Tuesday 11 August 2015

சிவபூசையின் இன்றியமையாமை பற்றி சமயக் குரவர்கள்...!



இறைவனை அடைவிக்கும் படிமுறைகள் நான்கு. அவை சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்பன. இந்த நான்கு நெறிகளில் நோன்பு எனப்படும் இரண்டாம் படிமுறையில் சிவபூசை அடங்கும்.

இது படிமுறை என்றமையால் இந்தப்படியில் காலை வைத்துத்தான் அடுத்த படிகளில் ஏற முடியும் என்பதும், ஏறி இறைவனை அடையமுடியும் என்பதும் கூறாமலே விளங்கும் இதனால் இதன் இன்றியமையாமை புலனாகிறது.

இவ்வாறாகின் இதன் இன்றியமையாமை பற்றி நம் சமயக் குரவர்களின் கருத்து என்ன? அவர்கள் இதை வலியுறுத்தி இருக்கிறார்களா?

முதலில் சீல நெறியை விளக்க வந்தவர் என்றும், நம் சமய குரவரில் முதலாவதாக வைத்து எண்ணப்படுபவருமான சம்பந்தர் இதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.
(முதல் திருமுறை – பதிக எண்:21 - திருச்சிவபுரம், பாடல் எண்: 04)

இந்தப்பாட்டில் சம்பந்தர் இறைவனுக்கு நறுநீரால் திருமஞ்சனம் செய்யச் சொல்கிறார்; சந்தனக் கலவையைச் சாத்தச் சொல்கிறார். அன்றலர்ந்த நாண் மலர்களால் நறும்புகை காட்டச் சொல்கிறார். பதினாறு தீபங்களை வளரொளியாக நிரல்படக் காட்டச் சொல்கிறார் இவையனைத்தும் சிவபூசை எனப்படும் நோன்பு வழிபாட்டின் உறுப்புக்கள். இவற்றைக் கொண்டு நியதிப்படி வழிபடும் அடியவர்க்கு திருச்சிவபுரத்து இறைவனாகிய சிவபெருமான் குறைவில்லாத பதமுத்தியை நாம் உரிமைக்குரல் கொடுக்காமலேயே தானாக வந்து சேர உதவுவான் என்கிறார்.

சரி, இது இறந்தபின் அல்லவா வரும்? என்று ஏக்கத்துடன் கேட்போருக்கு ஆறுதலாக இவ்வாறு சிவபூசை செய்து நியதிப்படி வழிபடும் அடியவரைச் செயமகள் என்று கூறப்படும் திருமகளின் தலைவர் என்று மக்கள் போற்றும்படி இவ்வுலகிலேயே நிதிக்குவையும் சிவபெருமான் நல்குவார் என்று பாட்டின் இறுதியில் கூறுகிறார்.
(தொடரும்)

No comments:

Post a Comment

நன்றி