Sunday 4 January 2015

திருமன தடை நீங்க--->நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்


            "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்' என்பது பழமொழி.

நந்தியானவர் திருக்கயிலையில் வாயில் காப்பாளராக இருப்பவர். இவர் பூமியில் அவதரித்துத் திருமணம் செய்து கொண்டது பற்றிப் புராணம் கூறுகிறது.

பூலோகத்தில் வாழ்ந்த சிலாத முனிவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் திருவையாற்றில் அருள்புரியும் ஸ்ரீஐயாறப்ப ரைப் பூஜித்துத் தவம் செய்தார். அப்போது ஓர் அசரீரி, "முனிவரே, நீர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, யாகம் முடிந்ததும் பூமியை உழ வேண்டும். அப்போது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப் படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறுதான்' என்று கூறியது.

அசரீரி வாக்குப்படி முனிவர் யாகம் செய்தார். யாகம் முடிந்ததும் பூமியை உழுதார். அப்போது ஒரு பெட்டகம் கிடைத்தது. அதில் ஓர் ஆண் குழந்தை இருந்தது. பிறந்த அன்றே ஸ்ரீபஞ்சநதீஸ்வரரால் அபிஷேகிப்பட்ட பெருமை அவருக்குக் கிடைத்தது. அவர்தான் ஜபேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்ட நந்தி. இந்த அபிஷேகம், அவர் அவதரித்த நாளான பங்குனி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று மாலை நடைபெற்றதாகப் புராணம் கூறுகிறது.

"ஜபேஸ்வரர் பதினாறு ஆண்டு காலம்தான் பூலோகத்தில் இருப்பார்' என்று சிவபெருமான் அசரீரியாகச் சொன்ன தகவல் முனிவரை வாட்டியது.

இதனை அறிந்த ஜபேஸ்வரர், திருவை யாற்று ஈசனை நோக்கி அங்குள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் கழுத்தளவு நீரில் நின்று கடும்தவம் புரிந்தார். காலம் கடந்தது. ஜபேஸ்வரரின் தவத்தைப் போற்றிய சிவபெருமான், "என்றும் பதினாறாய், சிரஞ்சீவி யாக வாழ்வாய்' என்று அருளியதுடன், ஜபேஸ்வரருக்கு அதிகார நந்தி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

இறைவனிடம் வரம் பெற்று நீண்ட ஆயுளு டன் திரும்பிய ஜபேஸ்வரருக்குக் காலாகாலத்தில் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடினார்கள். (சிவபெரு மானே பெண் தேடியதாக வும் சொல்வர்.) வசிஷ்ட முனிவரின் பேத்தியும்- வியாக்ர பாத முனிவருடைய மகளும்- உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாசை என்ற பெண்ணைத் தன் மகனாகிய ஜபேஸ்வரருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்வித்தார் சிலாத முனிவர்.

பிறகு, ஜபேஸ்வரர் ஸ்ரீஐயாறப்பனிடம் உபதேசம் பெற்று, கயிலையில் சிவ கணங்களுக் குத் தலைவர் ஆனார். இந்தப் புராண வரலாற்றின் அடிப்படையில் திருவையாற்றி லும் திருமழபாடியிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது. சிலாத முனிவர் பூமியை உழும்போது நந்திதேவர் கிடைத்த இடம் "அந்தணர்புரம்' ஆகும். அங்கு வெள்ளிக் கலப்பையால் பூமியை உழும் நிகழ்ச்சி நடைபெறும். அங்கு நந்திதேவர் கிடைத்த இடத்தில் கலப்பை செல்லும்போது ஓர் பெட்டியை எடுப்பார்கள். அந்தப் பெட்டியிலிருந்து நந்தியை வெளியே எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

அன்று மாலை திருவை யாற்றில் நந்திக்கு பட்டாபி ஷேகம் நடைபெறும்.

மறுநாள், திருமழபாடியில் நந்தியெம்பெருமானுக்கும் வசிஷ்ட முனிவரின் புதல்வியான சுயம்பிரகாசை தேவிக்கும் திருமண வைபவம் நடைபெறும். அப்போது அந்த ஊரே வாழைமரம், தோர ணங்கள் கட்டி விழாக்கோலம் பூண்டிருக்கும்.

திருமணத்திற்கு திருவையாற்றிலிருந்து இறைவனும் இறைவியும் பல்லக்கில் வருவார் கள். நந்திதேவர் குதிரை வாகனத்தில் வெள்ளித் தலைப்பாகை அணிந்து, செங்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு செல்வார்.

இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழ பாடிக்குச் செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். இதனை, "வருவது வைத்தியநாதன் பேட்டை; போவது புனல்வாயில்' என்ற பழமொழியாகச் சொல்வர்.

இந்த விழாவின் தொடர்ச்சிதான் திருவை யாறு சப்த ஸ்தான விழாவாகும். திருவை யாற்று பஞ்சநதீஸ்வரர், நந்தி சகிதமாக திருப் பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த் தானம் ஆகிய ஊர்களுக்குச் செல்வார்.

சப்த ஸ்தான விழாவில் முக்கியமான ஊர் திருக்கண்டியூர். இங்கே இறைவன் இளைப் பாறுவார். சிலாத முனிவரின் அண்ணன் சதாதாப முனிவர் இறைவனுக்கும் நந்திக்கும் கட்டுச்சாதம் கட்டிக் கொடுத்தாராம். அந்த நிகழ்ச்சி இன்றும் இந்தத் திருமண விழாவினை யொட்டி நடைபெறுகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள் (ஆண், பெண்) நந்திக் கல்யாணத்தைத் தரிசித்தால், தடைகள் உடைக்கப்பட்டு உடனே நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இதனால்தான், "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்' என்ற பழமொழி ஏற்பட்டது என்பர்.

No comments:

Post a Comment

நன்றி