மதுரையில்
நீர்வளம் குறைந்து குளம் ஓடை உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டபோது நாரை ஒன்று
இரை தேடி காட்டுக்குச்சென்றது. அங்கு நீர் நிறைந்த குளத்தைக் கண்டு
மகிழ்ந்தது. குளத்தில் முழு நீறு பூசிய அடியவர்கள் ஐந்தெழுத்து மந்திரம்
ஓதி நீராடிக் கொண்டிருந்தனர். அறம், பொருள், இன்பம் வீடு முதலான நான்கு
வேதங்களையும், பரமனின் அருள் திருக்கோலப் புகழையும் பாடி வழிபட்டனர். இனிய
மந்திர ஒலிகளைக் கேட்ட நாரை அக்குளத்தில் அடியவர்களைச் சுற்றிலும் சிறிய
மீன்களும் பெரிய மீன்களும் துள்ளி விளையாடிய விந்தையைக் கண்டு
ஆச்சரியப்பட்டது. பெரிய மீன்கள் சிறிய மீன்களை உண்ணாத அற்புதக் காட்சியைக்
கண்டது.
பரமனைப்
போற்றும் மந்திர ஒலியை கேட்டும், மீன்களின் கொல்லா நோன்பையும் கண்ட நாரை
இனி தானும் மீன்களை உண்பது இல்லை என்று முடிவு செய்தது. அதன் பின்னர்
தண்ணீர் மட்டுமே பருகியது.
நீராடி
மந்திரம் சொல்லி முடித்துக் கரையேறிய அடியவர்கள் தமிழ் வேள்வி
வழிபாடுகளைச் செய்தனர். பரமனின் அருட் செயல்களைப் பாடி வழிபட்டனர்.
பரமன் அன்பர்களுக்குக் காட்டிய மாபெரும் கருணை, மகிமையையெல்லாம் பேசி மகிழ்ந்தனர். அவையாவன:
- சந்திரனுக்கு வாழ்வளித்தது.
- தென்முகக் கடவுளாய் அமர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வேதங்களை உரைத்தது.
- ஐம்முக ஈசனாய் ஆகமம் அருளிச் செய்தது.
- நாகங்களை அணிந்து கொண்டு நாகங்களுக்கு அருளி நாகேசுவரன் ஆனது.
- பகீரதனுக்காக கங்கையைத் தாங்கி மண்ணுலகைக் காத்தது.
- நஞ்சு உண்டு பிரம்ம லோகம், வைகுண்டம் உட்பட அனைத்து உலகங்களையும்; நான்முகன், திருமால் உட்பட அனைத்து உயிர்களையும் காத்தது.
- புன்னகையால் முப்புரம் எரித்து அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அருள் புரிந்தது.
- முக்கண்ணன் ஆகி உலகங்களை வாழ வைத்தது.
- விளக்கைத் தூண்டிய எலியை மகாபலிச் சக்கரவர்த்தியாக்கியது.
- மரத்தின் மேல் இருந்து வில்வ இலைகளை உதிர்த்த குரங்கினை முசுகுந்தச் சோழசக்கரவர்த்தியாக்கியது.
- வாமனனால் குருடாக்கப்பட்ட சுக்கிராச்சாரியருக்கு கண் அளித்தது.
- மார்க்கண்டேயருக்காகத் திருவடியால் காலனை மாய்த்துப்பின் கருணை காட்டி வாழ வைத்தது.
- நெற்றிக்கண்ணால் காமனை எரித்துப் பின் இரதிக்காகப் பெரும் கருணையுடன் உயிர் கொடுத்தது.
- சிவபூசை செய்த திருமாலுக்குச் சக்கரத்தையும் சங்கினையும் அருளிச் செய்தது.
- தட்ச யாகத்தில் தலை துண்டிக்கப்பட்ட நான்முகனுக்கும் திருமாலுக்கும் மீண்டும் சிரம் அருளியது.
- மற்ற தேவர்களுக்கும் அவரவர்கள் இழந்த அங்கங்களை நலமாக்கி அருளிச் செய்தது.
- நான்முகன் சிரம் கொய்த பைரவருக்கும், பிள்ளையாருக்கும், முருகனுக்கும் அருள் புரிந்தது.
- உபமன்யுவுக்காக பாற்கடல் அருளியது.
- நான்முகன், திருமால், உருத்திரன் முதலான மும்மூர்த்திகளுக்கும், பராசத்திக்கும், கலைமகளுக்கும், திருமகளுக்கும் பல முறையும் பல தலங்களிலும் பல வகையிலும் அருளியது.
- திருமால் பிறந்த பல பிறப்புகளிலும் கூர்ம சம்காரமூர்த்தியாகவும், நரசிம்ம சம்கார மூர்த்தியாகவும் தோன்றி, திருமாலுக்கு கருணை புரிந்து மீண்டும் வைகுண்ட வாழ்வை திருமாலுக்கு அருளியது.
- ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டு அசுரர்களை ஏமாற்றிய மோகினியின் பாவம் போக்கியது.
- தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையின் தோலை உரித்து இடையில் அணிந்து கொண்டது.
- சிவபூசை செய்த வாமனனது குற்றமும் பழியும் போக்கி அருளியது.
- பரசுராமருக்கு மழுவாயுதத்தை அருளியது.
- சிவபூசை செய்த இராமனது பிரம்மகத்தி தோசம் போக்கியது.
- காணாமல் போன மைந்தனை மீண்டும் பெறுவதற்காக ருக்குமணியுடன் சோமவார விரதம் இருந்து சிவபூசை செய்த கண்ணனுக்கு அருளியது.
- பல்வேறு தலங்களிலும் சிவபூசை செய்து வழிபட்ட திருமால் உள்ளிட்ட தேவர்களுக்கும், கிரகங்களுக்கும், முனிவர்களுக்கும், அடியார்களுக்கும், அசுரர்களுக்கும், பறவைகளுக்கும், மிருகங்களுக்கும், புழுபூச்சிகளுக்கும் கருணை காட்டி அருளியது எனப் பரம்பொருளின் அருட்செயல்களை யெல்லாம் ஓதினர்.
மதுரை
பொற்றாமரைக்குளப் பெருமை பாடி சொக்கநாதர் அன்பர்களுக்குக் காட்டிய
மாபெரும் கருணை மகிமையெல்லாம் பேசி மகிழ்ந்தனர். பரமனின் மகிமைகளை கேட்ட
நாரை சொக்கநாதர் கோயிலை நோக்கிப் பறந்தது.
பொற்றாமரைக்
குளத்தில் முழுகி கோயிலை வலம் வந்தது. தண்ணீர் மட்டுமே பருகி வாழ்ந்தது.
புனிதப் பொற்றாமரைக் குளத்தில் இருந்த மீன்களைப் பறவைகள் உண்பதைக் கண்டு
வருந்தியது.
சைவப்பிறவியாகப்
பிறந்த மனிதர்களே பிறவிப்பண்பு மாறி மற்ற உயிர்களை அடித்து உண்ணும்
மாமிசப்பிராணியாக இருக்கும்போது மாமிசப்பிறவியாகப் பிறந்த பறவைகளின்
மாமிசப்பிறவியாகப் பிறந்த பறவைகளின் குணத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்று
கலங்கியது.
நாள்தோறும்
சொக்கநாதர் கோயிலை வலம் வந்த நாரை பொற்றாமரைக் குளத்தில் மீன்களே இல்லாமல்
போகுமாறு அருள வேண்டும் என்று பரம்பொருளை வேண்டியது. நாரையின் வேண்டுதலுக்கு இரங்கிப் பொற்றாமரைக்குளத்தில் மீன்கள் இல்லாதவாறு அருள்புரிந்து நாரையின் துயர் தீர்த்தார்.
மாமிசம்
உண்ணும் பறவை இனமாகப் பிறந்தாலும் பக்தியுடன் சீவகாருண்ய வாழ்க்கை
வாழ்ந்து பல நாட்கள் நீரை மட்டுமே பருகி சொக்கநாதர் கோயிலை வலம் வந்த
நாரைக்குப் பரமன் மீன்டும் வந்து பிறக்காத முத்தி அருளிச் சிவகணமாக்கிச்
சிவலோக வாழ்வை அருளிச் செய்தார்.
No comments:
Post a Comment
நன்றி