பக்தி என்பது பூர்வபுண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கக் கூடியது.
கடும் வெயிலில் குடை போல், இறைவன் மேல் வைக்கும் பக்தி, ஒருவருக்கு
இவ்வுலக வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து காக்கும் கவசமாக அமையும்.
நம் கர்ம வினைகளின் பயனாக வரும் துன்பங்களின் வெம்மை நம்மை அதிகம்
தாக்காதவாறும், நம் குண இயல்புகள் துன்பங்களைக் கண்டு மாறுபாடு
அடையாதவாறும் காத்து நிற்பது பக்தியே.
'பக்தி: ஸித்தேர்-கரியஸீ' (பக்தி, சித்திகளை காட்டிலும் மேலானது) என்பது ஆன்றோர் வாக்கு.
மிகச்
சிறந்த பக்திமான்களின் சரிதங்கள் நமக்கு எப்போதும் உற்சாகமூட்டி நம்பிக்கை
அளிப்பவை. அவர்களுக்கு நேர்ந்த சோதனைகளும், அவற்றை, பக்தியின் சக்தியால்
அவர்கள் வெற்றி கொண்ட விதமும் படிக்குந்தோறும் நம்மைப் பண்படுத்தி,
உயர்த்தக் கூடியவை. அப்பேர்ப்பட்ட பக்திமான்களுள் ஒருவரான அம்பரீஷனின்
சரிதத்தை இந்தப் பதிவில் நாம் காணலாம்.
வைவஸ்வத மனுவின் பத்தாவது புதல்வன் நபாகன். நபாகனுடைய குமாரன் நாபாகன். நாபாகனின் மைந்தனே அம்பரீஷச் சக்கரவர்த்தி .
மச்சாவதாரம் நிகழ்ந்த சமயத்தில், அந்நிகழ்வுக்குத் துணை புரிந்த சத்யவிரதனே
வைவஸ்வத மனுவானார். மச்சாவதாரப் புராணம் குறித்த செய்திகளுக்கு கடல் சம்பந்தப்பட்ட சில புராண நிகழ்வுகள் பதிவைப் பார்க்கவும்.(மத்ஸ்ய ஜெயந்தி....மே 7, செவ்வாய்க்கிழமை).
அம்பரீஷர், ராஜரிஷி எனப் போற்றப்பட்டவர். மிகச் சிறந்த பக்திமான்.
இப்பூவுலகு முழுவதையும் ஒரு குடையின் கீழ் அரசு புரிந்து, நிகரற்ற
செல்வத்தை அடைந்திருந்த போதிலும், அதன் காரணமாக, எவ்வித மதி மயக்கமும்
அடையாதவர். பகவான் வாசுதேவனிடத்தில் அசையாத பக்தி பூண்டவர். பகவானின் பரம
பக்தர்களான பாகவதர்களை மிகவும் மதித்துப் போற்றி பூஜிப்பவர்.
பற்றின்றி, தான் செய்யும் எல்லாவிதமான செயல்களையும் பகவானுக்கு அர்ப்பணம்
செய்து, ஒருமைப்பட்ட மனதுடன் பக்தி செய்த அம்பரீஷரது பக்திக்கு மெச்சி,
பகவான் ஸ்ரீவிஷ்ணு, ஆயிரம் முனைகளுடைய தம் சுதர்சன சக்கரத்தை அவரைக்
காக்கும் பொருட்டு அவருக்கு அளித்து அருளினார்.
த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோsஸ்ய
பக்த்யைவ தேவ நசிராதப்ருதா: ப்ரஸாதம் |
யேனாஸ்ய யாசனம்ருதேsப்ய பிரக்ஷணார்த்தம்
சக்ரம் பவான் ப்ரவிததரா ஸ ஹஸ்ரதாரம் ||
(ஸ்ரீமந் நாரயணீயம்)
(ஸ்ரீமந் நாரயணீயம்)
(தேவ தேவா!!, எல்லாச் செயல்களையும் உம்
பிரீதிக்காகவே செய்து வந்த அவரை(அம்பரீஷனை) மெச்சி, அவருக்கு அருள்
புரிந்தீர். அவரைக் காக்கும் பொருட்டு, அவர் பிரார்த்திக்காமலேயே, ஆயிரம்
கூரிய நுனிகளை உடைய சுதர்சன சக்கரத்தை அளித்தீர்.)
அம்பரீஷர், ஸ்ரீவிஷ்ணுவுக்கு மிக உகந்த த்வாதசீ ((ஏகாதசி) விரதத்தை ஒரு
வருட காலம் அனுஷ்டிக்க நிச்சயித்து, அவ்வண்ணமே, அந்த உயர்ந்த விரதத்தை,
ஒத்த மனதினளான தம் பத்னியுடன் அனுஷ்டித்தார். ஒரு வருடம் கழித்து,
கார்த்திகை மாதம் விரதம் நிறைவடையும் சமயத்தில், மூன்று நாட்கள் உபவாசம்
இருந்து, யமுனா நதியில் நீராடி, மது வனத்தில் ஸ்ரீவிஷ்ணுவைப் பூஜித்தார்.
அறுபது கோடி கோதானம் செய்து பகவானை ஆராதித்தார். பகவானின் பக்தர்களையும்
பூஜித்தார்.
பின் பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் சிறந்த உணவை வழங்கி, அவர்கள் யாவரும்
உண்ட பின், அவரவர் வேண்டிய பொருளை தானமாக அளித்து, பின் அவர்கள் அனைவரின்
அனுமதியையும் பெற்று, பாரணை (விரத நிறைவு) செய்ய முற்பட்டார்.
அந்தச் சமயத்தில் துர்வாஸ மஹரிஷி எழுந்தருளினார். எளிதில் கோப வசப்பட்டு பிறரைச் சபிக்கும் சுபாவமுடையவர் துர்வாஸர்.
துர்வாஸரைக் கண்ட அம்பரீஷர், ஓடிச் சென்று அவரைத் தகுந்த முறையில்
உபசரித்தார். அவருக்கு ஆசனமளித்து மரியாதைகள் செய்து, உணவு உண்ண
வேண்டினார். அதை ஏற்ற துர்வாஸரும், தாம் யமுனையில் நீராடி விட்டு வருவதாகக்
கூறிச் சென்றார்.
யமுனையில் நீராடிய துர்வாஸர், கண்களை மூடி பிரம்மத் தியானத்தில் ஆழ்ந்து
விட்டார். இங்கே நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. த்வாதசீ திதி நிறைவடையும்
நேரத்திற்குள் அம்பரீஷர் பாரணை செய்தாக வேண்டும். அப்போதே இந்த ஒரு வருட
காலமாக அனுஷ்டித்து வந்த விரதம் நன்முறையில் நிறைவும் பெறும். ஆனால்,
துர்வாஸரோ வருவதாகத் தெரியவில்லை. இதனால் கவலை கொண்ட அம்பரீஷர், தம்
குருமார்களுடன் கலந்தாலோசித்தார். 'த்வாதசீ திதி நிறைவடைவதற்குள் துளசி
தீர்த்தம் மட்டும் அருந்தலாம். அவ்வாறு அருந்துவது பாரணை செய்ததற்குச்
சமம். அதே வேளையில் அதிதியாகிய துர்வாஸ மஹரிஷியை விட்டுவிட்டு உணவருந்திய
பாவத்திற்கும் ஆளாகாமல் இருக்கலாம்' என்று அவர்கள் சொன்ன யோசனையை ஏற்றார்.
அவ்வாறே பாரணை செய்து விட்டு, துர்வாஸ மஹரிஷியை எதிர் நோக்கிக் காத்திருந்தார்.
துர்வாஸ மஹரிஷி வந்தவுடன், தகுந்த முறையில் உபசரித்தார். ஆனால் துர்வாஸரோ,
தம் ஞானதிருஷ்டியின் மூலமாக, அம்பரீஷர் செய்ததைத் தெரிந்து கொண்டார்.
மிகுந்த கோபம் கொண்டு, 'அதிதியான என்னை போஜனம் செய்ய அழைத்து விட்டு,
எனக்கு உணவளிக்காமல், தான் மட்டும் உண்டு விட்ட உனக்கு அதன் பலனைத்
தருகிறேன் பார்' என்று விட்டு, தம் ஜடாமுடியிலிருந்த ஜடை ஒன்றைக் கிள்ளி,
கீழே எறிந்தார். அது ஒரு மிகக் கொடிய பிசாசாக உருவெடுத்தது.
அதைக் கண்டு சிறிதும் அம்பரீஷர் மனங்கலங்கவில்லை. தம் இடம் விட்டு அசையாது
நின்றார். ஆனால் அவரைக் காக்க பகவானால் அருளப்பட்ட சக்ராயுதம் அந்தப்
பிசாசைத் தாக்கி, அதைப் பொசுக்கி விட்டு, பின் துர்வாஸரை நோக்கிப்
பாய்ந்தது.
துர்வாஸர் ஓட ஆரம்பித்தார். எங்கு சென்றாலும் ஸ்ரீ சுதர்சன சக்கரம் அவரை
விடாமல் துரத்தியது. துர்வாஸர் சத்ய லோகத்தை அடைந்து, பிரம்ம தேவரைச் சரண்
புகுந்தார். அவரோ, சக்ராயுதத்தை தம்மால் மீற முடியாதென்று சொல்லி
விட்டர். பின் துர்வாஸர் கைலாயத்தை அடைந்தார். சிவனார், ஸ்ரீவிஷ்ணுவையே
சரணடையுமாறு ஆக்ஞாபித்தார். (சில புராணங்களில், சக்ராயுதம், பிசாசைத்
துரத்த, அது பயந்து ஓடி, ஒரு கட்டத்திற்கு மேல், கோபமடைந்து தன்னை ஏவிய
துர்வாஸரைத் துரத்தத் துவங்கியதாகவும், பிசாசு, சக்ராயுதம் இரண்டாலும்
துரத்தப்பட்ட துர்வாஸர் பிரம்மதேவரைச் சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது).
அதன் பின், துர்வாஸர் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். ஸ்ரீபகவானை நோக்கி, அவரது
பக்தருக்குத் தாம் இழைத்த அநீதிக்காக மன்னிப்புக் கோரினார். ஆனால் பகவானோ
துர்வாஸரைப் பார்த்து, 'நான் பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன், யார்
இவ்வுலகப் பற்றனைத்தையும் துறந்து என் பால் பக்தியுடன் என்னைச்
சரணடைகிறார்களோ, அவர்களை நான் ஒரு போதும் கைவிடுவதில்லை. நல்ல பெண்மணிகள்,
தம் கணவன்மார்களை எவ்வாறு தம் அன்பினால் வசப்படுத்துகிறார்களோ, அவ்வாறே,
பக்தியால் என்னிடம் கட்டுண்ட பக்தர்கள் என்னை வசப்படுத்துகின்றனர்.
பக்தர்களின் இருதயமே நான். என் இருதயமே பக்தர்கள் வசம் கட்டுண்டு
இருக்கிறது. உமக்கு விளைந்த இந்தக் கெடுதலிலிருந்து விடுபட நீர்
அம்பரீஷனையே சரணடையும்' என்று திருவாய் மலர்ந்தருளினார்.
துர்வாஸர், உடனே அம்பரீஷர் இருக்கும் இடத்தை அடைந்து, அவரது காலைப் பற்றி,
மன்னிப்புக் கோரினார். சக்ராயுதத்திடமிருந்து தம்மைக் காக்குமாறு
வேண்டினார்.
உடனே அம்பரீஷர், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தைப் போற்றித் துதி செய்தார். துர்வாஸரை விட்டு விடக் கோரி வேண்டினார்.
(ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை வழிபடுவது அளவில்லாத நன்மைகளை அளிக்கக் கூடியது.
குறிப்பாக, கொடும் நோய், தீய சக்திகளால் துன்புறுதல், எதிரிகளால் தொல்லை
போன்ற அனைத்தும் சக்கரத்தாழ்வாரை வழிபட உடனடியாக நீங்கும். கருட
புராணத்தில் இருக்கும், ஸ்ரீ சுதர்சன சக்கரத்தின் மகிமைகளைப் போற்றும் ஸ்ரீ
சுதர்சன சக்கர ஸ்தோத்திரத்திற்கு இங்கு சொடுக்கவும்).
அவரது பக்திக்கு மனமிரங்கி, சக்கரத்தாழ்வாரும் சாந்தமடைந்தார்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலம், துர்வாஸர் திரும்ப வருவதை எதிர்பார்த்து உணவு
உண்ணாமல் காத்திருந்தார் அம்பரீஷர் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. மிகச்
சிறந்த பொறுமைசாலியான அம்பரீஷரை மெச்சி, துர்வாஸ மஹரிஷி, அவருக்கு எல்லா
விதமான ஆசிகளையும் அளித்தார். பின் அன்புடன் அம்பரீஷர் அளித்த உணவை உண்டு,
அவரிடமிருந்து விடைபெற்று, ஆகாய மார்க்கமாக பிரம்ம லோகத்தை அடைந்தார்.
அம்பரீஷர், முன்பிருந்ததை விட அதிகமாக பகவானிடத்தில் பக்தி செலுத்தலானார்.
நாளடைவில், தம் மக்களிடம் அரசை ஒப்புவித்து விட்டு, இகலோக
பந்தங்களிலிருந்து விடுபட்டு, பகவான் ஸ்ரீவாசுதேவனிடம் மனதை நிலைநிறுத்தி,
மேலான மோக்ஷ சாம்ராஜ்யத்தை அடைந்தார். 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றான,
திருவித்துவக்கோடு என்னும் திருத்தலமே, அம்பரீஷர் முக்தி அடைந்த திருத்தலம்
என்பது புராணம்.
பக்தியின் சக்தியை, பகவான் பக்தருக்குக் கட்டுப்பட்டவர் என்பதைத் தெளிவாக
விளக்கும் இந்த அம்பரீஷ சரிதத்தைப் படிப்பவருக்கும் தியானிப்பவருக்கும்
பகவான் மேல் அசையாத பக்தி உண்டாகும். அதன் பயனாக, இறையருள் பெற்று, இக பர
நன்மைகளை எல்லாம் அடைந்து வாழ்வாங்கு வாழ்வர்.
No comments:
Post a Comment
நன்றி