Tuesday 11 August 2015

கடவுள் கண்ட முதல் நூல்!



தென்றமிழ் நாட்டில் மிகப்பழைய காலத்தில் கடவுளுண்மை யுணர்ந்த நான்கு அறிவர்கள் பிறப்பிறப்பு அற்று வீட்டையடைவதற்கு ஏதுவாகிய ஒளி நெறியைக் காண முயன்றனர். (அறிவர்களுள் சித்தர் என்பார் உலகப்பயன் தரத்தக்க மருந்து மந்திரம் முதலிய பல கலைகளையும் வளர்த்தனர். மேற்சொன்ன நான்கு அறிவர்கள் கடவுளை நினைந்து ஓர் ஆலமரத்தடியில் தவம் இயற்றினர். அவர்களுக்குக் கடவுள் தோன்றி ஒளிநெறியை அறிவுறுத்தினர். அஃது
“ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”
என்று திருஞானசம்பந்தர் திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”
“ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த் தவத்தோன்”
என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும்.
நோக்கத்தை வைத்தே நம்முடைய சமயத்துக்குப் பேர் ஏற்பட்டுள்ளது. திரு என்பது வீட்டின்பத்தைக் குறிக்கும். “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும் புணர்ப்பானை” என்ற சுந்தரர் திருவாக்கில் திரு என்ற சொல் அப்பொருளில் வந்தது காண்க. திருநெறி என்பது தமிழர் சமயத்தின் பெயர். அதனைச் செந்நெறி யென்றுங்கூறுப. “திருநெறிய தமிழ்,” “செந்நெறிக்கே ஏற்றுந்தகையன்” என வருதல் காண்க.

அறம், பொருள் இன்பங்களைப் பற்றிய ஒளிநெறியைத் திருவருளால் அறிந்த நான்கு அறிவர்களும் தத்தம் மாணவர்களுக்கு வெவ்வேறாக அதனை அறிவுறுத்தினர். அவர்கள் வாய்மொழியாற் கூறிய அருள் நூல்கள் நான்மறை எனப் பெயர்பெற்றன. கடவுளருளால் அவை உணர்த்தப் பட்டமையின் அவை கடவுள் கண்ட முதல் நூல் எனப்பட்டன. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றைப்பற்றிப் பேசின.

அறத்தாற் பொருளீட்டி உலக இன்பத்தைத் துய்த்து அதன் நிலையாமையைக் கண்டு அதனை வெறுத்து வீட்டின்பம் நாடுதலே மனித வாழ்க்கையுள் முக்கிய நோக்கமாகும். அகப்பொருள் நூலுக்கு இன்பங்கூறுதல் முக்கியமாதலின், ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என இன்பத்தை முதலில் எடுத்தோதினர் ஆசிரியர் தொல்காப்பியனார்.

-    (தமிழர் சமயம் – கா.சு.பிள்ளை எழுதிய நூலிலிருந்து)

No comments:

Post a Comment

நன்றி