Sunday 19 November 2017

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் விளக்கங்கள்.

1. சிவபெருமான் ஞானக்கண் எனப்படும் நெற்றிக்கண்ணை உடையவர், 2. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருப்பவர் 3. சடாமுடியும், சாம்பல் தரித்த மேனியும் உடையவர். 4. மான், அக்னி தாங்கியவராகவும் உள்ளார். 5. காளை மாட்டை வாகனமாக வைத்திருப்பவர் 6. நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள் 7. தலையில் பாயும் கங்கை.. 8. பத்மாசனம் இருக்கை. 9. ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில் - தியான நிலை. 10. செம்மை நிற சடைமுடியான். 11. தலையில் கொன்றை மலர். 12. உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். 13. கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. 14. கழுத்தில் பாம்பு. 15. காதில் தோடுகள் தருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தினை அழிக்கச் சிவபெருமான் திகம்பர மூர்த்தியாகச் சென்றார். அவருடைய அழகில் மயங்கி முனிவர்களின் மனைவிகள் சிவபெருமானை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தங்களுடைய யாகவலிமையால் புலியை உருவாக்கி சிவனைக் கொல்லும்படி அனுப்பினர், சிவபெருமான் அதன் தோலை உரித்து உடுத்திக் கொண்டார். பின்பு அந்த வேள்வியில் மானுண்டாகி வர அதனை இடக்கையில் வைத்துக்கொண்டருளினார். பின்பு மழுவுண்டாகி வர அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர். பின் முயலகன் என்னும் அசுரனுண்டாகி வர அவனைக் கீழே தள்ளி முதுகிலேறி நின்றார். மந்திரங்களை ஏவினார்கள் அவைகள் டமருக (உடுக்கை) ரூபங்கொண்டு வர திருக்கரத்தில் வைத்தருளினார். சிவபெருமானின் மாமனாரான தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைசந்திரனை சடாமுடியில் சூடிக்கொண்டார். காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் ஆபரணங்களாகத் தரித்துக் கொண்டார். துருவாச முனிவரின் மாணவர் சிலாத முனிவர் என்பவருக்கும் சித்திரவதி என்ற குணவதிக்கும் குழந்தைச் செல்வம் இல்லாததால் ஸ்ரீசைல மலையில் புத்திரப்பேறு வேண்டி சிவனை நோக்கி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார்கள். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி யாகபூமியை உழுதால் தங்கப் பெட்டகம் ஒன்று வெளிப்படும். அதில் ஒரு புத்திரன் தோன்றுவான். அவன் பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூலோகத்தில் வாழ்வான் என்று கூறி மறைந்தார். சிறந்த சிவபக்தரான அக்குழந்தையே நந்தி தேவர். சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே. பாற்கடலிலை கடையும் பொழுது வாசுகி (பாம்பு) கக்கிய ஆலகாலத்தினை உண்டு அதன் மூலம் நீலமான கண்டத்தினை உடையவர். பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோளை ஏற்று கங்கையை முடியில் தாங்கினார். யானைரூபமாகத் தோன்றிய கஜாசுரனென்பவன் பிரம்ம தேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பிரம தேவன் தேவேந்திரன் முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டு பயந்து ஓடிக் காசியில் மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப் பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தை மிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார். விஷ்ணு கடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை அபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை வதைத்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக் கலக்கியபோது தேவர்கள் சிவபெருமானை வேண்டிக்கொள்ள தேவர்கள் சிவபெருமான் ஒரு பைரவரையனுப்ப அவர்போய் வலைவீசி அந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால் தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார். அமிர்தமுண்டாகும்படித் தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத் தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலில் மூழ்க அதைக்கண்டு தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொள்ள அவர்வந்து ஆமையாகி மந்தரகிரி தன்முதுகில் நிற்கும்படித் தாங்கினார். இதனால் மமதை அடைய அவரின் மமதையை அடக்கும் பொருட்டு ஈசன் விநாயகரை அனுப்பிவைத்தார். விநாயகர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடல் நீரையெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய் விட்டது. பின்பு விநாயகர் நீரைச் சிந்தினார். அந்த நீருடன் ஆமையும் வெளிவந்து விழுந்துக் கிடக்க, விநாயகர் அதன் ஓட்டினைத் தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்க தேவர்கள் வேண்டுதலினால் தலை மாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார். ரணியாட்சன் என்னும் அசுரன் பிரம்மதேவனை நோக்கித் தவஞ்செய்து வரம் பெற்று பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான். அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று பின் மமதை அடைய பரமசிவன் சுப்பிரமணியரையனுப்ப அவர் அந்த பன்றியின் தலையை வேலினால் குத்தி அமுக்கி அதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்க அதை முன்போலத் தரித்துக்கொண்டார். விஷ்ணு வாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்க முயலுகையில் சிவபெருமான் வைரவரையனுப்ப, அவரந்த விஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்து எம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாக வைத்துக்கொண்டார். இரணியனைக் கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, சிவபெருமான் சரபேஸ்வரர் ரூபமெடுத்து அச்சிம்மத்தின் தலையைப்பிளந்துக் கொன்றனர். தேவர்களதன் தோலைக் கொண்டு சிம்மாசனம் செய்து சுவாமியை வேண்டிக்கொள்ள அவரும் அதை ஏற்றுக்கொண்டார். தேவர்கள் அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக் கண்டு தேவர்கள் முறையிட அவர்களை காக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன், நீலகண்டன் எனப்பெயர்பெறுவர். குரண்டாசுரனென்னும் அசுரன் கொக்கு ரூபமாயிருந்து, தேவர்களை துன்புறுத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது கொக்கு இறகை அணிந்து கொண்டார். பிரம்மா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல் பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலை யணிந்திருப்பதனால் சிரமாலியென்றும் கபாலந்தரித்துக்கொண்டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டானது. அரக்கர்களை அழிக்க விஷ்ணு, அவதாரங்கள் எடுத்து அந்த செயல் முடித்த பின் அந்த அவதாரங்களின் உக்கிரத்தால் யாருக்கும் தீங்கு வரக்கூடாது என்பதற்காக தான் அந்த அவதாரங்களின் எலும்புகளையும் சிரங்களையும் மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக் கொண்டதே அன்றி பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டது அல்ல.

கந்த சஷ்டி விரதம், மகிமைகள்

கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர். செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம். அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்பர். இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது. ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர். தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பையணிந்து,காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம். பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும். முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நாடக பாணியில் நடைபெறுவது வழக்கம். சூர சம்காரத்தின் முடிவில் முருகன் மா மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது கந்தபுராணத்தில் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும். ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல் போனவர்களும் கூட மாதந்தோறும் வரும் சுக்கில பட்சத்துச் சஷ்டியில் முருகப் பெருமானை வழிபட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகா! மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம். கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள். கந்த விரத மகிமை முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும். கந்தசஷ்டி விரதம் கடை அனுஷ்டிக்கும் முறை ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று. கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்த்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிக்க வேண்டும் . சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர். கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனைஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர். ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது. கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும். அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை ஆறு உட்பகைகள் : அவா, கோபம், மயக்கம், கஞ்சத்தனம், செருக்கு, பொறாமை (காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக எடுக்கப்படுகின்றது.ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சந்நிதி, கதிரமலை(கதிர்காமம்), மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது. கந்தசஷ்டி விரதத்தின் பலன் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம் முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு. கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது. கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி. நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும். கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை… என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார். வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள். கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை. சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும். பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு’ என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார். இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும். பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு. ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு. அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும். இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம். சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம். வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தைஎப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறு நாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும். சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்குவிபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டிகவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகாசரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச்சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர்.முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பதுநன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர் நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்த பின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு. வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும். சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் ! ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து – நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் எனஇப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறைஅல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்குநாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப்பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம்பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன்என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்த ஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர். சரவணபவ தத்துவம் சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான். உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு). மு – முகுந்தன் என்கிற விஷ்ணு ரு – ருத்ரன் என்கிற சிவன் க – கமலத்தில் உதித்த பிரம்மன். ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ? ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு, இரு முகம் – அக்னிக்கு, மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு, நான்முகம் – பிரம்மனுக்கு, ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு ஆறு முகம் – கந்தனுக்கு. நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறுகூறுவார் : உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம், 2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம், 3. வேள்விகளைக் காக்க ஒரு முகம், 4. உபதேசம் புரிய ஒரு முகம், 5. தீயோரை அழிக்க ஒரு முகம், 6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம். ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6எழுத்துகள்). இதன் மகிமை என்ன? ஸ – லக்ஷ்மிகடாக்ஷம் ர – ஸரஸ்வதி கடாக்ஷம் வ – போகம் – மோக்ஷம் ண – சத்ருஜயம் ப – ம்ருத்யுஜயம் வ – நோயற்ற வாழ்வு ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாகவிளங்குகின்றன. திருப்பரங்குன்றம் – மூலாதாரம் திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம் பழனி – மணிபூரகம் சுவாமிமலை – அனாஹதம் திருத்தணிகை – விசுத்தி பழமுதிர்சோலை – ஆக்ஞை. ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்தஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின் போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின்சூரனை இரு கூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடிவிடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப் பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான். அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி அயன் எனவாகி அரி எனவாகி அரன் எனவாகி அவர் மேலாய் இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே இருநிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும் மகபதியாகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே சககெனசேகு தகுதிமித்தோதி திமியென ஆடும் மயிலோனே திருமலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவு பெருமாளே.

சாபங்கள் மொத்த‍ம் 13 வகை

1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம் அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 1) பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். 2) பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும். 3) பிரம்ம சாபம்: நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும். 4) சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும். 5) பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும். 6) கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும். 7) பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும். 8) கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது. 9) விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும். 10) தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர். 11) ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும். 12) முனி சாபம்: எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும். 13) குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும். சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்