Thursday 28 August 2014

தில்லைஅம்பல நடராசரும் சிதம்பர ரகசியமும்

ஓம் நமசிவாய
தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் – ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்முத்தி
நான்ற மலப்பதத்தே நாடு.
பஞ்ச பூதங்களினாலான இவ் பிரபஞ்சத்தில் இறைவன் பஞ்ச தலங்களின் வீற்றிருந்து படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைப் புரிகின்றான் என சைவசமயம் கூறுகின்றது.
பூதம் என்றால் சக்தி அல்லது பொருள் என்பதாகும் பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனருளிக்கு இணையாக மதித்து நம் முன்னோர்கள் பஞ்ச பூததலங்களை அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
இறைவன் காஞ்சிபுரத்தில்  - நிலமாகவும், திருவானைக்காவில் - நீராகவும், திருவண்ணாமலையில் - நெருப்பாகவும், திருக்காளஹஸ்தியில் - வாயுவாகவும், சிதம்பரத்தில் - ஆகாயமாகவும் தோற்றமளிக்கின்றார்.
ஆகாயத் தலமாக வழிபடும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இடையறாது ஆனந்தத்தாண்டவம் புரியும் நடராஜமூர்த்தம் மூல மூர்த்தியாகவும், உற்சவ மூர்த்தியாகவும் விளங்குகின்றது. இத் தோற்றமானது இறைவன் இயற்றும் பஞ்சகிருத்தியங்களைச் சுட்டி நிற்கின்றது. நடராசப் பெருமானின் வலது திருக்கையிலுள்ள "உடுக்கை" சிவனின் படைத்தல் தொழிலையும்; தூக்கிக் காட்டப்பட்ட "அபய கரம்", அஞ்சேல் என்ற அபயம் காட்டி காத்தல் தொழிலையும்; இடது கரத்திலே ஒளிரும் "அக்கினி" அழித்தல் தொழிலையும்; முயலகனை மிதித்து "ஊன்றிய திருவடி" மறைத்தல் தொழிலையும்  "தூக்கிய இடது திருவடி" அருளலையும் குறிக்கின்றது.

விரிந்திருக்கும் சடைமுடி ஆட்டத்தின் வேகத்தை மட்டும் காட்டாமல், உலக இயக்கத்தில் ஈடுபட்டு உயிர்களின் விடுதலைமீது கொண்ட நாட்டத்தையும் புலப்படுத்துகிறது. அவன் இடுப்பில் உள்ள பாம்பு, காலம் என்னும் கட்டுப்படாத தத்துவத்தைச் சுழற்றுவது நானே என்னும் அவனுடைய மேலாண்மையையும் குறிக்கிறது. அவன் முகத்தில் காணப்படும் ஆனந்தம் இந்த ஐந்தொழிலையும் ஒரு விளையாட்டுப்போல எவ்வளவு எளிதாகச் செய்ய முடிகிறது என்று காட்டுகிறது. கீழே கிடக்கிற "முயலகன்" என்னும் அரக்கன் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மங்களின்மீது சிவனுக்குள்ள ஆதிபத்தியத்தைப் புலப்படுகிறது
சிவபிரானுக்குரிய உருவத் திருமேனிகள் அறுபத்திநான்கு எனக் கூறப்படுகின்றன. இவற்றுள் இலிங்க வடிவம் அருவுருவத் திருமேனியாகும். ஏனையவை உருவத்திருமேனிகளாகும். ஓவ்வொரு உருவத்திருமேனியும் சமயதத்துவக் கருத்துக்களை மட்டுமன்றிக் கலையம்சங்களையும் பிரதிபலிக்கும். இவற்றுள்ளே நடராஜத்திருமேனியானது சைவசித்தாந்தத்தின் பிரதிபலிப்பாக விளங்குவதைக் காணலாம்.
சிதம்பரம் நடராசப் பெருமானை புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை செய்ததால் பெரும்பற்றப்புலியூர் என்றும்; புலியூர் என்றும்; “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம் என்றும் பெயர் பேற்றது. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறுவர்.
ஆகயத்தின் தோற்றத்தில் உருவம், அருவம், அருவுருவமாக இறைவன் அருள் பாலிப்பதால்  இங்கே உருவம், அருவம், அருவுருவம்  என்று மூன்று நிலைகளில் சிவப்பரம்பொருள் காட்சி கொடுப்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு.  
அதாவது ஆனந்தத் தாண்டவக் கோலத்தில், ஆனந்த நடராஜராகவும், சிவகாமி அம்மையாகவும் காட்சி தருவது "உருவநிலை" யை குறிக்கின்றது. சிவலிங்க ரூபத்தில் திருமூலராகவும், ஸ்ரீசக்ரமாக உமையபார்வதியும் காட்சி தருவது "அருவுருவ நிலை" யைக் குறிக்கின்றது. அடுத்து என்னவென்று புரியாத சிதம்பர சக்கரமாக "அருவமாக" தரிசனம் தருவது தான் "சிதம்பர ரகசியம்".
இந்தப் பிரபஞ்சத்தின் இதய பாகம் என வர்ணிக்கப்பெறும் சிதம்பரம் நகரின் மையத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடராஜரின் ஊன்றிய காலுக்குக் கீழேதான் பிரபஞ்சம் தோன்றும்போது ஏற்பட்ட வெற்றிடம் உள்ளதாகவும், இந்த மையப் புள்ளியின் மீது நின்று தான் நடராஜர் இடைவிடாது நாட்டியமாடிக் கொண்டு, ஐந்தொழில்களையும் செய்து வருகின்றார் என்பதுவும் ஐதீகம்.
சிதம்பரம் நடராஜர் கோவில், சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டு வந்துள்ளது.  தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் பரிபாலிக்கப்பெறுகின்றது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் வளாகம் சிதம்பரம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பாகும். சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தலம் தில்லை "திருசித்திரக்கூடம்" என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.
இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் (நடராசர் ஆலயங்கள்) ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கப்பெற்று வந்துள்ளன.
1) சிதம்பரத்தில் நடராசர் ஆலையத்தை "கனகசபை" என்றும்;
2) திருவாலங்காடு சிவாலயத்தை "இரத்தினசபை" என்றும்;
3) மதுரையில் அமைந்துள்ள சிவாலயத்தை "வெள்ளிசபை" என்றும்;
4) திருநெல்வேலி சிவாலயத்தை "தாமிரசபை" என்றும்;
5) திருக்குற்றாலம் சிவாலயத்தை "சித்திரசபை" என்றும் அழைக்கப்பெறுகின்றன..

இவை மட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.
1.  "சிற்சபை" - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூரை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

2.  "கனகசபை" - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது.  இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூரையை வேய்ந்ததாக கூறுவர்.

3.  "ராஜசபை" - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.

4.  "தேவசபை" - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் கூரை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.

5.  "நிருத்தசபை" - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புறத்தில் உள்ளது. இங்குதான் கோபாவேஷம் கொண்டு நடனமாடிய காளியை அடக்க சிவனும் நடனமாடினார் என கூறப்படுகின்றது.

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் சிவலிங்க வடிவில் இல்லாது நடராஜராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் நடராஜர் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் உடுக்கையை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரத்தி அறுநூறு பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் பொருத்தி வேய்ந்திருக்கின்றனர். நாம் தினம், 21 ஆயிரத்தி அறுநூறு தடவைகள் மூச்சு விடுவதாகவும், நம்முடைய உடம்பில், 72 ஆயிரம் நாடி நரம்புகள் இருப்பதையும் குறிக்கவே அப்படிச் அமைதுள்ளதாக வரலாறு கூறுகின்றது.
இவ் ஆலயத்திற்கு செல்ல 5 படிகள் அமைக்கப்பெற்றுள்ளன. "சிவாயநம" என்ற பஞ்சாட்சர மந்திரத்தின் அடிப்படையிலேயே அவை அமைக்கப்பெற்றுள்ளதாக கூறப்பெறுகின்றது. "சிவாயநம" என சிந்தித்து இருந்தால் இறைவனை அடையலாம் என்பதனை இந்த படிகள் குறித்து நிற்கின்றன.
அத்துடன் 64 கலைகள் அடிப்படையில் 64 சாத்து மரங்களையும், நான்கு வேதங்கள், பஞ்சபூதங்கள் அடிப்படையில் தூண்களையும் கொண்டதாக அமைந்துள்ள அற்புதத் தலமாக இக் கோயில் விளங்குகின்றது.
மனித உடம்பில் ஒன்பது வாசல்கள் இருப்பது போல்; இக் கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வாசல்கள் (வழிகள்) உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரங்கள் உள்ளன. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த கோபுரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மன்னனால் கட்டப் பெற்றுள்ளது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.
மேலும் கிழக்குக் கோபுரத்தின் வாசல் வழியாக மாணிக்கவாசகரும்; தெற்குக் கோபுரத்தின் வாசல் வழியாக திருஞானசம்பந்தரும்,  மேற்குக் கோபுரத்தின் வாசல் வழியாக திருநாவுக்கரசரும், வடக்கு கோபுரத்தின் வாசல் வழியாக சுந்தரரும் ஆலயத்திற்கு வருகை தந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வருகை தந்த நாயன்மார்களின் படத்தைக் காணலாம்.
இவ் ஆல்லயத்திலும் மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் அமைந்துள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் இவ் வாலயத்தில் எழுந்தருளி உள்ளனர். இங்கு பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ள விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார்.
கோவிலின் வளாகத்தில் "சிவகங்கை" எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் "பரமாநந்த கூபம்" எனும் பெயரில் கேணியும் உள்ளன. 500 ஆம் ஆண்டளவில் இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்தி இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் தொழுநோய் குணமானதாகவும் வரலாறு கூறுகின்றது.  
சிதம்பர ரகசியம்:
சிதம்பர ரகசியமானது சிதம்பரத்தில் மிக முக்கியமான சிதம்பர சக்கரமாக விளங்குகின்றது. நடராஜர் திருநடனம் புரிகின்ற சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள சுவரில் ஒரு சிறு வாயில் உள்ளது. இவ் வாயில் திரை போட்டு மறைக்கப்பெற்றிருக்கும். இத் திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். இதனை திருவம்பலச் சக்கரம், அன்னாகர்ஷண சக்கரம் என்றும் கூறலாம்.

சுதர்சன சக்கரத்தில் செல்வம் கொழிக்கும் தலமாக திருப்பதி விளங்குவது போல் அன்னாகர்ஷண சக்கரத்தால் அன்னத்தில் செழிக்கிறது சிதம்பரம். அந்தக் காலத்தில் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்று போற்றப்பெற்ற தலமாக விழங்கியது.
நான்கு வேதங்களின் விழுப்பொருளை, அண்ட சராசரங்களின் முழுமுதற்பொருளை குறிப்பது தான் "அருவ நிலை". இங்கே நம் ஊனக் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் தங்க வில்வ மாலைகள் சார்த்தப்பட்டிருக்கும். சர்வம் சிவமயமாகத் திகழும் இறைவனை, அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவனின் அருளை, கருவறைச் சன்னதியின் திரையை விலக்கியதும், தங்க வில்வ மாலையை தரிசிப்பதால் பெற்றுக் கொள்ளலாம்.
உலகப் பற்று, அறியாமை ஆகியவற்றுடன் வாழ்கிறவன், அவற்றிலிருந்து விலகி மெய்ப்பொருளை உணரும் நிலையைப் பெறுவதற்கு மூடிய திரையினுள்ளே இருக்கிற சிவப்பரம்பொருள் அருள்பாலிப்பதாக ஐதீகம்!
இதனை ஆழ்ந்த பக்தியால் உணரமுடியுமே தவிர, எவருக்கும் உணர்த்த முடியாது. இங்கே தினமும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பூஜையில் கலந்து கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் புது சக்தியையும், ஆன்மாவிற்கு முக்தியும் கிடைப்பதாக ஐதீகம்.
சிதம்பரத்தில் இந்த அருவ நிலைதான் மூலஸ்தானம். அதுதான் ரகசிய ஸ்தானமும். திரையை விலக்கியதும், நம் அறியாமை என்கிற இருளை விலக்கி அருள்பாலிகின்றார் இறைவன். அப்போது அஞ்ஞானத்தில் இருக்கிற எமக்கு மெய்ஞ்ஞானத்தை உணர்த்துகிறார்.
மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.
இந்தப் பூமியானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம்,ரசம், நாற்றம் என்ற ஐந்து குணங்களையும்; நீரானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் என்ற நான்கு குணங்களையும்; தீயானது, சப்தம், ஸ்பரிசம், ரூபம் என்ற மூன்று குணங்களையும்; வளியென்று சொல்லப்படும் காற்றானது சப்தம், ஸ்பரிசம் எனப்படும் இரு குணங்களையும்; அண்டவெளியெனப்படும் ஆகாசம் ஆனது சப்தங்களால் மட்டுமே நிறைந்த ஒரே குணம் உடையதாகவும் காணப்படுகின்றன.
இந்த அண்டவெளியின் சப்தம் இந்த ஆடலரசனின் ஆட்டத்தால் மட்டுமே நிறைந்து காணப்படுகின்றது. ஆகவே பஞ்சபூதங்களில் ஆகாயம் எனப்படும் ஆகாயமாகச் சிதம்பரம் க்ஷேத்திரத்தில் நடராஜர் ஆடலரசனாய்க காணப்படுகின்றார்.
இந்த ஆடலரசனின் ஆட்டத்தைக் காண வந்த விஷ்ணுவும் அங்கே நிரந்தரமாய்க் கோயில் கொண்டு தினம், தினம் ஆடலரசனின் ஆட்டத்தைக் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கின்றார்.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் கூறுவாரும் கூறுவர்.
இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று ஆலயங்களும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.
தில்லை சிதம்பரத்தில் திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருப்பெயர் மூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்). அர்த்தசாம வழிபாடு முடிந்தவுடன் எல்லாக் கோவில்களிலுமுள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒடுங்குவதால் இந்த பெயர் அமைந்தது என அறிய முடிகின்றது. திருமூலட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவி திருப்பெயர் உமையம்மை.
மூன்றாம் பிரகாரத்தில் சிவகங்கை திருக்குளத்திற்கு மேற்கே அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி ஒரு தனிக்கோவிலாக பிரகாரத்துடன் அமைந்து விளங்குகிறது. கோவிலின் வடமேற்குத் திசையில் அம்பிகை சிவகாமசுந்தரி கோவிலை ஒட்டியும், வடக்கு கோபுரத்தை ஒட்டியும் முருகன் கோவில் அமைந்திருக்கின்றது.
ஆறுமுகப் பெருமான் வள்ளி தெய்வயானை இருபக்கமும் நிற்க மயிலின் மீது எழுந்தருளி காட்சி தருகிறார். முருகனின் திருஉருவம் ஒரே கல்லினால் அமைந்ததாகும்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரத் திருப்பதிகங்களும், மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக் கோவை யாகிய அருள் பாக்களும், திருமூலர் திருமந்திரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாகவுள்ள ஏனைய திருமுறைகளும் தில்லைச்சிற்றம்பலத்தையே சிவ தலங்களெல்லாவற்றிற்கும் முதன்மையுடையதாகக் கொண்டு "கோயில்", என்னும் பெயராற் சிறப்பித்துப் போற்றியுள்ளன.

ஐந்தொழில்களும் அவற்றின் விளக்கமும்:
சைவநெறி கூறும் ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்பனவாகும். முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தானே இவையனைத்தையும் செய்வதும் உண்டு. பிரம்மா திருமால் உருத்திரனைக் கொண்டு செய்விப்பதும் உண்டு. இவர்கள் தமது புண்ணிய விசேடத்தால் முழுமுதற்பொருளாகிய சிவப்பரம்பொருளிடம் அதிகாரசக்தியை அவருடைய ஏவலால் பெற்று படைத்தல்,காத்தல்,அருளல் ஆகியவற்றை ஆற்றுவர். மறைத்தலை மகேசுவரனும் அருளலை சதாசிவனும் ஆற்றுவர்.
இறைவனாகிய சிவப்பரம்பொருள் எந்தவொரு கருவி காரணங்களும் இன்றி நினைத்த மாத்திரத்தில் ஐந்தொழில்களை மேற்கொள்வார்.
வேதமரபுப்படி படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய மூன்று தொழில்களே பேசப்படும். ஆனால் சிவாகம மரபுப்படி ஐந்தொழில்கள் சொல்லப்படுகின்றன.
காக்கும்போது மறைந்து நிற்றலால் மறைத்தல் காத்தலிலும் உயிர்கள் இளைப்பாறும் பொருட்டு அழித்தல் நடைபெறுவதால் அருளல் அழித்தலிலும் அடங்கும்.
படைத்தல் - உள்ளதைத் தோற்றுவித்தல் (இல்லாததை தோற்றுவித்தல் எனப்பொருள் படமாட்டாது). உதாரணமாக பனிக்கட்டியைத் தோற்றுவித்தனர் என்றால் அங்கு நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளது என்றுதான் பொருள்படும். அதுபோலவே சூக்குமநிலையில் இருந்ததை(மாயையில் இருந்து) தூலநிலைக்கு கொண்டு வருதலே படைத்தல் எனப்படும்.அதாவது காரணநிலை(சூக்குமநிலை)யில் இருந்து காரியநிலைக்கு(தூலநிலைக்கு) கொண்டு வருதல். மாயையில் இருந்து தனு,கரண,புவன போகங்களைப் படைத்தல்.
காத்தல் - தூலநிலைக்கு கொணர்ந்தவற்றை அந்தநிலையில் தொடர்ந்தும் நிலைபெறச்செய்தல். அதாவது தனு,கரண,புவன போகங்களை உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப அனுபவிக்கும் வரை நிலை பெறச்செய்தல்
அழித்தல் - தூலநிலையில் இருந்ந்து சூட்சும்ச் நிலைக்கு வருதல், அழித்தல் என்பது முற்றாக இல்லாமல் செய்தல் என்று பொருள் அன்று.
பிறவிச்சுழற்சியால் உயிர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவகைகளை மீளவும் மாயையில் ஒடுக்குதல்.
மறைத்தல் - பற்றுக் கொண்ட உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக இறைவன் தன்னை மறைத்து உலகத்தையே அவ்வுயிர்கள் காணுமாறு காட்டுதல்.
ஆணவம் காரணமாக இறைவனே உயிர்களுக்கு கன்மம்,மாயை ஆகியவற்றை கூட்டுவித்தான். அதாவது ஆணவ நோய்க்கு மருந்தாக ஏனைய இருமலங்களை கூட்டுவித்தான். மும்மலங்களும் சடப்பொருட்கள். தாமாகத் தொழிற்படாது. இறைவன் அவற்றைத் தொழிற்பட வைத்து அவற்றின் சக்தியை குறைவடையச் செய்கின்றான். சடப்பொருள் தொழிற்பட அதன் சக்தி தேயும் என்பது பௌதீக விஞ்ஞானம்! அதை இங்கு பொருத்தி உணர்க.
அருளல் - பக்குவம் பெற்று தன்னை நோக்கும் உயிர்களுக்கு தன்னைக் காட்டித் தன்னுடைய திருவடியில் சேர்த்தல்.
எனவே படைத்தல், காத்தல்,அழித்தல் என்பன மாயையிலும் மறைத்தல்,அருளல் உயிர்களிடத்திலும் நிகழ்கின்றன.
சிவபெருமான் ஐந்தொழில்களை தனது திருநடனத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றார்.சிவப்பரம்பொருளின் திருநடனத்தை மூன்று வகையாக நோக்கலாம்.
1.ஊன நடனம்
2.ஞான நடனம்
3.ஆனந்த நடனம்

ஊன நடனம்
ஊன நடனத்தினூடாக உயிர்களுக்கு கட்டுண்ட உலகவாழ்வை அளிக்கின்றார். அதாவது உயிர்களுக்கு பிறப்பை வழங்குவது. இவ்நடனத்தின் வழியாக உயிர்கள் உலகச்சிற்றின்பத்தை துய்க்கின்றன. ஊன நடனத்தை குறை கூத்து என்றும் வழங்குவர். குறைவான கால அளவுடைய இன்பங்களை(உலகியல் சிற்றின்பங்கள்) தருவதால் குறைகூத்து என்பர்.
தூல ஐந்தொழில் - உலகத்தை படைத்து காத்து அழித்து மறைத்து அருளுகின்ற ஐந்தொழில்.

சூக்கும ஐந்தொழில்
-  சர்வ சங்கார காலத்தில் உலகம் முழுவதையும் அழித்த பின்னர் மீண்டும் தோற்றுவிக்க ஆற்றும் ஐந்தொழில்.

அதிசூக்கும ஐந்தொழில்
- உயிர்களின் அறிவுக்கு அறிவாய் இருந்து அறிவைத் தோற்றுவித்தல் ஒடுக்குதல் செய்தல். இறைவன் உயிருக்கு உயிராக உள்நின்று உணர்த்துவதனாலேயே உயிருக்கு அறிவு நிகழுகின்றது.

ஞான நடனம்
உயிர்களுக்கு வீட்டைத் தருவது.
ஊன நடனத்தால் உலக இன்பங்களை உயிர்கள் அனுபவிக்கின்றன.படிப்படியாக உலக இன்பம் நிலையற்றது என்பதை உணர்ந்து பக்குவப்பட்டு; சிவபெருமானை அடைய நாடிநிற்கும்போது அவ்வுயிர்களின் மலங்களை நீக்கும்பொருட்டு ஆற்றும் ஐந்தொழில்.
ஞான நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - மாயையை உதறுதல்
காத்தல் - வல்வினையைச் சுடுதல்
அழித்தல் - மலம் சாய அமுக்கல்
மறைத்தல் - உலகத்தை மறைத்தல்
அருளல் - உயிர்களை ஆனந்த ஒளியில் அழுத்துதல்

ஆனந்த நடனம்
ஞான நடனத்தால் பேரின்பத்தை நுகர தலைப்பட்ட சுத்த ஆன்மாக்கள் தொடர்ந்து பேரின்பத்தை நுகரும் பொருட்டு, அவர்களின் அறிவு இச்சை செயல்களைத் தன்னையே பொருளாகப்பற்றி அழுந்தி இன்பத்தை நுகருமாறு செய்தற்கு ஆற்றும் ஐந்தொழில்.
ஆனந்த நடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள்
படைத்தல் - சிவானந்த அனுபவத்தை தோற்றுவித்தல்
காத்தல் - அந்த அனுபவத்தை காத்தல்
அழித்தல் - தற்போதத்தை அழித்தல்
மறைத்தல் - உயிர்,சிவம் இரண்டு என்பதை மறைத்தல்
அருளல் - பேரின்பத்தை அழுந்தி அனுபவித்தல்
சிவபெருமான் ஆடுகின்ற நடனம் ஒன்றுதான். ஆனால் உயிர்களின் பக்குவத்தன்மைக்கு ஏற்ப அது ஊன,ஞான,ஆனந்த நடனமாக அவ்வுயிர்களுக்கு தோன்றுகின்றது.

சுபம்

No comments:

Post a Comment

நன்றி