடலின் கட்டுமானத்தை அழிக்க வல்லானே !
வேறு எதுவுமற்றதாகிய இருளில் கூத்து ஆடுகின்ற நாதனே !
தில்லை என்னும் சிதம்பரத்தில் ஆடுபவனே ! தென்பாண்டி நாட்டை உடையவனே !
குறிப்பு:
1. இருள் என்பது (ஒளீ) இன்மையைக் குறிக்கும். உலகங்கள் எல்லாம் ஒடுங்கிய
பின்னர் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்நிலை ஏதுமற்ற இருள் போன்றது.
அவ்விருளில் ஒளியாக இறைவன் ஆடுகின்றார்.
19
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
பொருள்:
அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று
சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, (இறைவன்) திருவடியை பணிந்து அதன் கீழிருந்து
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்.
குறிப்பு:
1. பொருளினை உணர்ந்து சொல்லுவதன் மூலம் உணர்வினோடு ஒருமைப்பட்டுத்
தொழுதலால் அவ்வகை வணக்கத்தின் பெருமை வலியுறுத்தப்படுகின்றது.
திருச்சிற்றம்பலம்.
பொருள் / விளக்கம் :
நமச்சிவாய வாழ்க – திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க;
நாதன் தாள் வாழ்க – திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க;
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க -இமைக்கும் நேரமுங் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க;
கோகழி ஆண்ட குரு மணிதன் தாள் வாழ்க – திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னையாட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க;
ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க – ஆகம வடிவாகி நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க;
வேதத்தில் பொதுவாக விளங்குதல் போல அல்லாமல், ஆகமத்தில் சிறப்பாக இறைவன் விளங்குதலால், “ஆகமமாகி நின்றண்ணிப்பான்” என்றார். ஆகமங்கள் காமியம் முதல் வாதுளம் ஈறாக உள்ள இருபத்தெட்டு.
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க – ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க.
ஏகன் அநேகன்” என்றமையால், இறைவன் தன்மையால் ஒரு பொருளாகவும், உயிர்களோடு கலந்திருத்தலால் பல பொருளாயும் இருக்கிறான் என்ற உண்மையும் கிடைக்கிறது.
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க – மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி மேம்படுக;
மன ஓட்டத்தைத் தவிர்ப்பவனும், பிறவித் துன்பத்தை நீக்குபவனும் இறைவனே என்பது, “வேகங் கெடுத்தாண்ட வேந்தன்”, “பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்” என்பவற்றால் விளங்கும். பிஞ்ஞகன் – தலைக்கோலம் உடையவன்; பிறை, கங்கை, அரவம் முதலியன தலைக்கோலங்கள்.
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க – பிறவித் தளையை அறுக்கிற இறைவனது வீரக்கழலணிந்த திருவடிகள் மேம்படுக;
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க – தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர் போலும் திருவடிகள் மேம்படுக;
இறைவன் தன்னை நினையாதவரைத் தனக்கு வேறானவராகவே வைத்துச் சிறிதும் விளங்கித் தோன்றாதிருத்தலின், “புறத்தார்க்குச் சேயோன்” என்றார்.
கரம் குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க – கை கூம்பப்பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் மேம்படுக;
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – கைகள் தலைமேல் கூம்பப்பெற்றவரை உயரப் பண்ணுகிற சிறப்புடையவனது திருவடி மேம்படுக.
இறைவன் விரும்பியிருக்குமிடங்கள் இரண்டு. ஒன்று, நெஞ்சத்தாமரை; மற்றொன்று, துவாதசாந்தப் பெருவெளி; அஃதாவது, தலைக்குப் பன்னிரண்டு அங்குலங்களுக்குமேலுள்ள இடம். இவ்விரண்டு இடங்களிலும் இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிப்பிட, “கரங்குவிவார், சிரங்குவிவார்” என்று கூறினார்
ஈசன் அடி போற்றி – ஈசனது திருவடிக்கு வணக்கம்,
எந்தை அடி போற்றி – எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம்,
தேசன் அடி போற்றி – ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சேவடி போற்றி -சிவபிரானது திருவடிக்கு வணக்கம்;
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி – அடியாரது அன்பின்கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம்;
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம்;
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி – சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம்.
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி – வெறுக்காத இன்பத்தைக் கொடுக்கின்ற மலைபோலும் கருணையையுடைய வனுக்கு வணக்கம்.
ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும், ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். “எண் குணத்தான்தாள்” என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க
———————————————————————————————————————————-
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் – சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி – அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி,
சிந்தை மகிழ – மனம் மகிழும்படியும்,
சிவபுராணந்தன்னை – சிவனது அநாதி முறைமையான பழமையை
முந்தை வினை முழுதும் ஓய – முன்னைய வினை முழுமையும் கெடவும், ,
யான் உரைப்பன் – யான் சொல்லுவேன்.
கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி – நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து,
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி – நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின்,
——————————————————————————————————————————————
விண் நிறைந்தும் – வானமாகி நிறைந்தும்,
மண் நிறைந்தும் – மண்ணாகி நிறைந்தும்,
மிக்காய் – மேலானவனே,
விளங்கு ஒளியாய் – இயல்பாய் விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகி,
எண் இறந்து – மனத்தைக் கடந்து,
எல்லை இலாதானே – அளவின்றி நிற்பவனே,
நின்பெருஞ்சீர் – உன்னுடைய மிக்க சிறப்பை,
பொல்லா வினையேன் – கொடிய வினையையுடையவனாகிய யான்,
புகழும் ஆறு ஒன்று அறியேன் – புகழுகின்ற விதம் சிறிதும் அறிகிலேன்.
இறைவன் ஐம்பெரும்பூதங்களில் கலந்தும் அவற்றுக்கு அப்பாலாயும் இருக்கிறான் என்பதை விளக்க, “விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய்” என்றார். “உலகெலா மாகி வேறாய் உடனுமா யொளியாய்” என்ற சித்தியார் திருவாக்கும் இதனையே வலியுறுத்துகிறது. இறைவனது பெருமையைக் காட்டித் தன் சிறுமையைக் காட்ட, ‘பொல்லா வினையேன்’ என்றார்.
புல் ஆகி – புல்லாகியும்,
பூடு ஆய் – பூண்டாகியும்,
புழு ஆய் – புழுவாகியும்,
மரம் ஆகி – மரமாகியும்,
பல்விருகமாகி – பல மிருகங்களாகியும்,
பறவை ஆய் – பறவையாகியும்,
பாம்பு ஆகி – பாம்பாகியும்,
கல் ஆய் – கல்லாகியும்,
மனிதர் ஆய் – மனிதராகியும்,
பேய் ஆய் – பேயாகியும்,
கணங்கள் ஆய் – பூத கணங்களாகியும்,
வல் அசுரர் ஆகி – வலிய அசுரராகியும்,
முனிவர் ஆய் – முனிவராகியும்,
தேவர் ஆய் – தேவராகியும்,
சொல்லாநின்ற – இயங்குகின்ற,
– இந்த,
தாவர சங்கமத்துள்அசையாப் பொருள் அசையும் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே,
எல்லாப் பிறப்பும் பிறந்து – எல்லாப் பிறவிகளிலும் பிறந்து,
இளைத்தேன் – யான் மெலிவடைந்தேன்,
எம்பெருமான் – எம்பெருமானே,
மெய்யே – உண்மையாகவே,
உன் பொன் அடிகள் கண்டு – உன் அழகிய திருவடிகளைக் கண்டு,
இன்று – இப்பொழுது,
வீடு உற்றேன் – வீடு பெற்றேன்.
எல்லா உயிர்ப்பொருள்களையும் தாவரப் பொருள் (அசையாப்பொருள்), சங்கமப்பொருள் (அசையும் பொருள்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். தாவர வகையுள் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு, பாம்பு, பறவை, பல்விருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும். கல்லுக்கும் உயிர் உண்டு என்பதை இக்காலத்தாரும் உடன்படுவர். ‘மிருகம்’ என்பது ‘விருகம்’ என மருவியது. உயிர், தாவரப் பொருளாயிருந்து அறிவு வளர்ச்சிக்கேற்பச் சங்கமப் பொருள்களில் தேவர் ஈறாக உயர்ந்து பிறவி எடுக்கிறது.
இனி, உயிர்களுக்கு நால்வகைத் தோற்றமும் எழுவகைப் பிறப்பும் நூல்களிற்கூறப்படும். முட்டையிற்பிறப்பன, வேர்வையிற்பிறப்பன, வித்திற்பிறப்பன, கருவிற்பிறப்பன என்பன நான்கு வகைத் தோற்றமாம்; இவை முறையே அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் எனப்படும். தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்பன எழுவகைப் பிறப்பாம்
உய்ய – நான் உய்யும்படி,
என் உள்ளத்துள் – என் மனத்தில்,
ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற,
மெய்யா – மெய்யனே,
விமலா – மாசற்றவனே,
விடைப்பாகா – இடபவாகனனே,
வேதங்கள் – மறைகள்,
ஐயா என – ஐயனே என்று துதிக்க,
ஓங்கி – உயர்ந்து,
ஆழ்ந்து அகன்ற – ஆழ்ந்து பரந்த,
நுண்ணியனே – நுண்பொருளானவனே.
ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்குமாதலின் அவையே உள்ளத்துள் நினைவின் தோற்றம், நிலை, இறுதியைச் செய்வனவாம். அவ்வெழுத்துகளால் உண்டாகும் ஒலியை இறைவனது சத்தியே செலுத்தி நிற்றலால் “உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா,” என்றார்.
சைவ நூல்கள், இடப ஊர்தியை உயிர் என்று கூறும். ஆகவே, “விடைபாகா” என்றது, உயிருக்கு நாதன் என்றதாம்.
இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது.
அல்ல யீதல்ல யீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தரன்”
என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல் ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அருளால்தான் காணமுடியும் என்ற நயமும், “வேதங்கள் ஐயா என ஓங்கி” என்பதனால் கிடைக்கிறது.

இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே எங்கும் நிறைந்திருக்கும் தன்மையுண்டு. அதைக் குறிப்பிட “ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” என்றார். “அண்டங்க ளெல்லாம் அணுவாக அணுக்களெல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்” என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார்.
வெய்யாய் – வெம்மையானவனே,
தணியாய் – தன்மையானவனே,
இயமானன் ஆம் விமலா – ஆன்மாவாய் நின்ற விமலனே,
பொய் ஆயின எல்லாம் – நிலையாத பொருள்கள் யாவும்,
போய் அகல – என்னை விட்டு ஒழிய,
வந்தருளி – குருவாய் எழுந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி – மெய்யுணர்வு வடிவமாய்,
மிளிர்கின்ற – விளங்குகின்ற,
மெய்ச்சுடரே – உண்மை ஒளியே,
எஞ்ஞானம் இல்லாதேன் – எவ்வகையான அறிவும் இல்லாத எனக்கு,
இன்பப் பெருமானே – இன்பத்தைத் தந்த இறைவனே,
அஞ்ஞானந்தன்னை – அஞ்ஞானத்தின் வாதனையை,
அகல்விக்கும் – நீக்குகின்ற,
நல் அறிவே – நல்ல ஞானமயமானவனே.
இறைவன் தீயாய் நின்று வெம்மையைக் கொடுத்து, நீராய் நின்று குளிர்ச்சியைக் கொடுத்து, உயிருக்கு உயிராய் நின்று நல்வழியைக் காட்டி அருளைப் புரிகின்றான் என்பது,
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா”
என்றதனால் கிடைக்கிறது.
ஒளியைக் கண்டதும் இருள் மறைவது போல, மெய்ஞ்ஞானத்தால் அஞ்ஞானம் விலகுகிறது. இறைவன் குருவாகி வந்து அருள்வதனால் மெய்ஞ்ஞானம் கிடைக்கிறது என்பதை, “பொய்யாயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே” என்றார். அஞ்ஞானம் வாதனையாய் நில்லாது நீக்கப்பட்டுப் பற்றற்றுக் கழிதலும் இறைவன் திருவருளாலேயே என்பதற்கு, “அஞ்ஞானம் தன்னை யகல்விக்கும் நல்லறிவே” என்றார்.
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் – தோற்றம் நிலை முடிவு என்பவை இல்லாதவனே,
அனைத்து உலகும் – எல்லா உலகங்களையும்,
ஆக்குவாய் – படைப்பாய்,
காப்பாய் – நிலைபெறுத்துவாய்,
அழிப்பாய் – ஒடுக்குவாய்,
அருள் தருவாய் – அருள் செய்வாய்,
போக்குவாய் – பிறவியிற்செலுத்துவாய்,
என்னை – அடியேனை,
புகுவிப்பாய் – புகப்பண்ணுவாய்,
நின் தொழும்பில் – உன் தொண்டில்,
நாற்றத்தின் நேரியாய் – பூவின் மணம்போல நுட்பமாய் இருப்பவனே,
சேயாய் – தொலைவில் இருப்பவனே,
நணியாய் – அண்மையில் இருப்பவனே,
மாற்றம் மனம் கழிய நின்ற – சொல்லும் மனமும் கடந்து நின்ற,
மறையோனே – வேதப் பொருளாய் உள்ளவனே,
கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல – கறந்த பாலும் சருக்கரையும் நெய்யும் கூடினது போல,
சிறந்த அடியார் சிந்தனையுள் – சிறந்த அன்பரது மனத்துள்,
தேன் ஊறி நின்று -இன்பம் மிகுந்து நின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் – எடுத்த பிறப்பை ஒழிக்கின்ற,
எங்கள் பெருமான் – எம்பெருமானே.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன இறைவனது ஐந்தொழில்களாம். அறியாமையில் கட்டுண்டிருக்கும் உயிருக்கு இறைவன் உடம்பைக் கொடுத்துப் படைக்கிறான்; எடுத்த உடம்பில் இருவினைகளை நுகரும்போது அறியாமையை நீக்கிக் காக்கிறான்; உயிர் அலுக்கா வண்ணம் ஓய்வு கொடுக்க அழிக்கிறான்; இவ்வாறு பிறப்பு இறப்புகளில் உழலும்படி அறிவை மறைக்கிறான்; குற்றம் நீங்கிப் பக்குவம் (மல பரிபாகம்) வந்த காலத்து அருளுகிறான் என்பவற்றை விளக்க, “ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்” என்றார். ஆக்குதல் முதலிய நான்கனைக் கூறவே, மறைத்தலும் கொள்ளப்படும்.
ஆக்கமும் கேடும் இல்லாதவன்தானே ஆக்கவும் அழிக்கவும் இயலும்? இதனால், “ஆக்கம் அளவிறுதி யில்லாய்” என்றார்.
இறைவன் உயிர்க்ளைப் பக்குவம் வருவதற்கு முன்பு பிறவியில் செலுத்தியும், பக்குவம் வந்த பின்பு தனது திருவடிக்கு ஆளாக்கியும் ஆண்டுகொள்வனாகலின், “போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்” என்றார்.
பூவில் மணம் போல ஆன்மாவில் இறைவன் கலந்திருக்கிறான். மலர் அரும்பாயிருக்கும்போது மணம் வீசாது; அலர்ந்த பின்னரே மணம் வீசும். அதைப் போல, ஆன்மா பக்குவப்பட்டது
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் – ஐந்து நிறங்களை உடையவனே,
விண்ணோர்கள் ஏத்த – தேவர்கள் துதிக்க,
மறைந்து இருந்தாய் – அவர்களுக்கு ஒளிந்திருந்தவனே,
எம்பெருமான் – எம் பெருமானே,
வல்வினையேன் தன்னை – வலிய வினையையுடையவனாகிய என்னை,
மறைந்திட மூடிய – மறையும்படி மூடியுள்ள,
மாய இருள் – அறியாமையாகிய ஆணவம் கெடுதற்பொருட்டு,
அறம் பாவம் என்னும் – புண்ணிய பாவங்கள் என்கின்ற,
அருங்கயிற்றால் கட்டி – அறுத்தற்கு அருமையாகிய கயிற்றால் கட்டப்பெற்று,
புறம்தோல் போர்த்து – வெளியே தோலால் மூடி,
எங்கும் புழு அழுக்கு மூடி – எவ்விடத்தும் புழுக்கள் நௌ¤கின்ற அழுக்கை மறைத்து ஆக்கிய,
மலம் சோரும் – மலம் ஒழுகுகின்ற,
ஒன்பது வாயில் குடில் – ஒன்பது வாயிலையுடைய உடம்பாகிய குடிசை,
மலங்க – குலையும்படி,
புலன் ஐந்தும் – ஐம்புலன்களும்,
வஞ்சனையைச் செய்ய – வஞ்சனை பண்ணுதலால்,
விலங்கும் மனத்தால் -உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே,
விமலா – மாசற்றவனே,
உனக்கு – உன்பொருட்டு,
கலந்த அன்பு ஆகி – பொருந்தின அன்பை உடையேனாய்,
கசிந்து உள் உருகும் – மனம் கசிந்து உருகுகின்ற,
நலந்தான் இலாத – நன்மையில்லாத,
சிறியேற்கு – சிறியேனுக்கு,
நல்கி – கருணை புரிந்து,
நிலத்தன்மேல் வந்தருளி – பூமியின்மேல் எழுந்தருளி,
நீள் கழல்கள் காட்டி – நீண்ட திருவடிகளைக் காட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு – நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு,
தாயின் சிறந்த – தாயினும் மேலாகிய,
தயா ஆன – அருள் வடிவான,
தத்துவனே – உண்மைப்பொருளே.
இறைவன் ஐம்பூதங்களிலும் நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும், வானுக்குப் புகையையும் சாத்திரம் கூறும். “பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம்” என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என்றார். இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள் கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும் கன்மமும் சேர்க்கப்படுதலினால், “வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய இருள் மாய” என்றார். ‘அறம்பாவம்’ என்பன கன்ம மலம் எனவும், ‘ஒன்பது வாயிற்குடில்’ என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம் சாரியைகள்.
ஒன்பது வாயிலாவன – செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், “குடில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய” என்றும், அவ்வஞ்சனைச் செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், ‘விலங்கும் மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்’ என்றும் கூறினார்.
நாய், தலைவனை அறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பே சிறந்ததும், இழிவைக் கருதாததும் ஆகையாலும், “நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே” என்றார்.
இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளின திறத்தை வியந்து போற்றினார்.
மாசு அற்ற சோதி மலர்ந்த – களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த,
மலர்ச்சுடரே – பூப்போன்றே சுடரே,
தேசனே – குரு மூர்த்தியே,
தேனே – தேனே,
ஆர் அமுதே – அரிய அமுதே,
சிவபுரனே – சிவபுரத்தையுடையானே,
பாசம் ஆம் பற்று அறுத்து – பாசமாகிய தொடர்பையறுத்து,
பாரிக்கும் – காக்கின்ற,
ஆரியனே – ஆசிரியனே,
நேச அருள் புரிந்து – அன்போடு கூடிய அருளைச்செய்து,
நெஞ்சில் வஞ்சம் கெட – என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய,
பேராது நின்ற – பெயராமல் நின்ற,
பெருங்கருணை – பெருங்கருணையாகிய,
பேர் ஆறே – பெரிய நதியே,
ஆரா அமுதே – தெவிட்டாத அமிர்தமே,
அளவு இலாப் பெம்மானே – எல்லையில்லாத பெருமானே,
ஓராதார் உள்ளத்து – ஆராயாதார் மனத்தில்,
ஒளிக்கும் – மறைகின்ற,
ஒளியானே – ஒளியையுடையானே,
நீராய் உருக்கி – என் மனத்தை நீர் போல உருகப்பண்ணி,
என் ஆர் உயிராய் நின்றானே – என் அரிய உயிராய் நின்றவனே,
இன்பமும் துன்பமும் – சுகமும் துக்கமும்,
இல்லானே – இயற்கையில் இல்லாதவனே,
உள்ளானே – அன்பர்பொருட்டு அவற்றை உடையவனே,
அன்பருக்கு அன்பனே – அன்பர்களிடத்து அன்புள்ளவனே,
யாவையும் ஆய் – கலப்பினால் எல்லாப் பொருள்களும் ஆகி,
அல்லையும ஆம் – தன்மையினாலே அல்லாதவனும் ஆகின்ற,
சோதியனே – பேரொளியையுடையவனே,
துன் இருளே – நிறைந்த இருளானவனே,
தோன்றாப் பெருமையனே – புறத்தே வெளிப்படாத பெருமை உடையவனே,
ஆதியனே – முதல்வனே,
அந்தம் நடு ஆகி – முடிவும் நடுவும் ஆகி,
அல்லானே – அவையல்லாது இருப்பவனே,
ஈர்த்து என்னை ஆட்கொண்ட – என்னை இழுத்து ஆட்கொண்டருளின,
எந்தை பெருமானே – எமது தந்தையாகிய சிவபெருமானே,
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் – மிகுந்த உண்மை ஞானத்தால்,
கொண்டு உணர்வார்தம் கருத்தில் – சிந்தித்து அறிபவர் மனத்தினாலும்,
நோக்கு அரிய – எதிரிட்டுக் காண்பதற்கு அரிதாகிய,
நோக்கே – காட்சியே,
நுண்உணர்வே – இயற்கையில் நுட்பமாகிய அறிவே,
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் எம் காவலனே – எம்மைக் காப்பாற்றுகின்ற எம் அரசனே,
காண்பு அரிய பேர் ஒளியே – காண்பதற்கரிய பெரிய ஒளியே,
ஆற்று இன்ப வெள்ளமே – மகாநதி போன்ற இன்பப் பெருக்கே,
அத்தா – அப்பனே,
மிக்காய் – மேலோனே,
நின்ற தோற்றச்சுடர் ஒளியாய் – நிலைபெற்ற தோற்றத்தையுடைய விளங்குகின்ற ஒளியாகியும்,
சொல்லாத நுண் உணர்வு ஆய் – சொல்லப்படாத நுட்பமாகிய அறிவாகியும்,
மாற்றம் ஆம் வையகத்தின் – மாறுபடுதலையுடைய உலகத்தில்,
வெவ்வேறே வந்து – வெவ்வேறு பொருளாய்க் காணப்பட்டு வந்து,
அறிவு ஆம் – அறிவாய் விளங்கும், தேற்றனே – தௌ¤வானவனே,
தேற்றத் தௌ¤வே – தௌ¤வின் தௌ¤வே,
என் சிந்தனையுள் ஊற்று ஆன – என் மனத்துள் ஊற்றுப் போன்ற,
உண் ஆர் அமுதே – பருகுதற்கு அரிய அமிர்தமே,
உடையானே – தலைவனே.
சோதி – பேரொளி, அதிலிருந்து தோன்றுவது சுடர். சோதியை முழுதும் காண்பது அரிது. அதன்கண் உண்டாகும் ஒரு சிறு பகுதியாகிய சுடரைக் காண்பது எளிது. ஆகவே, எளிவந்து அருள் புரிந்த இறைவனைச் “சோதி மலர்ந்த சுடரே” என்றார். இச்சுடர், மலர் போலக் குளிர்ச்சியைத் தருவதால், “மலர்ச்சுடர்” என்றார். பாசம் – அறியாமை.
அன்பர்கள் மனத்திலுள்ள வஞ்சனை கெட இறைவன் அதனை விட்டு நீங்காது பெருங்கருணை வெள்ளமாயும் அளவில்லாத இன்பப் பொருளாயும் அங்குத் தங்குகின்றான். அப்பொழுது அம்மனம் நீராய் உருகுகிறது. அவ்வாறு உருகிய உயிரை இறைவன் தன்மயமாகச் செய்கின்றான். இக்கருத்துகளை விளக்கவே, “நெஞ்சில் வஞ்சங்கெட …………….. நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே” என்றான்.
இறைவன் தனக்கென ஓர் இன்பமும் துன்பமும் இல்லான்; அடியார்க்கு வரும் இன்பதுன்பங்களைத் தான் ஏற்றுக்கொள்வதனால் இன்பமும் துன்பமும் உள்ளான். அதனால், “இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே,” என்றார்.
இறைவன், எல்லாப் பொருளிலும் கலந்திருத்தலால் “யாவையுமாய்,” தன்மையால் வேறாதலால் “அல்லனுமாய்” இருக்கிறான். ஒளியும் இருளும் அவனன்றி இன்மையால், “சோதியனே, துன்னிருளே” என்றார். உலகத்திற்கு ஆதியும் நடுவும் முடிவுமாய் நிற்கின்ற இறைவன், தனக்கு அவற்றை உடையனல்லன் ஆதலின், “ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே” என்றார்.
இறைவனது உருவத்தைக் கண்ணால் காண முடியாது, அறிவினாலும் அறிய முடியாது என்பார், “நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்றார். அனுபவத்தினால் காணக்கூடியவன் இறைவன் என்பதை உணர்த்த, “சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே” என்றார்.
உயிர்களின் மனப்பக்குவத்திற்கேற்ப இறைவன் அருளுவதை விளக்க, “மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே” என்றார்.
இவற்றால் இறைவன் பண்புகள் விளக்கப்பட்டன.
வேற்று விகார – வெவ்வேறு விகாரங்களையுடைய,
விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் – ஊனாலாகிய உடம்பினுள்ளே தங்கிக் கிடக்கப் பொறேன்,
எம் ஐயா – எம் ஐயனே,
அரனே – சிவனே,
ஓ என்று என்று – ஓ என்று முறையிட்டு,
போற்றி – வணங்கி,
புகழ்ந்து இருந்து – திருப்புகழை ஓதியிருந்து,
பொய் கெட்டு – அறியாமை நீங்கி,
மெய் ஆனார் – அறிவுருவானவர்கள்,
மீட்டு இங்கு வந்து – மறுபடியும் இவ்வுலகில் வந்து,
வினைப்பிறவி சாராமே – வினைப் பிறவியையடையாமல்,
கள்ளப்புலம் குரம்பைக் கட்டு – வஞ்சகத்தையுடைய ஐம்புலன்களுக்கு இடமான உடம்பாகிய கட்டினை,
அழிக்க வல்லானே – அறுக்க வல்லவனே,
நள் இருளில் – நடு இரவில்,
நட்டம் பயின்று – மிகுந்து,
ஆடும் – நடனம் செய்கின்ற,
நாதனே – இறைவனே,
தில்லையுள் கூத்தனே – திருத்தில்லையில் நடிப்பவனே,
தென்பாண்டி நாட்டானே – தென்பாண்டி நாட்டையுடையவனே,
அல்லல் பிறவி அறுப்பானே – துன்பப் பிறப்பை அறுப்பவனே,
ஓ என்று – ஓவென்று முறையிட்டு,
சொல்லற்கு அரியானைச் சொல்லி – துதித்தற்கு அருமையானவனைத் துதித்து,
திருவடிக் கீழ் சொல்லிய பாட்டின் – அவனது திருவடியின்மீது பாடிய பாட்டின்,
பொருள் உணர்ந்து சொல்லுவார் – பொருளையறிந்து துதிப்பவர்,
சிவபுரத்தினுள்ளார் – சிவநகரத்திலுள்ளவராய்,
சிவன் அடிக்கீழ் செல்வர் – சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலை பெறுவர்.
பல்லோரும் ஏத்த – எல்லாரும் துதிக்க,
பணிந்து – வணங்கி
வேறு வேறு விகாரமாவன, நரை திரை மூப்பு பிணி சாக்காடு என்பன. பிறவியை அறுக்க விரும்புவார்க்கு இவ்வுடம்பும் சுமையாகும். ஆதலின், “விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்” என்றார். நாயனாரும், “பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை,” என்று கூறினார்.
பொய்ப்பொருளைக் காண்பது அறியாமை; மெய்ப்பொருளைக் காண்பது அறிவு. மெய்ப்பொருளைக் கண்டவர், “மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்.” ஆதலின், சுவாமிகள் பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வாராராகக் கூறினார்.
நள்ளிருள் – சர்வ சங்கார காலம். இறைவன் விரும்பி ஆடும் இடம் தில்லை. சோமசுந்தரப் பெருமானாய் வீற்றிருந்து திருவிளையாடல் புரிந்த இடம் மதுரை. இரண்டையும் குறிப்பிட, “தில்லையுட்கூத்தனே, தென்பாண்டி நாட்டானே” என்றார். தில்லை என்பது சிதம்பரம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை.
இவற்றால் இறைவனே இடைவிடாது துதிப்பவர் சிவபுரத்துச் செல்வர் என்பதும், இச்சிவபுராணத்தை ஓதுவார்க்கு வரும் பயனும் கூறப்பட்டன.
திருச்சிற்றம்பலம்

சனி பகவான்


சனிபகவான் நவகிரகங்களில்    ஒன்று.
இவர் மட்டுமே ஈஸ்வரன் என்ற சிறப்பிக்கப் படுகிறார். 
சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்று கூறுவார்கள். 
ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ,  புண்ணியங்களுக்கு ஏற்ப 
நன்மைகளையும், தீமைகளையும் தருவார். 
ஒரு ராசியில்  21/2   ஆண்டுகள் இருப்பார். 
அதாவது சனீஸ்வர பகவான் 
ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு 
இரண்டரை ஆண்டுகள் ஆகும். 
இவர், சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்தவர்.
தர்ம ராஜனின் அவதாரம் என கூறுவார்.
சிறந்த சிவ பக்தன். 
பெயர் - சனி பகவான், சனீஸ்வரன்,  முடவன், மந்தன்
தந்தை - சூரிய பகவான்
தாயார் - உஷா, சாயாதேவி
மனைவிகள் - நீலாதேவி,சேஸ்டா தேவி 
புத்திரர் - குளிகன் அல்லது மாத்தி
நண்பர்கள் - புதன், சுக்கிரன்
சின்னம் - தராசு
மொழி - அந்நிய பாஷை
ஆசனம் - வில்வ வடிவம்
உணவு- எள்ளு சாதம் 
வர்ணம்-    கருப்பு.
தானியம் --- எள் 
வாகனம்---  காகம்.
அதி தேவதை -யமன் 
சமித்து-வன்னி
திசை - மேற்கு  
ரத்தினம்- நீலமணி 
சுவை - கசப்பு
பிணி - வாதம் ,நரம்பு நோய், 
கிழமை- சனிக்கிழமை 
பூஜிக்கும் தேவதை- துர்க்கா, சாஸ்தா 
உலோகம்- இரும்பு 
வீடு- மகரம், கும்பம் 
உச்ச வீடு- துலாம் 
நீ ச்ச வீடு- மேஷம் 
நட்பு வீடுகள்- ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு , மீனம் 
சம வீடு - விருச்சிகம்
பகை வீடுகள் - கடகம், சிம்மம்  
பகைவர்கள் - செவ்வாய், சூரியன், சந்திரன் 
நண்பர்கள்- புதன், சுக்கிரன் , ராகு, கேது 
தலம்- திருநள்ளாறு  
பரிகாரத் தலங்கள்- திருநள்ளாறு, குச்சனூர், திருக்கொள்ளிக்காடு 
சனி பகவான் 12 ராசியை சுற்றிவர
 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்
கோட்சார ரீதியாக ,ஒவ்வொரு கிரகங்களின் 
நிலையை ஆராயும் போது
ஒரு கிரகத்தில் அதிக நாட்கள் தங்குவது சனிபகவனே.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். 
சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு 
ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். 
சோதனைக் காலங்களில் 
மனமுருகி சனியை வழிபட்டால் 
தேவையான பரிகாரங்கள் செய்தால் 
சோதனையின் அளவு குறையும். 
சிவ பூஜை செய்பவரை 
சனி அவ்வளவு பாதிப்பது இல்லை.
 பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும்
 கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும்.
 சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய 
மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் 
கால அளவு 21/2+21/2+21/2=7 ஆண்டுகள் ஆகும். 
இதனையே ஏழரைச்சனி என்பர். 
ஒருவரது வாழ்வில், ஏழரை சனி 
மூன்று முறை வரும்.
அதாவது 22 1/2 ஆண்டுகள் 
ஒருவரது வாழ்வில் சஞ்சரிப்பார் 
முதல் முறை வருவது மங்கு சனி.
இரண்டாம் முறை வருவது பொங்கு சனி.  
மூன்றாம் முறை வருவது 
மாரகம் என்னும் மரண சனி.
இரண்டாம் முறை வரும் போது கவலைப் பட தேவையில்லை.
மற்றவர்களுக்கு அவரவர் சுய ஜாதகத்தில் 
தசா புத்தியின் அடிப்படையில் அமையும். 
12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் 
சஞ்சரிக்கும் நிலையே ஏழரை சனி ஆகும்.
ஏழரைச்சனி காலங்களில் 
உடல் நிலை பாதிப்பு, 
நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடு,
குடும்பத்தில் பிரச்சனை,
உத்தியோகத்தில் அவப்பெயர்,
தேவையற்ற விரைய செலவுகள் ,
பொருளாதார  நெருக்கடிகள் உண்டாகும்.
ஜென்ம ராசிக்கு 12 ல் சஞ்சரிக்கும் காலம் 
விரைய சனி என்பர்.
இதற்கு சனிக்கிழமை தவறாது 
சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். 
எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். 
தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது.
இல்லையென்று இரப்போர்க்கு இல்லை என்று 
சொல்லாமல் தன்னால் இயன்ற
 தான தர்மங்களை செய்து வருவதும் நலம்
1  ல் சஞ்சரிக்கும் காலம் 
ஜென்ம சனி என்பர்.
இதற்கு தினசரி அல்லது சனிக்கிழமைகளில் 
முக்கூட்டுஎண்ணெய்(நல்லெண்ணெய்,நெய்,இலுப்பைஎண்ணெய்) 
விளக்கேற்றி சனி பகவானை வலம் வருவது நலம்.
இந்த காலத்தில்  பசுவின் பாலை 
சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். 
ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். 
இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது 
ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும்.
உடலில் பலகீனம், நோய் போன்றவை பீடித்து 
நீங்காமலிருப்பின் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. 
அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு. 
2  ல் சஞ்சரிக்கும் காலம் 
குடும்ப சனி , பாத சனி என்பர்.
 இதற்கு சனிக்கிழமையில் எள் முடிச்சிட்டு தீபம் ஏற்றி, 
சனிபகவானை வழிபட்டு 
எள் அன்னம், நைவேத்தியம் செய்து ஆராதித்து, 
அதனை ஏழைகளுக்கு வழங்கி, 
அப்படிப் பெறுகின்ற ஏழைகளுக்கு
 சில்லரைகளையும் தான தர்மங்களையும் செய்யலாம்.
வீட்டிலும் தினசரி சமைத்த உணவை 
உண்ணுவதற்கு முன்பு காக்கைக்கு வைத்து 
அது உண்ட பின்பு உண்பது நலம். 
ஒரு தேங்காயை பசுவாக ஆவாகனித்து 
ஆத்ம சுத்தியுடன் ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் போதும்.
 வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் 
நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் போன்றவற்றை 
நடத்தினால் நல்லது.
4 ல் சஞ்சரிக்கும் காலம் 
அர்த்தாஷ்டம சனி என்பர்.
இக்காலங்களில் 
அலைச்சல்  , டென்சன், 
சுக வாழ்வில் பதிப்பு உண்டாகும்.
7 ல் சஞ்சரிக்கும் காலம் 
கண்ட சனி  என்பர்.
இக்காலங்களில் 
உடல் நிலை பாதிப்பு,
கணவன் மனைவிக்கு கருத்து வேற்றுமை,
கூட்டு தொழில் பிரச்சனை,உண்டாகும்.
8  ல் சஞ்சரிக்கும் காலம் 
அஷ்டம சனி என்பர்.
அதிகப்படியான சோதனைகள், 
உடல்நிலையில் பாதிப்பு, 
நெருங்கியவர்களால் மருத்துவ செலவு உண்டாகும். 
ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய 
மகரம், கும்பம்,துலாம் ஆகிய ராசிகளில் இருந்தாலும், 
சனியின் நட்சத்திரங்களான 
பூசம், அனுஷம், உத்தரட்டாதி நட்சத்திரங்களில் 
பிறந்தவர்களுக்கும் சனி பகவானால்
அதிகப்படியான பாதிப்பு நேராது. 
 ஒருவருது  வாழ்நாளில், சனி பகவான் 
மூன்று  முறை வலம் வருகிறார். 
முதல் 30 வருடத்துக்குள் ஒரு முறை
 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை 
90 வருடத்துக்குள் மூன்றாவது முறை  நிகழ்கிறது. 
முதல் வலத்தை மங்கு சனி, 
அடுத்ததை பொங்கு சனி, 
மூன்றாவதை போக்கு சனி என்பார்கள்.
இப்படி முன்றாகப் பிரித்த ஆயுள் காலத்தில், 
முதல் பிரிவு கவுமாரம் எனப்படும். 
அனைத்தையும் கற்கும் சிறுவயது என்பர். 
அடுத்து, யௌவன  என்னும் இளமைப்  பருவம் 
எண்ணங்களின் வசத்துக்கு உட்பட்டு 
அலசி ஆராயும் திறனுடன், நல்லது, கெட்டதை அறிந்து 
செயல்பட்டு வாழும் காலம் அது.
துன்பங்களைத் தாங்கி, அதனை  அலட்சியப்படுத்தி, 
மனோபலமும், சிந்தனைத் தெளிவும் கொண்டு 
செழிப்புடன் விளங்குகிற பருவம் இது. 
மூன்றாவது, முதுமை பருவம். 
தேக ஆரோக்கியமும் மனோபாலமும் குறைகிற இறுதிப் பகுதி. 
சிறு வயதில் கல்வியைக் கிரகிக்கும் தருணத்தில் 
சகல விஷயங்களையும் உள்வாங்கிப் பதிய வைக்கும் போது,   
சனி பகவானின் தாக்கம் மங்கலாகவே இருக்கும்.
மனதில் பதிந்த எண்ணங்கள், 
முழு வளர்ச்சியை எட்டாத  நிலையில், 
சனியின் தாக்கம் முடங்கிவிடும். 
ஆகவே, மங்கு சனி  என்பர். 
இளமையில் வளர்ச்சியுற்று எண்ணம் பெருகி,
 கிரகிப்பதிலும் வளர்ந்து  
சனி பகவானின் தாக்கம் கட்டுகடங்காத ஆசைகளை 
அவனுக்குள் வளர்ந்தோங்க செய்கிறது. 
ஆகவே, பொங்கு  சனி என்கின்றனர்.
இன்ப- தன்பம் நிறைந்த வாழ்வில்,
 துன்பத்தை ஏற்காமல், இன்பத்தை மட்டுமே ஏற்று  
மனதுள் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்கிறார் . 
இளமையில் கற்ற கல்வியுடன் 
விவேகமும், பகுத்தறிகிற பக்குவமும் கலந்திருக்க, 
சனி பகவானின் தாக்கத்தை, 
திருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  திசை திருப்ப முடியும்.
ஆகவே பொங்கு சனியாகச் செயல்படுகிறார் .
முதுமையில் சோர்வைச் சந்தித்த  
உடலும் உள்ளமும் கொண்டிருக்க, 
சனியின் தாக்கத்தை எதிர் கொள்ள  முடியாமல் போகிறது. 
சனியின் விருப்பப்படி 
தன்னை இணைத்துக் கொள்ள நிர்பந்தம் ஏற்படுவதால், 
வாழ்க்கையின் எல்லையை எட்டவைக்க 
அவன் செயல்பாடு உதவும். 
ஆகவே,  போக்கு சனி என்றனர்.
ஆக, முதல் பகுதி வளரும் பருவம்,
 2-ம் பகுதி, வளர்ந்து செழிப்புற்று, 
இன்பத்தை அனுபவிக்கிற பருவம் 
இறுதியில், உடலுறுப்புகள் தகுதியை இழக்கும் பருவம்.
 இப்படி உடலின் மாறுபட்ட பருவங்களுக்குத் தக்கபடி, 
சனி பகவானின் செயல்பாடு இருப்பதை 
ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது. 
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது 
அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ 
அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். 
அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.
முடிவில் அதனை வட்டியும் முதலுமாக 
உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். 
இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை 
சனி பகவான் மேற்கொள்கிறார்.
  சனீஸ்வர தீபம்
முக்கூட்டு எண்ணெய்யினால் 
நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய்
ஓர் இரும்புச் சட்டியில் 
வெள்ளை, கறுப்பு, சிவப்பு வண்ண நூல்களைத் 
திரியாக இட்டு 
மேற்கு திக்கில் தீபம் ஏற்றி வர வேண்டும். 
இதற்கு சனீஸ்வர தீபம் என்று சித்தர்கள் கூறுவர்.
இந்தத் தீபத்தைச் சனி பகவான் சன்னதியிலும் ஏற்றலாம்.
 இந்த தீபத்தை ஏற்றி நீலோற்பல மலர் - நீலசங்கு புஷ்பம், 
வன்னி, இலை, வில்வ இலைகளால் தீபத்தைப் பூஜித்து
 சனி பகவானைச் சாந்தி பரிகாரம் செய்யலாம். 
இந்த தீப பரிகாரம் தாங்க முடியாத 
சனி பகவானின் இன்னலிருந்து விடுவித்து
 சாந்தியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.
சனி பகவான் பூஜை
சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
சனிக்கிழமை காலை குளித்து 
சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். 
எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், 
கசப்பு பதார்த்தகங்கள் படைத்து
 பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும்.
 எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் 
சிறிது போட்டு கட்டி, 
திரி போல் திரித்து விளக்கில் போட்டு 
எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும்.
 பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் 
சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து 
காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
பொதுவாக 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது,
ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
சனிப்பெயர்ச்சி யாகங்களில் கலந்து கொண்டு 
சனிக்கு பரிகாரம் செய்யலாம். 
முடிந்தால் திருநள்ளாறு பரிகார ஸ்தலத்திற்கும் 
சென்று பரிகாரம் செய்யலாம்.
சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை 
தலை, கை, கால் மூட்டுகள், 
தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, 
சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். 
இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் 
மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். 
சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் 
அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும் 
இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது.
 ஏழரை சனிக் காலத்தில் கவனக் குறைவால்
 மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும்.
சனியனே, முண்டமே  என்றுதிட்டாமல்இருப்பதுஅவசியம். 
இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும். 
மேலும் சனிக் கிழமைகளில் 
எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். 
ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், 
விதவைகளுக்கும்முடவர்களுக்கும்
முதியவர்களுக்கும் உதவி வேண்டும். 
நள புராணத்தைப் படிக்கலாம் 
அல்லது கேட்கலாம். 
சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும்
 சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.


சனி பகவான் காயத்ரி! 
""காகத்வஜாய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்னோ மந்தப்ரசோ தயாத்''

நம் உடலின் இலக்கணம் உண்மை விளக்கம் !






நாம் யார் நம் உடலின் இலக்கணம் இந்த உலகம் யாது இந்த உலகின் இலக்கணம் 
எப்படி செயல்படுகிறோம்
தத்துவவிளக்கம்
36 தத்துவங்கள் 60அத்துவாக்கள்
( உட்பிரிவுகள்)
96 
ஆன்ம தத்துவங்கள் -24
உடலின் வாசல்கள் -9
தாதுக்கள் -7
மண்டலங்கள் -3
குணங்கள் -3
மலங்கள் -3
வியாதிகள் -3
விகாரங்கள் -8
ஆதாரங்கள் -6
வாயுக்கள் -10
நாடிகள் -10
அவத்தைகள் -5
ஐவுடம்புகள் -5
ஆன்ம தத்துவங்கள் 24
ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,

பூதங்கள் - 5 (நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு)
ஞானேந்திரியங்கள் -5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
கர்மேந்திரியங்கள் -5 (வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்)
தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்)
அந்தக்கரணங்கள் -4 ((மனம்,அறிவு,நினைவு,முனைப்பு)
பூதங்கள் 5
நிலம் உலகம் (மண்) மனிதன் (எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்)
நீர் உலகம் (நீர்) மனிதன் (உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து,)
காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம்,வாயு)
ஆகாயம் உலகம் (வானம்) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன்(பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)
ஞானேந்திரியங்கள் 5
மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்
வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்
கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்
கர்மேந்திரியங்கள் 5
வாய் (செயல்) சொல்வது
கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
கருவாய் (செயல்) விந்தையும்,சுரோணிதத்தையும்,சிறுநீரையும் வெளியேத் தள்ளும்
தன்மாத்திரைகள் 5
சுவை சுவையறிதல்
ஒளி உருவமறியும்
ஊறு உணர்வறியும்
ஓசை ஓசையறியும்
நாற்றம் மணமறியும்
அந்தக்கரணங்கள் 4
மனம் - காற்றின் தன்மை அலைந்துதிரியும்
அறிவு - நெருப்பின் தன்மை நன்மை தீமையறியும்
நினைவு - நீரின் தன்மை ஐம்புலன் வழியே இழுத்துச் செல்லும்
முனைப்பு - மண்ணின்தன்மை புண்ணிய பாவங்களைச் செய்யவல்லது.
உடலில் வாசல்கள் 9
கண்கள்-2
செவிகள் -2
முக்குத்துவாரங்கள் -2
வாய் -1
மலவாயில் -1
குறிவாசல் -1
தாதுக்கள் 7
சாரம் - (இரசம்)
செந்நீர் (இரத்தம்)
ஊன் (மாமிசம்)
கொழுப்பு
எலும்பு
மூளை
வெண்ணீர் (விந்து,சுரோணிதம்)
மண்டலங்கள் 3
அக்னி மண்டலம்
ஞாயிறு மண்டலம்
திங்கள் மண்டலம்
குணங்கள் 3
மனஎழுச்சி (களிப்பு,அகங்காரம்,போகம்,வீரம்,ஈகை)
மயக்கம் (பற்று,தூக்கம்,சம்போகம்,திருட்டு,மோகம்,கோபம்)
நன்மை (வாய்மை,கருணை,பொய்யாமை,கொல்லாமை,அன்பு,அடக்கம்)
மலங்கள் 3
ஆணவம் (நான் என்ற மமதை)
மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
வினை (ஆணவம்,மாயையினால் வரும் விளைவு)
பிணிகள் 3
வாதம்
பித்தம்
கபம்
விகாரங்கள் 8
ஆசை
வெகுளி
கருமித்தனம்
மயக்கம்
வெறி
பொறாமை
ஈறிசை (தான்படும் துன்பம் பிறரும்படவேண்டும் என எண்ணுவது)
ஆதாரங்கள் 6
மூலம்
தொப்புள்
மேல்வயிறு
நெஞ்சம்
கழுத்து புருவநடு
டம்பம் (தற்பெருமை)
வாயுக்கள் 10
உயிர்க்காற்று
மலக்காற்று
தொழிற்காற்று
ஒலிக்காற்று
நிரவுக்காற்று
விழிக்காற்று
இமைக்காற்று
தும்மல்காற்று
கொட்டாவிக்காற்று
வீங்கல்காற்று
நாடிகள் 10
சந்திரநாடி அல்லது பெண்நாடி
சூரியநாடி அல்லது ஆண்நாடி
நடுமூச்சு நாடி
உள்நாக்கு நரம்புநாடி
வலக்கண் நரம்புநாடி
இடக்கண் நரம்புநாடி
வலச்செவி நரம்புநாடி
இடதுசெவி நரம்புநாடி
கருவாய் நரம்புநாடி
மலவாய் நரம்புநாடி
அவத்தைகள் 5
நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
கனவு
உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
உயிர்அடக்கம் (கோமா,ஆழ்மயக்கநிலை)
ஐவுடம்புகள் 5
பருஉடல்
வளியுடல்
அறிவுடல்
மனஉடல்
இன்பஉடல்