Tuesday 17 December 2013

மார்கழி சிறப்பு & மார்கழி மாத விரத பலன்கள்



"மாதத்தில் நான் மார்கழி " என்றான் கிருஷ்ணன்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்று சிலரும் திறக்காத கோயில்களும் திறக்கும் சிறந்த
மாதம் என்றும் ஆண்டு முழுவதும் தேவைப்படும் நெல்லையும் உளுந்தையும் சேமிக்கும்
மாதம் என்றும் சிலரும் , தை மாதத்தில் கொண்டாடும் அறுவடை விழாவைச் சிறப்பாக
கொண்டாட மார்கழி மாதத்தில் கரும்பு , நெல் , உளுந்து , வாழை , மஞ்சள் போன்றவற்றை
வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள்
மார்கழி இல்லை , அதனால் அது சூன்யமாதம் இல்லை என்றும் சிலரும் கூறுகின்றனர்.
போதாக்குறைக்கு ' மாதங்களில் நான் மார்கழி' என்று கீதையில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குக் கூறுகிறான். ''

ஒவ்வொரு மாதத்திக்கும் திருமாலின் திருநாமங்கள் உண்டு.
அதில் மார்கழி 'கேசவன் ' என்பது பெயர்.
கேசவன் என்பதற்குக் கூந்தல் என்னும் பெயர்கொண்ட அரக்கனை
அழித்ததற்காகத் திருமாலுக்குப் பெயர்.

"கேசி" என்னும் அரக்கனை அழித்ததால் கேசவன் என்ற
பெயர் ஏற்பட்டதாக புராணம் கூறும். திருமாலின் திருவாயிரப்பேர்
தொடுப்பிலும் (சகஸ்ரநாமாவளி) "கேசி" என்னும் பெயர் இருக்கும்.
இந்தத் திருவாயிரத்திற்கு ஆதி ஆண்டும். கேசமுடையவன் "கேசி".
அதுபோலத்தான் "மது கைடபர்"களை அழித்தலால்
"மாதவன்" என்ற பெயர் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட புராணம் கூறும்.

சங்கத் தொகைநூலானதும் இந்தியாவிலேயே தமிழிசையில் (கருநாடகவிசை) அமைக்கப்பட்ட இசைப்பாடல்களில் மிகத்தொன்மையானதுமான பரிபாடலின் பாடல்

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரிசினம் கொன்றோய்நின் புகழுரு வினகை
நகையச் சாக நல்லமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயமில் ஒருகை!
இருகை மாஅல்!
முக்கை முனிவ! நாற்கை யண்ணல்!
ஐங்கைம் மைந்த! அறுகை நெடுவேள்! எழுகை யாள! எண்கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக்கை மன்பே ராள!
பதிற்றுக்கை மதவலி! நூற்றுக்கை யாற்றல்!
ஆயிரம் விரித்தகைம் மாய மள்ள!
பதினா யிரங்கை முதுமொழி முதல்வ!
நூறா யிரங்கை ஆறறி கடவுள்!
அனைத்தும் அல்லபல அடுக்கிய ஆம்பல்
இனைத்தென எண்வரம் பறியா யாக்கையை!
நின்னைப் புரைநினைக்கின் நீயல(து) உணர்தியோ!"
என்னும் மிக அழகிய பகுதியில் வருவதைக் காண்க.

["கூந்தல் என்னும் பெயர்கொண்ட கூந்தல் செறிந்த தலையையுடைய
அவுணனின் வெஞ்சினத்தை யொழித்த நின் கைகள் புகழுடையன"]

அ·து வடமொழியிற் கூந்தல் = முடி = கேசம் என்பட கேசவன் என்றாயது.

மேற்கண்டாவாறு மிக அழகான துதிப்பாடல்களை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
நம்முன்னோர் இயற்றியுள்ளார்கள். அவற்றைப் படித்து நடைமுறையில் இறைவழிபாட்டிற்குப்
பயன்படுத்த வேண்டியது நம் கடமை. அப்பொழுதுதான் தமிழ்ப்பண்பாடு உண்மையாகவே வாழ வகைசெய்ய வியலும்; அவை உயர்ந்த மந்திரங்களும் ஆகும்;
பார்ப்பதற்கு முதலில் கடினமாகத் தோன்றிடினும் பழகியவுடன் அவற்றின் இனிமை தெரியும்;
தமிழின் இனிமையும் அவற்றிலுள்ள உணர்ச்சிகரமான பண்பும் விளங்கும்; மேற்காட்டியது
திருப்பெயர்மாலைக்கு நல்ல சான்று. பெயருருட்டிற்கு (நாம்ஜபம்) மிகவும் பொருந்தும்]

கேசவன் என்பதற்கு அறிவு தரும் தெய்வம் என்று பொருள். மார்கழி மாதத்திற்கு
இப் பெயர் இட்டிருக்கும் காரணம் , இம்மாதம் மனிதனுக்கு அறிவை தருகிறது என்ற
நம்பிக்கையே ஆகும்.

அத்தோடு மார்கழி மாதத்தில் அதிகாலை சூரியனிடத்து ஒளிர்ந்து வீசுகின்ற சூரிய கதிர்
'ஓஸோஸான்' , மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.


சிவபெருமான் நஞ்சுண்டதைத் தடுத்து , அந்த நஞ்சு அவருடைய நீண்ட ஆயுளுக்காக
செய்த சக்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இம்மாதத்தில் வருகின்ற திருவாதிரை
அன்று விரதமிருக்கிறார்கள். திருமால் அறிதுயல் கெடுத்துக் கண்விழிப்பதுவைகுண்ட ஏகாதசியன்றுதான். அது மார்கழி மாதத்தில்தான் வருகிறது.

மார்கழி மாதத்தில் கோலங்கள் இடப்படாத இல்லங்களில் கூட கோலமிட்டு , நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசனிக்காய் பூவையாவது வைப்பதற்கு முயல்வார்கள்.

இத்துணை காரணங்களால் மார்கழி சிறப்பு மாதம் சிறப்பு பெறுகிறது.



மார்கழி மாத விரத பலன்கள்

சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும் உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள்.

இந்த நாளில் சில கோவில்களில் சிறப்புப் பூஜைகளைச் செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் அருளினார். மகளிர் நோன்பு நோற்பதற்குத் தகுந்த மாதம் மார்கழி. பாகவத புராணத்தில், இந்த நோன்பைப் பற்றிய ஒரு குறிப்புண்டு.

ஆயர்பாடிக் கன்னியர், மார்கழி மாத முப்பது நாள்களும் கவுரி நோன்பு நோற்று, காத்யாயனியை பார்வதியை வழிபட்டனர். ஸ்ரீகிருஷ்ணனைக் கணவனாக அடைய விரும்பினர் `கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும்  குறிக்கோளால் ஒன்றே. வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை மாதம் என்று வழங்குகின்றன.

மார்கழியின் பனிக் குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே இது பீடை மாதம் என்று சிலர் தவறாக திரித்து கூறி விட்டனர். உண்மையில் அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழி மாதம். பீடு என்றால் சிறப்பு பெருமை என்ற அர்த்தமும் உண்டு.

எனவே பீடு உடைய மாதம் மார்கழி என்றனர். அதுவே மருவி பீடை மாதம் என்றாகி விட்டது. மார்கழி வந்தாலே எல்லா மகளிருக்கும் மகிழ்ச்சி பொங்குகிறது. விடியற் காலையில் எழுகின்றனர். குளிரிலும் மன உறுதியுடன் நீராடுகின்றனர். பனி தலையில் படிய வீட்டையும் முற்றத்தையும் பெருக்கித் தூய்மைப்படுத்துகின்றனர்.

தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரிக்கின்றனர். கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து, அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர். மார்கழியில் தினமும் பாடும் பக்திப் பாடல்களுடன் திருப்பாவை, திருவெம்பாவை, தொண்ரடிப் பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி யெழுச்சி, மாணிக்க வாசகர் அருளிய திருப்பள்ளி யெழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோவில்களிலும் பாராயணம் செய்கின்றனர்.

மார்கழியில் சிறப்பாகப் பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு. வைணவக் கோவில்கள் சிலவற்றில் மார்கழியில் இராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

வைகுண்ட ஏகாதசி...........

மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதமிருக்க வேண்டும். துளசி தீர்த்தம் தவிர வேறு எதையும் உண்ணவும், பருகவும் கூடாது.

இரவு முழுவதும் சோர்வில்லாமல் கண் விழித்து, பரந்தாமனைப் போற்றும் பக்திப் பாடல்களைப் பாடலாம். பரதபதம் பெறுவதற்காக பரம பதமும் ஆடலாம். மறுநாள் துவாதசி அன்று விஷ்ணுவை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

சொர்க்கவாசல்........

வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில் வைணவக் கோவில்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்பது, ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர். எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, `காயத்திரியை விடச் சிறந்த மந்திரமில்லை, தாயை விடச் சிறந்த தெய்வமில்லை, ஏகாதசியை விடச் சிறந்த விரதமில்லை' என்ற வழக்கும் ஏற்பட்டது.

ஆறு சமய வழிபாடு..........

மார்கழி மாதத்தில் ஆறு சமயங்களுக்குரிய திருநாள்கள் வருகின்றன. காணாபத்யம்-கணபதி வழிபாடு-தினமும் காலையில் சாணப் பிள்ளையாரை நிறுத்திக் கணபதியை வழிபடுகின்றனர்.

சைவம்-சிவபழிபாடு- திருவாதிரை
வைணவம்- விஷ்ணு வழிபாடு - வைகுண்டு ஏகாதசி
கௌமாரம்- முருக வழிபாடு- படி உற்சவம்.
சாக்தம் - சக்திவழிபாடு- பாவை நோன்பு.
சௌரம்- சூரிய வழிபாடு- தைப் பொங்கலன்று சூரியனை வழிபடுகின்றனர். மார்கழி மாத இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை. இதுவே தைப் பொங்கல் விழாவின் தொடக்க நாளாகும்.

படி உற்சவம்.........

டிசம்பர் 31-ந்தேதி நாள் மார்கழியில் பொருந்தி வருகிறது. அந்நாளில், முருகனது திருத்தணி முதலான மலைக்கோவில் திருத்தலங்கள் பலவற்றில் `படி உற்சவம்' மிக்க சிறப்புடன் நடைபெறுகின்றது. பல குழுவினர் மலைப்படிகளின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ்ப் பாடல்களை பாடுகின்றனர்.

திருவாதிரைத் திருநாள்..........

மார்கழி பவுர்ணமியுடன் திருவாதிரை நட்சத்திரம் பொருந்தும் நாளே திருவாதிரைத் திருநாள். அன்றைய நாளில் சிதம்பரம்-தில்லை நடராஜனைத் தரிசிக்கும் தரிசனத்தை ஆருத்ரா தரிசனம் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். திருவாதிரைத் திருநாளன்று இறைவனின் முன் களி நிவேதனம் செய்கின்றனர். ஏழு காய்கறிகளைக் கலந்து செய்யும் கூட்டைத் திருவாதிரைக் கூட்டு என்று அழைக்கின்றனர்.

அனுமன் ஜெயந்தி........

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் ஆஞ்சநேயர் அனுமன். ஏதேனும் ஒரு நல்ல காரியம் நிறைவேற வேண்டும் என்று அனுமனைப் பிரார்த்திக்க வேண்டும். ராம நாமத்தைக் கூறியவாறே வாலின் தொடக்கத்தில் ஒரு குங்குமப் பொட்டை இட வேண்டும்.

தினமும் இவ்வாறே தொடர்ச்சியாக, இட்டுக் கொண்டு வந்தால், குங்குமப் பொட்டு வரிசை வாலின் நுனிப் பகுதியை அடைவதற்கு முன்னால், அனுமனின் பேரருளால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். அனுமனை வழிபடுகின்றவர்களுக்கு அவர் புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை ஆகியவற்றை அருளுகின்றார். இது காஞ்சி மகா பெரியவரின் அருள்வாக்கு. 

No comments:

Post a Comment

நன்றி