Tuesday 13 August 2013

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை - சிவன், தானியம் - கோதுமை, வஸ்திரம் - சிவப்பு, புஷ்பம் - செந்தாமரை, ரத்தினம் - மாணிக்கம், உலோகம் - தாமிரம்.
திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோமவார விரதம் என்று பெயர். திங்கள்கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை - துர்க்காதேவி தானியம் - நெல், வஸ்திரம் - வெள்ளை, புஷ்பம் - வெள்ளரளி, ரத்தினம் - முத்து, உலோகம் - ஈயம்.
செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை - முருகன், தானியம் - துவரை, வஸ்திரம் - சிவப்பு, புஷ்பம் - சண்பகம், ரத்தினம் - பவழம், உலோகம் - செம்பு.
புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி - கடலை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை - விஷ்ணு, தானியம் - பச்சைப்பயிறு, வஸ்திரம் - பச்சைப்பட்டு, புஷ்பம் - வெண்காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் - பித்தளை.
வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நந்நாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக்கும். குரு பகவானின் தேவதை - ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் - கொண்டக்கடலை, வஸ்திரம் - மஞ்சள், புஷ்பம் - முல்லை, ரத்தினம் - கனகபுஷ்பராகம், உலோகம் - தங்கம்.
வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படுகிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான் ,தொல்லைகள் நீங்கி, நல்லவை நடக்கும். வெள்ளிக்கிழமையன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய்வது நல்ல பலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை - வள்ளி, தானியம் - வெள்ளை மொச்சை, வஸ்திரம் - வெண்பட்டு, புஷ்பம் - வெண்தாமரை, உலோகம் - வெள்ளி, ரத்தினம் - வைரம்.
சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரையாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனிபகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் - எள், வஸ்திரம் - கருப்பு வஸ்திரம், ரத்தினம் - நீலம், புஷ்பம் - கருங்குவளை, உலோகம் - இரும்பு.
ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகுவிரதத்தை அனுஷ்டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலுப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தார மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை - பத்ரகாளி, தானியம் - உளுந்து, ரத்தினம் - கோமேதகம், வஸ்திரம் - கருப்பு வஸ்திரம், உலோகம் - கருங்கல், புஷ்பம் - மந்தாரை மலர்.
கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக்கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேதுவிற்குரிய தேவதை - விநாயகர், தானியம் - கொள்ளு, வஸ்திரம் - பலகலர் கலந்த வஸ்திரம், ரத்தினம் - வைடூரியம், புஷ்பம் - செவ்வல்லி, உலோகம் - துருக்கல்.

No comments:

Post a Comment

நன்றி